கடவுளுக்கு சொந்தமான மக்களாய் வாழ்வோமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


தவக்காலம் -முதல் வாரம் சனி
I: இச:  26: 16-19
II :  திபா 119: 1-2. 4-5. 7-8
III: மத்:   5: 43-48

ஒரு குடும்பத்தில் தாய் தந்தை மகன் மகள் என நால்வர் வசித்து வந்தனர்.  மகன் வளர வளர அதிகக் குறும்புத்தனம் உடையவரனார். இதனாலே தந்தைக்கும் மகனுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும். தன் சொல்பேச்சைக் மகன் கேட்பதே இல்லை என்ற ஒரு உணர்வு தந்தையின் மனதிற்குள்ளே இருந்து கொண்டிருந்தது. ஒருமுறை மகன் ஏதோ ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொண்டான். அதிலிருந்து அவனால் வெளியே வர இயலாத போது, தந்தையை அணுகினான். தந் தை மிகவும் கோபப்பட்டு " நீ என் மகனே இல்லை " என்ற வார்த்தையைக் கூறிவிட்டார். அவ்வார்த்தைகள் மகனின் மனதைப் பாதித்தது. அப்போதுதான் அவன்  மனம் சிந்திக்கத் தொடங்கியது " என் தந்தை சொற்படி நடந்திருந்தால் நான் இப்படி பிரச்சனையில் சிக்கிக்கொண்டிருக்க மாட்டேனே" என்று

தாய்தந்தையருக்கு தங்கள் பிள்ளைகள் தங்களின் சொற்படி நடக்கும் போது கிடைக்கின்ற ஆனந்தம் மிகப்பெரிது. அவ்வாறு நடந்துகொள்ளும் பிள்ளைகளை தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். அவ்வாறே நம் விண்ணகத் தந்தையும்.  அவருடைய சொற்களை,கட்டளைகளை நாம் கடைபிடித்து வாழ்ந்தால் அவர் நம்மை சொந்தம் கொண்டாடுவார். அவருடைய கட்டளைகள் தான் என்ன?
அன்புடையோராய், நேர்மையாளர்களாய் ஆண்டவருக்குப் பயந்தவர்களாய் நாம் வாழவேண்டும் என்பதே அவர் கட்டளை. 

இயேசு இதை இன்றைய நற்செய்தியில் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார். அடுத்திருப்போருக்கு அன்பு காட்டுங்கள் என்கிறார். தேவையில் இருப்போரே நமக்கு அடுத்திருப்பவர்  என்பதை சிலதினங்களுக்கு முன் நாம் சிந்தித்தோம்.தேவையில் இருப்போரில் நமக்குப் பிடிக்காதவ ர்களும் இருக்கலாம். நமக்கு பதிலன்பு செய்ய இயலாதவர்களும்,  நாம் செய்த உதவிக்கு கைமாறு செய்ய இயலாதவர்களும் இருக்கலாம். அனைவரையும் நாம் அன்பு செய்ய வேண்டும். ஏனெனில் விண்ணகத்தந்தை அனைவரையும் அன்பு செய்கிறார். நிறைவுள்ளவராய் இருக்கிறார். அவருக்கு சொந்தமான மக்களாக வாழ விரும்பும் நாமும் அவரைப் போல அன்பில் நிறைவுள்ளவர்களாக கொடுப்பதில் நிறைவுள்ளவர்களாக மன்னிப்பதில் நிறைவுள்ளவர்களாக வாழ முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு நாம் வாழ ஆண்டவருடைய கட்டளைகள் நமக்கு வழிகாட்டுவதோடு அவருக்கு சொந்தமான மக்களாகவும் நம்மை மாற்றுகிறது. எனவே ஆண்டவருடைய கட்டளையின் படி வாழ முயற்சிப்போம்.

 இறைவேண்டல் 
எங்கள் தந்தையே! உமது கட்டளையின் படி வாழ்ந்து உமக்குச் சொந்தமான மக்களாய் மாற வரமருளும் ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

12 + 1 =