Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உறக்கத்திலும் இறைகுரலைக் கேட்கத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
தவக்காலம் இரண்டாம் சனி
I: சாமு 7:4-5,12-14,16
II : திபா 89:1-2,3-4,6,28
III :உரோ 4:13,16-18,22
IV : மத் 1:16,18-21,24
ஒரு சிறுகுழந்தை எப்போதும் தன் தந்தையோடுதான் படுத்துத் தூங்குவான். அன்று தந்தை வரச் சற்று தாமதமாகிவிட்டது.தாயானவள் மிகுந்த சிரமப்பட்டு குழந்தையை சமாதானப்படுத்தி உறங்கவைத்தார்.வெகுநேரம் கழித்து தான் தந்தை வீட்டிற்கு வந்தார். குழந்தை நன்றாக உறங்குவதைக்கண்ட தந்தை சப்தமாகப் பேசாமல் மிகவும் மென்மையாகப் பேசினார். ஆயினும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த குழந்தை தந்தையின் மெல்லிய குரலைக் கேட்டவுடன் கண்விழித்து ஓடிச்சென்று தந்தையை அணைத்துக்கொண்டான். தந்தைக்கு ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது.
அன்புக்குரியவர்களே இன்று நாம் மரியாவின் கணவர் இயேசுவின் வளர்ப்புத்தந்தை புனித யோசேப்புவின் விழாவைக் கொண்டாடி மகிழ்கிறோம்.
தந்தை யோசேப்பிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் ஏராளம்.
யோசேப்பு இறைவனின் திருஉளத்தை உறக்கத்தில் கூட உணரக்கூடியவராய் இருந்தார். அன்னை மரியை ஏற்றுக்கொள்ள கனவில் தான் அவருக்கு அழைப்பு வந்தது. அதே போல குழந்தையைக் காப்பாற்ற எகிப்துக்குச் செல்லவும் அவர் கனவில் தான் எச்சரிக்கப்பட்டார். இவ்வாறு உறக்கத்திலும் கூட அவரால் கடவுளின் குரலை எவ்வாறு கேட்க முடிந்தது என சிந்தித்தால் அவர் நீதிமானாய் அல்லது இன்றைய மொழிபெயர்ப்பின் படி நேர்மையாளராய் இருந்ததனாலேயே.
நேர்மையாளர் என்று சொன்ன உடன் கட்டளைகளையும் சட்டங்களையும் கடைபிடிப்பவர் என்பது மட்டும் பொருளல்ல. மாறாக கடவுளை அன்பு செய்தலும் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதரை மாண்புடன் நடத்துவதும் நேர்மையாளருக்குரிய தனித்தன்மையாகும்.
புனித யோசேப்பு, பிறரின் மாண்பைக் காப்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறார்.மரியாவோடு மண ஒப்பந்தம் ஆகியிருந்த நிலையில், மரியா கருவுற்றிருந்ததை அறிய வந்தார் யோசேப்பு. எல்லாருக்கும் இயல்பாக எழும் சிந்தனை அவருக்குள்ளும் எழுந்திருக்கும். அவர் மரியாவை ஏற்றுக் கொள்ளத் தயங்கினார்.ஆனால் அவர் மரியாவை மற்றவர் முன் இழிவு படுத்த வரும்பவில்லை. அவருடைய இந்த பண்பு அவர் சிறந்த நேர்மையாளர் என்பதற்குச் சான்று. அவர் நேர்மையாளராய் விளங்கியதால் கனவில் கூட கடவுளின் திருஉளத்தை அறிய இயன்றது. அவரால் உறக்கத்திலும் இறைவனின் குரலைக் கேட்க முடிந்தது.
புனித யோசேப்புவைப் பற்றி அதிகமான விவவிலியக் குறிப்புகள் இல்லை என்றாலும் அவருடைய அமைதியான வாழ்வு, நேர்மையாளராய் வாழ்ந்த பாங்கு, இறைத்திட்டத்தை ஏற்றுக் கொண்ட விதம் அனைத்தையும் நாம் இன்றும் அதிகமாகவே சிந்திக்கிறோம். புனித யோசேப்பு, கல்வி, குடும்பத் தலைவர், உழைப்பாளிகள், கன்னியர்கள்,நல் மரணம் என பலவற்றிற்கும் பாதுகாவலராய்த் திகழ்கிறார்.
அவருடைய விழாவைக் கொண்டாடும் இந்நாளில் அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பண்பு, நேர்மையாளராய் வாழ்ந்து கடவுளின் திருஉளத்தை உறங்கும் போதும் கூட அறியக்கூடிய மனிதர்களாய் வாழ வேண்டும் என்பதே.அத்தோடு பெருங்குற்றமே புரிந்தவர்களாயினும் அவர்களை மற்றவர் முன் அவமானப்படுத்தாமல் அவர்களின் மாண்பைக் காப்பதும் இறைவனின் திருஉளமே. இத்தகைய அருங்குணங்கள் நம்மில் வளர புனித யோசேப்பு வழியாக மன்றாடுவோம்
இறைவேண்டல்
ஆண்டவரே !உமது பிள்ளைகள் நாங்கள் உமது குரலை கேட்டு அதன்படி நடக்க உறங்கும் போது கூட தயாராக இருக்கும் வரம் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment