Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இறை மாட்சியில் அகமகிழ வேண்டுமா! | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection
பாஸ்கா காலம் - ஏழாம் ஞாயிறு
ஆண்டவருடைய விண்ணேற்றம்; I: திப: 1: 1-11; II: தி.பா: 47: 1-2, 5-6, 7-8; III: எபே: 4: 1-13; IV : மாற்: 16: 15-20
நம்முடைய திருஅவையில் எத்தனையோ புனிதர்கள் வாழ்ந்துள்ளனர். புனிதர்கள் அனைவருமே வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. மாறாக நம்மைப் போல சாதாரண மனிதர்களாக வாழ்ந்தவர்கள். ஆனால் இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்காக எல்லாவற்றையும் அர்ப்பணத்தோடு ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தவர்கள். நற்செய்தியை தங்களுடைய சொல்லாலும் செயலாலும் பறைசாற்ற முழு ஈடுபாட்டோடு அனைத்துத் துன்பங்களையும் ஏற்றவர்கள். எனவேதான் அவர்களால் மிகச்சிறந்த நற்செய்திப் பணியைச் செய்ய முடிந்தது. துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல் மனத் துணிவோடும் இறை நம்பிக்கையோடும் தங்கள் வாழ்வில் பயணித்தவர்கள். எனவேதான் கடவுள் துன்பத்தை அடைந்த புனிதர்களுக்கு இறைமாட்சியில் பங்குகொள்ள வாய்ப்பினை வழங்கினார்.
புனித அல்போன்சா அவர்களின் வாழ்வை எடுத்துப் பார்த்தோமென்றால் அவருடைய வாழ்வில் அதிகமான துன்பங்களையும் நோய்களையும் பெற்றார். ஆனால் அவர் மனம் தளராமல் துன்பம் வேண்டாம் என்று சொல்லவில்லை. மாறாகத் துன்பத்தை எதிர்கொள்ளக் கூடிய ஆற்றலை இறைவனிடம் வேண்டினார். எனவே தான் அவரால் இறைமாட்சியைத் தன் வாழ்வில் அனுபவிக்க முடிந்தது.
இயேசு விண்ணேற்ற பெருவிழாவை இன்றைய நாளில் கொண்டாடி மகிழ்கின்றோம். இந்தப் பெருவிழா துன்பத்தின் வழியில்தான் இறைவனின் மாட்சி இருக்கின்றது என்ற ஆழமான சிந்தனையை வழங்குகின்றது. இயேசுவின் துன்பத்தைக் கண்ட சீடர்கள் அச்சமும் கலக்கமும் அடைந்தனர். இயேசுவை பின்பற்றினால் தங்களுக்கும் துன்பம்தான் வரும் என்று யூதர்களுக்கு அஞ்சி நடுங்கினர். ஆனால் இயேசு துன்பத்தை வென்று இறந்து உயிர்த்தெழுந்து இறை மாட்சியை வெளிப்படுத்தினார். இந்த இறைமாட்சியின் உச்சகட்டமாக விண்ணேற்றம் அடைந்தார். இயேசுவின் விண்ணேற்றத்திற்கு அவருடைய சீடர்கள் தான் சாட்சிகள். இயேசுவின் துன்பத்தைக் கண்ட சீடர்கள் இயேசுவின் விண்ணேற்றத்தைக் கண்ணால் கண்டு இறை மாட்சியை அனுபவித்தனர். இயேசுவின் மீது ஆழமாக நம்பிக்கை கொண்டு அவரின் நற்செய்தி மதிப்பீடுகளை உலகெல்லாம் அறிவிக்கும் மிகச்சிறந்த கருவிகளாக மாறினர்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் "உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் " என்ற அன்புக் கட்டளையை விண்ணேற்றத்திற்கு முன்பாக இயேசு தம் அன்புச் சீடர்களுக்கு வழங்கினார். சீடர்களும் இயேசுவின் வார்த்தையின்படி உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றினார்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுகின்றவர்களுக்கு திருமுழுக்கு வழங்கி மீட்பின் கனியைச் சுவைக்க வழிகாட்டினார்கள். இந்த உலகை வாட்டி வதைத்த பல்வேறு நோய்களை இயேசுவின் பெயரால் குணமாக்கினார்கள். இயேசுவின் பெயரால் பேய்களை ஓட்டி அநீதியை விரட்டினார்கள். பல்வேறு அரும் அடையாளங்கள் வழியாக இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்குச் சான்று பகர்ந்தார்கள். இத்தகைய சாட்சியமுள்ள நற்செய்தி பணிக்கு சீடர்களுக்கு ஊக்கம் தந்தது இயேசுவின் விண்ணேற்பு.
இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழா நம்மையும்இயேசுவைப் பின்பற்றிய சீடர்களை போலச் சான்று பகரக்கூடிய வாழ்வு வாழ அழைப்பு விடுக்கின்றது. திருமுழுக்கு பெற்ற நாம் ஒவ்வொருவரும் உலகெங்கும் நற்செய்தி பறைசாற்றவும் நம்பிக்கை கொண்டோருக்கு திருமுழுக்கு வழங்கவும் இயேசுவின் பெயரால் நோய்களையும் பேய்களையும் ஓட்டவும் அழைக்கப்பட்டுள்ளோம். இத்தகைய சான்று பகரக்கூடிய வாழ்வு வாழ நாம் இயேசுவோடு இருக்கவேண்டும். இயேசுவோடு இருக்கும்பொழுது நம் வாழ்வில் துன்பங்களும் சோதனைகளும் வேதனைகளும் வரும். ஆனால் நாம் அவற்றைக் கண்டு துவண்டுவிடாமல் துணிச்சலோடு செயல்பட அழைக்கப்பட்டுள்ளோம். துன்பத்தைக் கண்டு துவண்டுவிடாமல் இயேசு என்னோடு இருக்கிறார் என்று முழுமையாக நம்புகின்ற பொழுது, நிச்சயமாக நாம் இறைமாட்சியை நம் வாழ்வில் அனுபவிக்க முடியும்.
மேலும் இறைமாட்சி அனுபவிக்க இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு நல்ல சிந்தனையைக் கொடுக்கின்றது. "நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள் " என்று திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதப்பட்ட திருமடலில் சுட்டிக்காட்டியுள்ளார். நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் வாழுகின்ற பொழுது நிச்சயமாக நம் வாழ்வில் துன்பங்களும் இடையூறுகளும் வரும். ஆனால் அவற்றை இயேசுவின் மனநிலையோடு ஏற்றுக்கொண்டு நம்முடைய நம்பிக்கை வாழ்வில் நிலைத்திருக்கும் பொழுது நாம் வாழ்வில் இறை மாட்சியை அனுபவிக்க முடியும். எனவே இன்றைய நாளில் இயேசுவின் நற்செய்தி மதிப்பீடுகளின் பொருட்டு நம் அன்றாட வாழ்வில் வருகின்ற துன்பங்களையும் இடையூறுகளையும் அன்போடு ஏற்றுக் கொள்வோம்.அப்பொழுது கடவுள் நம்மோடு இறுதிவரை உடனிருந்து இறை மாட்சியில் பங்குகொள்ள உதவி செய்வார்.
இறைவேண்டல் :
வல்லமையுள்ள ஆண்டவரே! உம் திருமகன் இயேசுகிறிஸ்து விண்ணேற்றம் அடைந்த நாளில் நாங்களும் அவரிடம் எங்கள் உள்ளத்தை ஒப்புக்கொடுத்து வேண்டுகின்றோம். எங்கள் வாழ்வில் துன்பங்கள் வந்தாலும் அவற்றைக் கண்டு துவண்டுவிடாமல் இறுதிவரை உம் திருமகன் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு இறை மாட்சியில் பங்குகொள்ளத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment