ஒளியின் மக்களா நாம்! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம்-இரண்டாம் புதன்; I: திப: 5:17-26; II: தி.பா: 34: 1-2. 3-4. 5-6. 7-8; III : யோவான் 3:16-21

இன்றைய நற்செய்தி நம்மை ஒளியின் மக்களாகத் திகழ அழைக்கிறது.ஒளி வாழ்வுக்கு இன்றியமையாதது.
ஒளி இருக்கும் இடத்தில் பயமில்லை. ஒளியிருக்கும் இடத்தில் எதுவும் மறைவாயிருக்காது. ஒளி கடவுளின் பிரசன்னத்தை நமக்குக் காட்டுகிறது.ஆனால் இந்த ஒளி புறத்தில் மட்டும் இருந்தால் போதாது.  நமது அகத்திலும் இருக்க வேண்டும்.  

அக ஒளி என்பது என்ன? அக ஒளி என்பது உண்மை. கடவுளிடம் நாம் கொண்டுள்ள நம்பிக்கை. இறையன்பை உணரும் நிலை. இவையே அக ஒளியாகும். அக ஒளி இருப்பவர் மனதில் பொய்மையோ,ஒளிவு மறைவோ இருப்பதில்லை. மாறாக வெளிப்படையான மனநிலை இருக்கும்.மறைத்து வைக்கும் எண்ணம் இருக்காது. தீமையை அதிகமாக விரும்புபவர் ஒளியை விரும்புவதில்லை. தவறுகள் அனைத்துமே இருளில் தான் நடக்கின்றன. தங்கள் தவறுகள் வெளியாகிவிடும் என எண்ணுபவர்களே ஒளியைத் தேட மாட்டார்கள் என நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும் அகஒளியோடு உண்மையான நற்செயல்கள் செய்பவர்கள் கடவுளோடு இணைந்து செய்கிறார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. 

இன்றைய முதல் வாசகத்தில் நாம் காணும் திருத்தூதர்கள் ஒளியின் மக்களாய்த் திகழ்ந்ததைக் காண்கிறோம். அவர்கள் உண்மைக்குச் சான்று பகர்ந்ததால்தான் பயமின்றி போதித்தார்கள். சிறையில் அடைபட்ட போதும் அவர்களிடம் பயமில்லை. ஆண்டவர் அவர்களோடு இணைந்து இருந்தார். அவர்களை விடுவித்தார். அவர்களோடு இணைந்து செயல்பட்டார். எனவே பொய்மைக்கும் தீமைக்கும் துணை சென்றவர்கள் திருத்தூதர்களைக் கண்டு அஞ்சினர்.

கடவுளின் ஒளி நம் அனைவருக்குள்ளும் உள்ளது. தீமையையும் உண்மையற்ற காரியங்களையும் விரும்பி இருளைத் தேடினோம் என்றால் நாம் அகஒளியை இழந்து கடவுளின் உடனிருப்பையும் தொலைத்துவிடுவோம். ஏனென்றால் உலக மாயைகள் ஒளிபோல் தோன்றி நம்மை ஈர்க்கின்றன.எனவே நாம் அகஒளி பெற்று ஒளியின் மக்களாய் வாழ முயற்சிப்போம்.

இறைவேண்டல்

ஒளியாம் இறைவா நாங்கள் அகஒளி பெற்றவர்களாய் உம்மோடு இணைந்து பணிபுரிய ஆற்றல் தாரும். ஆமென்.

Add new comment

19 + 0 =