Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கபடற்ற மனம் கொண்டவரா நாம்? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம் 21ஆம் செவ்வாய்; I: திருவெளி 21: 9b-14; II : தி.பா: 145: 10-11. 12-13ab. 17-18 ; III: யோவான் 1: 45-51
இன்று திரு அவையோடு இணைந்து புனித பர்த்தலோமேயுவின் விழாவை நாம் கொண்டாடுகிறோம். இவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர். இவர் நத்தனியேல் என்று அழைக்கப்பட்டார். இயேசுவால் கபடற்றவர்,உண்மையான இஸ்ரயேலர் என்ற பாராட்டைப் பெற்றவர்.
இயேசுவின் விண்ணேற்றத்தைக் கண்டவர்களுள் இவரும் ஒருவர். தூய ஆவியாரை பெந்தேகோஸ்து நாளன்று பெற்ற பிறகு நற்செய்தியை அறிவிக்க இந்தியாவிற்கும் ஆர்மேனியாவிற்கும் சென்றார் என திருஅவை பாரம்பரியம் நமக்கு எடுத்துக்கூறுகிறது. மேலும் திருஅவையின் மறைசாட்சியாய் ஆர்மேனியா நாட்டில் தோல் உரிக்கப்பட்டு தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு இறந்தார்.
திருத்தூதரும் மறைசாட்சியுமான புனித பர்த்தலோமேயுவின் விழாவைக் கொண்டாடும் இந்நாளில் இவர் மூலம் இயேசு நமக்கு விடுக்கும் அழைப்பு என்ன? என்பதை நாம் ஆழமாக தியானிக்க அழைக்கப்பட்டுள்ளோம். ஆம் அன்பு நண்பர்களே புனித பர்த்தலோமேயுவைப் போல கபடற்றவர்களாக வாழவே நாம் அழைக்கப்படுகிறோம்.
நத்தனியேல் தன்னிடம் வருவதைப் பார்த்த உடனேயே இயேசு அவரைப் பார்த்து உண்மையான இஸ்ரயேலர் ,கபடற்றவர் என்ற வார்த்தைகளைக் கூறுகிறார் . பொதுவாக எந்த ஒரு மனிதர் வஞ்சகம், ஏமாற்றும் எண்ணம், தவறான மனநிலை, பிறரைக் கெடுக்கும் குணமின்றி கடவுளுக்கும் தனக்கும் பிறருக்கும் உண்மையுள்ளவராக நன்மை செய்பவராக வாழ்கின்றாரோ அவர்தான் கள்ளம் கபடம் இல்லாதவர் என அனைவராலும் அழைக்கப்படுவார். பர்த்தலோமேயு அவ்வாறு இயேசுவாலேயே அழைக்கப்பட்டார் என்றால் அவர் உண்மையிலே நாம் மேற்கூறிய குணநலன்களை தன்னுள்ளே கொண்டிருந்தார் என்பது நமக்குத் தெளிவாக விளங்குகிறது.
இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த யூதர்களில் பலர் ஏழை எளிய மக்களின் மேல் சுமைகளைச் சுமத்தி வெளியே நல்லவர்கள் போலத் திரிந்தனர். அவர்களை எல்லாம் வெளிவேடக்காரர் என்றும் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை என்றும் சாடிய இயேசு பர்த்தலோமேயுவை மனதாரப் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல் தன் சீடாராகவும் தேர்ந்தெடுத்துள்ளது பர்த்தலோமேயுவின் நேர்மையான கள்ளம் கபடமில்லாத குணத்தை எடுத்தியம்புகிறது.
இன்று நாமும் பிறர் நம்மை பாராட்ட வேண்டும் என விரும்புகிறோமல்லவா? அதற்கு ஒரே வழி நம் மனதிலுள்ள வஞ்சகம், ஏமாற்று குணம், நேர்மையற்ற தன்மைகளை அடியோடு அகற்றுவதுதான். அவ்வாறு அகற்றினால் நம் ஆண்டவர் இயேசுவே நம்மை மனமுவந்து பாராட்டுவார். கபடற்றவர்களாய் வாழத் தயாரா?
இறைவேண்டல்
தூய்மையின் உறைவிடமே இறைவா புனித பர்த்தலோமேயுவைப் போன்று கபடற்றவர்களாய் வாழ்ந்து உமக்கு சான்று பகர வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment