குழந்தைகள் கடவுளின் கொடைகள் | குழந்தைஇயேசு பாபு


திருவருகைக் காலம் நான்காம் வியாழன்
I : மலா:  3: 1-4; 4: 5-6
II: திபா 25: 4-5. 8-9. 10,14
III : லூக்: 1: 57-66

ஒரு ஊரில் பத்தாண்டுகளாக ஒரு தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அவர்கள் மிகவும் மன வேதனைக்கு உள்ளானார்கள். பலரால் விமர்சிக்கப்பட்டார்கள். ஆனால் கடவுள் அவர்கள் மீது இரக்கம் கொண்டு அவர்கள் கொண்டிருந்த இறைநம்பிக்கையின் பொருட்டு அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ஆண் குழந்தையை கொடுத்தார். அடுத்த ஆண்டே இரண்டாவது ஆண் குழந்தையும் கொடுத்தார். கடவுளின் ஆசீரை நினைத்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்கள். கடவுளுக்கு நன்றி கூறினார்கள். இறுதியில் அவரின் இரு மகன்களில் ஒருவரை கடவுள் அழைத்தார். அவரும் குருத்துவ பயிற்சிக்கு சென்று குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டார். அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாத பொழுது யாரெல்லாம் ஏளனமாக அவர்களைப் பார்த்தார்களோ, அவர்களே வியக்கும் அளவுக்கு கடவுள் தன்னுடைய கருணைக் கண்ணை இந்த தம்பதியினருக்கு கொடுத்தார். அந்த குருவானவர் வேறு யாருமில்லை  அது நான்தான்.

ஒரு குடும்பத்தில் குழந்தை பிறக்கிறது என்றால் அது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும். அதிலும் குறிப்பாக பாலஸ்தீன நாட்டில் குழந்தை பிறப்பை மிகவும் மகிழ்ச்சியோடும் ஆர்ப்பரிப்போம் கொண்டாடுவார்கள். ஒரு தாய்க்கு குழந்தை பிறக்கிறதென்றால் அனைத்து உறவினர்களும்,  நண்பர்களும் இல்லத்தில் கூடி அகமகிழ்ந்திருப்பர். குழந்தை பிறப்புச் செய்தியை கேள்விப்பட்டவுடன் ஆர்ப்பரித்துக் கொண்டாடுவர்.  அதிலும் கவலைக்கிடமான செய்தி என்னவென்றால் ஆண் குழந்தை என்றால் மகிழ்ச்சியோடு இசை மீட்டி வீட்டின் வாயிலில் அக மகிழ்வர். பெண் குழந்தை என்றால்  துக்க வீட்டை போல மௌனமாக கலைந்து செல்வர்.  இது ஒருவகையான ஆணாதிக்க சிந்தனை. 

பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாத செக்கரியா மற்றும் எலிசபெத்தம்மாளுக்கு ஆண் குழந்தை பிறந்ததால் அனைவரும் அகமகிழ்ந்து கொண்டாடினர். மத்தளம் கொட்டு யாழினை மீட்டி கொண்டாடினர். இது எதை சுட்டிக்காட்டுகிறதென்றால் கடவுள் தங்களுக்கு கொடையாக கொடுத்த குழந்தையை நன்றியுடன் நினைத்துப் பார்க்கும் நிகழ்வைச் சுட்டிக்காட்டுகிறது. 

கடவுள் செக்கரியாவிடம் தன் மகனுக்கு யோவான் எனப் பெயரிட அழைப்பு விடுத்தார். அதை வெளிப்பாட்டைத் தான் எலிசபெத்தம்மாளும் பெற்றிருந்தார். எனவேதான் உறவினர்கள் என்ன பெயர் வைக்கலாம் என வினவியபோது "யோவான்" என  பதில்  கூறினார். அதேபோல செக்கரியாவும் வாய்பேச முடியாத நிலையில் தன் மகனுக்கு யோவான் என பெயரிட எழுதிக் காட்டினார். இறைவனின் வெளிப்பாட்டை இருவருமே பெற்றிருந்தனர். இறைதிருவுளத்தின்படியே  தாங்கள் பெற்றெடுத்த குழந்தைக்கு பெயர் சூட்டினர். யோவான் என்ற பெயருக்கு கடவுளின் கொடை என்று பொருள்.

கடவுளின் கொடையாக யோவான் செக்கரியா மற்றும் எலிசபெத்தம்மாளுக்கு  கொடையாக பிறந்தார். இவ்வுலகத்தில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் கடவுளின் கொடைகளாக கருதப்படுகின்றனர். திருமுழுக்கு யோவான் தான்பெற்ற அழைப்பினை உண்மையுள்ளவராய் இருந்து  இறுதிவரை கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றினார். அவர் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற அவரின் பெற்றோரும் அவரோடு உடனிருந்தனர். அதே போல் இந்த உலகத்தில் பிறக்கின்ற ஒவ்வொருவருமே கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற அழைக்கப்பட்டுள்ளோம். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் கடவுளின் திருவுளப்படி வளர உதவி செய்ய வேண்டும். இவ்வாறாக வாழும் பொழுது அனைவருமே கடவுளின் கொடைகளாக மாறுவோம். கடவுளின் கொடைகளாக மாறத் தேவையான  அருளை வேண்டுவோம். 

 இறைவேண்டல்

வல்லமையுள்ள ஆண்டவரே!  நாங்கள் இந்த   உலகத்தில் குழந்தைகளாக பிறப்பதற்கு  எங்களுக்கு நீர் கொடுத்த வாய்ப்பிற்காக நன்றி செலுத்துகிறோம். நாங்கள் பிறந்தது எங்கள் பெற்றவர்களுக்கு நீர் கொடுத்த கொடையாகும். எனவே திருமுழுக்கு யோவானை போல நாங்களும், செக்கரியா - எலிசபெத் போல எங்கள் பெற்றோரும் உமது திருவுளத்தை எந்நாளும் நிறைவேற்றிட அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

19 + 1 =