Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கடவுளிடமிருந்து தான் ஆற்றலும் அதிகாரமும்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
திருவருகைக் காலத்தின் மூன்றாம் திங்கள் - I. எண் 24:2-7,15-17; II. தி.பா: 25:4-5,6,7,8-9; III. மத்தேயு 21:23-27
சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் கண்ட காணொளி எனக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. அதிலே ஒரு காவல்துறை நண்பர் இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். "ஒரு முக்கியமான அரசியல் தலைவர் வசிக்கின்ற அதே தெருவில் நான் வசிக்கிறேன். நான் வேலைக்குச் செல்லும் போதும் திரும்பும் போதும் அந்த அரசியல் தலைவரின் தந்தை வீட்டு வாயிலில் நிற்பதைக் கண்டால் வாகனத்தை நிறுத்தி, கீழே இறங்கி வணக்கம் சொல்வேன். அன்று என் மகனுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவனையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு அவசரமாகச் சென்றுகொண்டிருந்ததால், அரசியல்வாதியின் தந்தை நிற்பதைக் கவனிக்கவில்லை. அதற்காக அம்மனிதர் என் வாகனத்தை வலுக்கட்டாயமாக நிறுத்தி, ஒரு பெரிய தடியால் என்னை அடித்துக் காயப்படுத்தினார். "அதிகாரத்தில் இருப்பவரின் தந்தைக்கு வணக்கம் சொல்லாமல் எப்படித் திமிராகப் போகிறாய் நீ? உன் வேலையைப் பறித்துவிடுவேன்" என்று தன்னைத் துன்புறுத்தியாகதாகக் கூறினார்.
அதிகாரத்தில் இருப்பவர்களும், அவ்வதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களுடைய உறவினர்களும் நம்மை அடக்கி ஆளுவது வேதனையைத் தருகிறது அல்லவா? அதிகாரம் என்பது என்ன? உலகப் பார்வையில் மற்றவரை தனக்குக் கீழ்படுத்த ஒருவருக்குக் கொடுக்கப்படும் ஆயுதம். அவ்வதிகாரத்தைக் கொண்டவருக்கு மரியாதை கேட்காமலேயே கொடுக்கப்பட வேண்டும். அவரின் வார்த்தைகள் செவிமடுக்கப்பட வேண்டும். அவருடைய திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். கட்டளைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அனைத்திலும் முதலிடமும், முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறாக வரிசைப்படுத்திக் கொண்டே செல்லலாம். ஆனால் கிறிஸ்தவத்தின் பார்வையில் அதிகாரம் என்பது பணிசெய்வதற்காகத் தரப்படும் அனுமதிச்சீட்டு. பொறுப்புடன் நடக்கவும், சேர்ந்து செயல்படவும், சமத்துவம் விதைக்கவும் வழிவகுக்கும் வாயிற்படி. எத்துணை வேறுபாடுகள் உலகிற்கும் கிறிஸ்துவுக்கும்?
இன்றைய நற்செய்தியில் அதிகாரத்தைக் குறித்த கேள்வி ஒன்று எழுவதைக் காணலாம். தமக்குதான் எல்லாம் தெரியும்.தாங்கள் தான் கற்றுத் தேர்ந்தவர்கள். திருச்சட்டங்களைப் போதிக்க அதிகாரமுள்ளவர்கள் நாங்கள் என எண்ணிக்கொண்டிருந்த தலைமைக்குருக்களும் மூப்பர்களும் இயேசு வல்லமையுடன் போதிப்பதையும், அதைக் கேட்க மக்கள் ஆர்வம் காட்டுவதையும் பொறுத்துக்கொள்ள இயலாமல் அவர் மேல் குற்றம் சுமத்தும் நோக்கில் அவருடைய அதிகாரத்தைப் பற்றி கேள்வி எழுப்புகிறார்கள். சாதாரண, எளிமையான, ஏழ்மைப் பிண்ணணியைக் கொண்ட தச்சன் மகனுக்கு நமக்கு நிகரான மரியாதையும் அதிகாரமும் நிச்சயம் கிடைக்கக் கூடாது என்ற மனநிலையை இக்கேள்வி மூலம் அவர்கள் பிரதிபலித்தார்கள். ஆனால் அவர்களின் மனநிலையை முற்றிலும் உய்த்துணர்ந்த இயேசு யோவானப் பற்றிய கேள்வியை எழுப்பி மிகுந்த ஞானத்தோடு செயல்படுவதை நாம் வாசிக்கிறோம்.
உன்னைக் கொல்லவும் எனக்கு அதிகாரம் உண்டு. விடுவிக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு எனக்கூறிய பிலாத்துவுக்கு இயேசு கூறிய பதில் "மேலிருந்து அருளப்படாவிட்டால் உனக்கு என்மீது எந்த அதிகாரமும் இராது" (யோவான் 19:10-11) என்பதே. அதிகாரமும் பதவியும் பொறுப்பும் நமக்கு அளிக்கப்படுவது பணிவிடை புரியவும் நன்மைகள் செய்யவுமே. அத்தகைய பண்பு நலனை நமக்குத் தருவது கடவுளைத் தவிர வேறெவருமில்லை, என்பதே நமக்கு இன்று வழங்கப்படும் செய்தி.நமக்கு அதிகாரங்கள் வழங்கப்படும் போதும், நாம் தலைமைப் பொறுப்புகளை ஏற்கும் போதும் ,கடவுள் நம்மை நம்பி, பணிவிடை புரிவதற்கு நமக்குக் கொடுக்கக் கூடிய வாய்ப்பாக அவற்றை நாம் கருத வேண்டும். அவ்வாறாயின் பிறர் நம்மை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், நம்மைப் பற்றி குற்றம் குறைகளைக் கூறினலும் இயேசுவைப் போலத் துணிச்சலுடனும் ,அதிகாரத்துடனும்,ஞானத்துடனும் நம்மால் நிச்சயம் செயல்பட முடியும்.
இன்றைய முதல்வாசகத்தில் "இஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும்" என கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக இயேசுவின் அதிகாரம் நீதி, சமத்துவம்,பணிவிடை நிறைந்தது. இயேசுவின் வழியில் நமது அதிகாரமும் இவ்வாறு விளங்க வேண்டும். அப்போது தான் ஆண்டவரிடமிருந்து அவ்வதிகாரத்தை நாம் பெற்றோம் என்பது புலப்படும். கிறிஸ்து பிறப்புக்காக நம் வாழ்வைச் செம்மையாக்கும் இவ்வேளையில் இத்தகைய மனநிலைகொண்டு வாழ இறையருள் வேண்டுவோம்.
இறைவேண்டல்
நீதியின் அரசரே இறைவா! உண்மை, அன்பு, நீதி, அமைதியைப் பாதுகாத்து நிலைநிறுத்த நீர் எமக்குத் தந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இறையாட்சியை ஏற்படுத்த உழைக்கும் வரம் தாரும். ஆமென்.
Add new comment