கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள் | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 14ஆம் வியாழன் 
மு.வா: ஓசேயா: 11: 1-4, 8உ-9
ப.பா: திபா: 80: 1-2. 14-15
ந.வா: மத்தேயு: 10: 7-15

 

நான் பணி செய்த ஒரு பங்கில் இசைக் கருவி மீட்டக்கூடிய ஒரு சிறந்த  கலைஞர் இருந்தார். இசையின் மீதும் தமிழின் மீதும் அதிகமாக ஆர்வம் கொண்டவர். அவர் தான் பெற்ற கொடையை எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்று கருதினார். எனவே அவர் ஆர்வமுள்ள குழந்தைகளை ஒருங்கிணைத்தார். கிட்டத்தட்ட 15க்கு மேற்பட்ட குழந்தைகளை ஊக்கமூட்டினார். அவர்கள் இசை மீட்டவும் பாடல்களைப் பாடவும் உற்சாகமூட்டினார். அவரிடம் இசை பயின்ற அனைத்து  குழந்தைகளும் இன்று  சிறப்பான பங்களிப்பை செலுத்தி வருகின்றனர். 

இன்றைய நற்செய்தி வாசகத்தை ஆழ்ந்து தியானக்கிற பொழுது எனக்கு இந்த நிகழ்வு தான் நினைவுக்கு வந்தது. கடவுள் கொடுத்த கொடையை நாம் மட்டும் வைத்துக் கொள்ளாமல், அதை பிறருக்கு வழங்க வேண்டும் என்பதை ஆண்டவர் இயேசு இந்த நற்செய்தியின் வழியாக நமக்கு சுட்டிக் காட்டுகிறார். "கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்" என்று கூறியுள்ளார்.

பிறருக்கு கொடையாக கொடுப்பதில் தான் நிறைவும் முழுமையும் இருக்கின்றது. கடவுள் இந்த உலகத்தை நமக்கு கொடையாகக் கொடுத்திருக்கிறார். மனிதர்களாகிய நாம் அவருடைய உருவிலும் சாயலிலும் பிறக்கக்கூடிய உயர்ந்த நிலையைக் கொடையாகக் கொடுத்திருக்கிறார். ஆறறிவை நமக்கு கொடுத்து பகுத்தறிவு உள்ளவர்களாக வாழ நமக்கு கொடையைக் கொடுத்திருக்கிறார். இயற்கை வளங்களை நமக்கு கொடையாகக் கொடுத்திருக்கிறார். நல்ல உறவுகளை நமக்கு கொடையாகக் கொடுத்திருக்கிறார். நம் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மையான திறமைகளையும் ஆற்றல்களையும் கொடையாகக் கொடுத்திருக்கிறார்.இவ்வாறாக இறைவனின் கொடையை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இப்படிப்பட்ட கொடை நமக்காக மட்டுமா? அல்லது நம்மோடு வாழக்கூடிய மற்றவர்களுக்குமா?

கடவுள் கொடுத்த கொடைகளை நமக்கு மட்டும் பயன்படுத்தினால் அது முற்றிலும் வீண். ஆனால் கடவுள் கொடுத்த கொடைகளை பிறருக்காகவும் நமக்காகவும் பயன்படுத்தினால் அது இறைவன் பார்வையில் உயர்ந்தது. எந்தத் திறமையும் நம்மிடம் இருந்து வருவது அல்ல; அனைத்தும் கடவுளால் கொடுக்கப்பட்டது. அதுவும் கொடையாக கொடுக்கப்பட்டது. அப்படி கொடையாகப் பெற்றதை நிறைவோடு பிறருக்குக் கொடுக்கும் பொழுது நூறு மடங்காக ஆசீர்வாதத்தைப் பெற முடியும். 

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பல நேரங்களில் பிறருக்குக் கொடுப்பது என்பது நமக்கு இழப்பு என கருதுகிறோம். ஆனால் பிறருக்கு கொடுப்பதில் தான் உண்மையான சுகம் இருக்கிறது. பிறருக்கு நாம் கொடுக்க கொடுக்க நிறைவாகப் பெறுகிறோம். அந்த நிலையை நாம் ஒருபோதும் மறக்க கூடாது. 

ஆசிரியர்கள் தாங்கள் படித்த படிப்பை தங்களுக்குள்ளே வைத்துக் கொண்டால் அவர்களுடைய அறிவு வளராது. மாறாக, அதை பிறருக்காகப் பயன்படுத்தும் பொழுது இன்னும் அறிவார்ந்த நிலையில் வளருவர். அதேபோல அறிவியல் சாதனங்களைக் கண்டுபிடித்த அறிவியல் அறிஞர்கள் தங்களுடைய கண்டுபிடிப்புகளை தங்களுக்கென மட்டும் வைத்துக் கொண்டால், அறிவியல் சாதனைகளை நாம் பெற்றிருக்க முடியாது. எனவே நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கொடுப்போம் அது நமக்கு 100 மடங்காக திருப்பிக் கொடுக்கப்படும். கொடையாக பெற்ற ஒவ்வொன்றையும் கொடையாகவே பிறருக்கு வழங்குவோம். கொடையாகப் பெற்றதை கொடையாகப் பிறருக்குக் கொடுக்கும் பொழுது நாம் மறுக்கிறிஸ்துவாக மாறுகிறோம். அதன் வழியாக ஆண்டவர் இயேசு நமக்கு விட்டுச் சென்ற நற்செய்தி மதிப்பீடுகளுக்கு சான்று பகிர்கிறோம்.

 இறைவேண்டல்
கொடைகளின் தந்தையே இறைவா! நாங்கள் கொடையாகப் பெற்றதை பிறருக்கும் கொடையாக வழங்கிட  நல்ல மனதைத்  தாரும். ஆமென்

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 2 =