எளிமையான மனமுள்ளவர்களாய் வாழ்வோமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 15ஆம் புதன்
மு.வா: எசா: 10:5-7,13-16
ப.பா: திபா:93:5-10,14-15
ந.வா: மத்தேயு: 11:25-27

எளிமை என்பதற்கும் ஏழ்மை என்பதற்கும் பல வேற்றுமைகள் உண்டு. பணமும் பட்டமும் பதவியும் கொண்டிருந்தாலும் நாம் எளிமையாக இருக்கலாம். அதே நேரத்தில் ஒன்றும் நம்மிடம் இல்லாவிட்டாலும் பகட்டாக உயர்வாக நம்மைக் காட்டிக்கொள்ளலாம். ஆண்டவர் நம்மிடம் விரும்புவது இந்த எளிமையான உள்ளத்தையே.

இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு "தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன்.ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்" என்று கூறுகிறார். இங்கே அவர் குழந்தைகள் எனக் குறிப்பிடுவது யாரை? எளிய மனம் கொண்ட தன் சீடர்களையும் தன்னை நம்பி தன் வார்த்தைகளைக் கேட்டு பின்பற்றிய ஏழை எளியவரையுமே.

சீடர்களும் இயேசுவைப் பின்தொடர்ந்த எளியவர்களும் ஞானிகளாகவும் அறிஞர்களாகவும் இல்லாவிட்டாலும் இயேசு இறைமகன் இறைவனின் ஆற்றலாய் திகழ்கிறார் என்பதை உணர்ந்தார்கள். அவர்கள் உள்ளத்தால் இறைமகன் இயேசுவைக் கண்டார்கள்.ஆனால் யூதர்களில் பலர் கற்றிருந்தும் மறைநூலில் வல்லுநர்களாய் திகழ்ந்திருந்தும் பணவசதியும் பதவியும் பெற்றிருந்தும் இயேசு கடவுளின் மகன்,கடவுளின் ஆற்றல் நிறைந்தவராய் இருக்கிறார் என்ற உண்மையை உணரத் தவறினர் என்பதையே இயேசு இவ்வார்த்தைகள் மூலம் நமக்கு கற்றுத் தருகின்றார். 

நாம் எத்தகைய மனத்தோராய் இருக்கிறோம்?  நம் அன்றாட வாழ்வில் நடைபெறும் சின்னச் சின்ன நிகழ்வுகளில் இறைவனின் வல்லமையை அறிகிறோமா? இயேசுவின் உடனிருப்பை உணர்கிறோமா? அல்லது கற்றறிந்த யூதர்களைப் போல அனைத்தையும் அலசி ஆராய்ந்து நம்பிக்கையை இழக்கிறோமா? சிந்திப்போம். இயேசு கூறிய குழந்தைகளைப் போல எளிய மனத்தவராய் வாழ முயல்வோம். இயேசுவின் மூலம் தந்தையை அறிந்து அன்பு செய்வோம்.

 இறைவேண்டல் 
அன்பு இறைவா! எல்லாவற்றிலும் உம்மை உணரவும் உம் திருவுளத்தை அறியவும் தேவையான எளிய மனதைத்தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

5 + 6 =