Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கடவுளின் முன் எனது செல்வாக்கு உயர வேண்டுமா? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection
இன்றையவாசகங்கள் (09.01.2021)
திருக்காட்சி பெருவிழாக்கு பின் வரும் சனி
I: 1யோவா: 5:14-21
II: திபா: 149: 1-2,3-4,5-6,9
III: யோவா: 3: 22-30
ஒரே வகுப்பைச் சார்ந்த இருமாணவர்கள் ராஜு மற்றும் சேகர். இருவருமே திறமையில் ஒருவருக்கொருவர்,
சளைத்தவர்கள் அல்ல. படிப்பாகட்டும்,
விளையாட்டாகட்டும், கலைநிகழ்ச்சிகளாகட்டும் இருவருமே சரிசமமாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவர். ஆனால் இருவருக்கும் ஒரே ஒரு வித்தியாசம். ராஜு வெற்றியோ தோல்வியோ தன்னடக்கத்தோடு ஏற்றுக்கொள்வான். இதனால் ராஜுவை எல்லாருக்கும் பிடிக்கும். ஆனால் சேகரோ தான் தோற்றுவிடக் கூடாது,தனக்குத்தான் நல்ல பெயர் கிடைக்க வேண்டும்,என்ற எண்ணமுடையனாய் இருந்தான். ஏன் தனக்குப் புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக ராஜுவின் வாய்ப்புக்களைத் தட்டிப்பறிக்கக் கூட தயங்கமாட்டான். பொறாமை எண்ணம் கொண்டிருப்பான்.மற்றவர்களை மிகவும் தாழ்வாக எண்ணுவான். எனவே நிறைய பேர் சேகரை அணுகுவதில்லை.
இந்த இருவரில் யாருடைய மனநிலையை நாம் பிரதிபலிக்கிறோம்? இன்றைய சமூகத்தில் நான் தான் பெரியவன், மற்றவர்கள் எனக்குக் கீழே, எனக்குத்தான் புகழும் செல்வாக்கும் கிடைக்க வேண்டும், எனக்கு பாராட்டும் புகழும் கிடைக்காவிட்டாலும் பறவாயில்லை மற்றவருக்கு கிடைக்கக் கூடாது போன்ற எண்ணங்கள் நம்மில் பலருக்கு எப்போதும் இல்லாவிட்டாலும்,
அவ்வப்போதாவது எழுந்திருக்கலாம்.இதை நாம் நிச்சயமாக மறுக்க இயலாது. இத்தகைய மனநிலையிலிருந்து நாம் மாற இன்றைய நற்செய்தி நமக்கு உதவுகிறது.
திருமுழுக்கு யோவான் தான் மெசியா அல்ல என்பதை நன்கு உணர்ந்திருந்தார். மெசியாவின் வருகைக்காக மக்களை ஆயத்தம் செய்யவே தான் வந்திருப்பதை மிகுந்த தாழ்ச்சியோடு எடுத்துரைத்தவர் அவர். அந்தத் தாழ்ச்சியின் மற்றொரு வெளிப்பாடாக இன்றைய நற்செய்தியில் நாம் காணும் நிகழ்வு அமைந்துள்ளது. "இயேசுவும் உமக்கு நிகராகத் திருமுழுக்குக் கொடுக்கிறார் " என்ற செய்தியைக் கொண்டு வந்த சீடர்களிடம், தன்னுடைய உண்மைநிலையை மீண்டுமாக விளக்கிக் கூறி "அவருடைய செல்வாக்கு பெருக வேண்டும். என்னுடைய செல்வாக்கு குறைய வேண்டும்" என்ற வார்த்தைகளால் தாழ்ச்சியின் உச்ச கட்டத்திற்கே சென்றுவிடுகிறார். தன்னை மணமகனின் தோழருக்கு ஒப்பிட்டு இயேசுவின் மாட்சியில் மகிழ்கிறார். இதனால் அவருடைய செல்வாக்கு கடவுள் முன்னும் ஏன் இத்தனை வருடங்களுக்குப் பின் அவரைப்பற்றி பேசுமளவிற்கு மானிடராகிய நம் அனைவர் முன்னும் இன்றும் பெருகிக்கொண்டிருக்கிறது.
இச்சிந்தனைகளை நம் உள்ளத்தில் இறுத்தி ஆழ்ந்து சிந்திப்போம்.
பிறரின் வளர்ச்சியில் மகிழும் தூய்மையான உள்ளத்தை வளர்த்துக்கொள்ளவே இவ்வாசகம் நம்மை அழைக்கிறது.அவ்வாறு பிறர் வளர்ச்சியில் நாம் மகிழும் போது பொறாமை என்ற தீய குணம் நம்மை விட்டு அகலும். தாழ்ச்சி என்கிற புண்ணியம் நம்மில் வளரும். பிறரைப் பாராட்டி, தட்டிக்கொடுத்து வாழும் போது நமது உள்ளார்ந்த நோக்கமும் தூய்மை அடையும். குறை கூறுகின்ற பழக்கம் நம்மில் இல்லாமலேயே போய்விடும். இவ்வாறாக நம்முடைய செல்வாக்கு கடவுள் முன் உயரும். அதை அவர் மற்றவர் முன்னும் உயர்த்துவார். அப்போது நம்முடைய வாழ்வும் நிச்சயமாக வளர்ச்சி பெறும்.
இவ்வாறாக ஒருவர் மற்றவரை உற்சாகமூட்டி வாழ்வதே தந்தையின் திருஉளம். இன்றைய முதல்வாசகத்தில் நம்முடைய தேவைகள் கடவுளின் திருஉளப்படி இருந்தால் அவர் நிச்சயம் செவிசாய்ப்பார் என்ற வார்த்தைகளை வாசிக்கிறோம். அவருடைய திருஉளப்படி தாழ்ச்சியோடு ஒருவர் மற்றவரை வாழ்த்தி உற்சாகமூட்டி நல்ல செயல்கள் புரிந்து கடவுள் முன்னிலையில் செல்வாக்கு உடையவர்களாய் வாழும் வரம் வேண்டுவோம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! ஒருவர் மற்றவரைச் சார்ந்து வாழும் இவ்வுலகில், திருமுழுக்கு யோவானைப் போல பிறர் வளர்ச்சியில் மகிழ்ச்சி கொள்ளும் தாழ்ச்சி கொண்ட உள்ளத்தவராய் வாழ அருள் தாரும். ஆமென்
Add new comment