குருத்துவம் பலம் வாய்ந்தது | திலக ராஜா | Sunday Reflection


இறைஇயேசுவில் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே

இன்று பாஸ்கா காலம் 4-ம் ஞாயிறை கொண்டாடுகிறோம். இஞ்ஞாயிறு நல்லாயன் ஞாயிறு என்றும், இறையழைத்தல் ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது. எனவே இந்நாளில் குருத்துவம், அதன் பணி பற்றி பார்க்க விரும்புகிறேன்.          

எனது நண்பர் குரு ஒருவரின் முதல் நன்றித் திருப்பலியில், குருத்துவம் பற்றி ஆற்றப்பட்ட மறையுரையில் கூறப்பட்டதாவது அன்புள்ள தந்தையவர்களே! இன்றைய நாள் உங்கள் வாழ்வில் பாடுகளின் ஞாயிறு. குருத்து ஞாயிறு அன்று எவ்வாறு இயேசுவை நோக்கி “ஒசன்னா, ஒசன்னா” என்று கத்திய மக்கள் கூட்டம் பின்னர் அவரை “சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்” என்று கத்தியதோ அதுபோல இன்று பல்வேறு வாழ்த்துப்பாக்கள், புகழ்பாக்களால் புகழும் இவர்கள் நாளை இவனைப் பற்றி தெரியாதா? இவன் பெற்றோரைப் பற்றித் தெரியாதா? என கூறுவார்கள். எனிலும் ஒன்று மட்டும் நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.

“குருத்துவம் பலம் வாய்ந்தது: குருக்கள் பலவீனர்கள்” என்றாh’ அந்த மறையுரையாளர். இதனையே மையமாகக் கொண்டு குருத்துவம் பற்றி இன்றைய ஞாயிறு மறையுரையை அமைக்க விரும்புகிறேன்.

குருத்துவம் பலம் வாய்ந்தது என்றால் அது மேன்மை வாய்ந்தது என்பது பொருள். அப்படிப்பட்ட இந்தக் குருத்துவப் பணிக்கு யாரெல்லாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை புனித பேதுரு தனது முதல் திருமடலில், சின்ன ஆசியாவிலுள்ள மக்களுக்கு எழுதும் போது அதிகாரம் 1 இறைவார்த்தை 9-ல் கூறுகிறார் “நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர், அவரது உரிமைச் சொத்தான மக்கள். எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி” என்கிறார். யார் இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மரபினர் என்றுப் பார்க்கையில் திரு அவைச் சட்டம் எண் 9 அழகாக விளக்குகிறது. அதாவது திருமுழுக்குப் பெற்ற அனைவரும் கிறிஸ்துவின் குருத்துவத்தில் பங்கெடுக்கிறோம் என்கிறது. அதாவது அனைத்து அருளடையாளுக்கும் நுழைவு வாசல் திருமுழுக்கு அருள்டையாளமே. அதாவது திருமுழுக்கு பெற்ற அனைவரும் கிறிஸ்துவின் பொதுக் குருத்துவத்தில் பங்கெடுக்கிறோம். ஆனால் பணிநிலைகளை ஆற்ற கிறிஸ்து ஒரு சிலரைத் தனக்காக ஒதுக்கி வைத்துத் தேர்ந்து கொண்டார். 72 சீடர்களில் எவ்வாறு 12 சீடர்களை தனியாக வைத்திருந்தாரோ அதுபோல, 12 திருத்தூதர்களில் எவ்வாறு 3 திருத்தூதர்களை சில முக்கியமான இடங்களுக்கு அழைத்து சென்றாரோ அதுபோல அவரால் தனக்கென தேர்ந்தெடுக்கப்பட்டோரே இப்பணிக்குருத்துவத்தில் பங்கெடுக்கிறார்கள். இந்தப் பணிக் குருத்துவம் என்பது இயேசுவோடு தொடங்கவில்லை. இயேசு புதிய புரிதலைக் கொடுத்தார். இது தொடக்க காலம் தொட்டே இருப்பதை விவிலியத்தில் காண்கிறோம் இதைத் தான் விடுதலைப் பயண நூலில் ஆரோனின் குருத்துவ நிலைப்பாட்டைப் பார்க்கிறோம். அதற்கு முன்பு தொடக்க நூல் 14: 18 –ல் சாலேம் அரசர் மெல்கிசதேக் அவர் உன்னத கடவுளின் அர்ச்சகராக இருந்து வந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பழைய ஏற்பாட்டில் உள்ள எல்லா நூல்களிலும் நாம் குருத்துவம் பற்றியும் குருக்கள் பற்றியும் வாசிக்கிறோம். ஆனால் இறைவன் குருக்களை எதற்காக ஏற்படுத்தினார் மக்களின் நல வாழ்வுக்கு வழிகாட்டுபவர்களாக, சமூகத்தில் ஒதுக்கப்பட்ட விழிம்பு நிலையில் உள்ளவர்களை தூக்கிவிட, குரல் நெறிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுப்பவர்களாக இருக்கவே கடவுள் குருக்களை ஏற்படுத்தினார். ஆனால்  விளைந்ததோ எதிர்மறை! இதைத்தான் இறைவாக்கினர் எசேக்கியேல் நூல் அதிகாரம் 34: 3- 6ல் நீங்கள் கொழுப்பானதை உண்டு, ஆட்டு மயிரடையை உடுத்தி மந்தையில் சிறப்பானதை அடிக்கிறீர்கள். மந்தையையோ மேய்ப்பதில்லை. நீங்கள் நலிந்தவற்றை திடப்படுத்துவதில்லை. பிணியுற்றவற்றிற்குக் குணமளிக்கவில்லை. காணயமுற்றவற்றிற்குக் கட்டுப்போடவில்லை. வழிதப்பியவற்றை திரும்ப கூட்டி வரவில்லை. காணாமல் போனவற்றை தேடவில்லை. ஆனால் அவற்றை கொடுமையுடனும் வன்முறையுடனும் நடத்துனீர்கள் … அதைத் தேடவோ, கூட்டிச் சேர்க்கவோ எவரும் இலர் என்று வாசிக்கிறோம்.

ஆனால் புதிய ஏற்பாட்டில் இயேசு குருத்துவப் பணியை மீட்டுருவாக்கும் செய்கிறார். உண்மைத் தன்மையை கண்டறிகிறார். குருத்துவம் என்பது உயர் பதவியில் அமர்வதற்கானது அல்ல. மாறாக அது பணி ஆற்றவே என்பதனை இயேசுவின் இறுதி இரவு விருந்தில் அவர் தன் சீடர்களின் பாதங்களை கழுவியதின் வழி நினைவூட்டுகிறார். இதைத்தான் பணிவிடை ஏற்க அல்ல, பணிவிடைப் புரியவே வந்தேன் என்கிறார். இன்றைய நற்செய்தியும் தலைவன் என்பவன் தன் ஆடுகளுக்காகத் தன் உயிரைக் கொடுக்க முன் வர வேண்டும். தலைவர்கள் மக்களை நன்கு அறிந்திருக்க வேண்டும். தனது மந்தையின் வாசனையை உணர்ந்திருக்க வேண்டும். அதாவது மக்களின் வேதனைகள், துயரங்கள் வலிகள் போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும், மக்களை வழிநடத்த பாதையைப் பற்றித் தெளிவாய் அறிந்திருக்க வேண்டும். ஆடுகளுக்கு ஆபத்து வரும்போது தன் உயிரையும் கொடுத்து காக்கவும் முன் வர வேண்டும் என்று கூறுகிறது. ஒரு நல்ல ஆயன் எவ்வாறு இருக்க வேண்டும் என்றுப் பார்க்கையில் எசேக்கியேல் இறைவாக்கினர் புத்தகம் 34:11-16 வரை உள்ள இறைவார்த்தை விரிவாக எடுத்துரைக்கிறது. 

1.            மந்தையில் இருந்து சிதறுண்ட ஆடுகளை ஆயன் தேடிப் போவதுபோல ஆயனும் தேடிச் செல்லவேண்டும்.

   அதாவது சமூகத்தில் எழுந்த பிரச்சினைகளை பொருட்டு பணபலம் கொண்ட நபர்களால் சிதறடிக்கப்பட்ட மக்களைத் தேடிச் செல்வது ஒரு ஆயனின் முதன்மையானப் பணி.

2.            காணாமல் போனதைத் தேடுதல்; அலைந்து திரிவதை திரும்பிக் கொண்டு வருதல்.

    அதாவது அங்கேயா இங்கையா என கொழுப்பெடுத்து அலைகின்ற ஆடுகள் நம் பங்குச் சமூகத்திலும் நாம் காணலாம். அங்கேயா இங்கையா என அலைந்து வாழ்க்கையை மறந்தது திரிபவர்கள்.

3.            காயப்படதற்கு கட்டுப்போடுதல், நலிந்தவற்றை திடப்படுத்துதல்

     இயேசு ஏன் நயின் ஊர் கைம்பெண்னைத்; தேற்றினர்? ஏனெனில் அவள் - விதவை சமூத்தால் வஞ்சிக்கப்பட்டவள். மகனை இழந்ததால் மிகவும் துன்பத்துக்கு ஆளாகிறாள். இவளைப் போன்று நாம் சமூகத்தில் தேவைகள் இருப்பவர்களை அடையாளம் கண்டு செயல்பட ஒவ்வொரு தலைவரும் அழைக்கப்படுகின்றார்.

4.            கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் அழித்தல்: எல்லோரையும் நீதியுடன் நடத்துதல்:

மரியாளின் விடுதலைப் பாடலில் (லூக் : 1:50-53) வலியோரை அரியனையின்று தூக்கி எறிந்துள்ளர். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார் என்றுப் பாடுகிறோம். அதாவது தன்னை முன்னிலைப்படுத்தி நான், எனது குடும்பம் என்று இருந்து பிறரை வளர, வாழ விடாமல் இருக்கும் நீதியற்றவர்களை பிடுங்கி எறிந்து நீதியினை நிலை நிறுத்துபவர்களாக இருக்க வேண்டும்.

 ஒட்டு மொத்தமாக இந்தப் பணிகளைப் பார்;க்கையில் குரு என்பவர் மக்கள் பணியாளர். இந்த சமூகத்தில் நடக்கும் எல்லா வகையானத் தீங்குகளையும் கண்டும் கணாமல் செல்பவர் அல்ல. அவற்றை எதிர்த்து குரல் கொடுப்பவர். புனித ஆயர் ஆஸ்கர் ரொமேரோப் போல ஏழை எளிய மக்களின் நலனுக்கு எதிராக நடக்கும் அனைத்துக்கும் எதிராக குரல் கொடுக்கவும் இன்று அரசுகளால் கொண்டுவரப்படும் எல்லா வகையான தேவையற்ற பொருளாதார கொள்கைகளால் துன்புறுத்தப்படும் மக்களின் சார்பாக குரல் கொடுக்கவும்  அழைக்கப்படுகிறார்கள். இன்று பலரும் இது போல இருந்து வருகின்றார். நாமும் இந்தப் பணியைச் செய்ய அழைக்கப்படுகிறோம்.

இத்தகையப் பணிக்கே இறைவன் நம்மையும் அழைக்கிறார். அதைத் தான் அறுவடையோ மிகுதி;: வேலையாட்களோ குறைவு என்கிறார். இதைத்தான் இந்த இறையழைத்தல் ஞாயிறு நமக்கு சுட்டிக் காட்டுகிறது. எனவே உங்கள் குழந்தைகளுக்கு இதனைச் சொல்லிக் கொடுத்து நம்முடைய பங்கில் இன்னும் இறையழைத்தல் அதிகமாகப் பெருகிட நம் குழந்தைகளை அனுப்பி வைப்போம்.

அருள்பணி.திலக ராஜா சி.

புனித யாகப்பர் ஆலயம், மணப்பாடு,

தூத்துக்குடி

Add new comment

6 + 2 =