இறை திருவுளத்தை நிறைவேற்ற தயாரா?| குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் பத்தாம் புதன்
மு.வா: 1 அர: 18: 20-39
ப.பா: திபா 16: 1-2ய. 4. 5,8.
ந.வா: மத்:  5: 17-19

 "இறை திருவுளத்தை நிறைவேற்ற தயாரா?"

இன்றைய நற்செய்தி வாசகம் இறையன்பிலும் மனிதநேயத்திலும் சிறந்தவர்களாக வாழ அழைப்பு விடுக்கிறது. ''இயேசு, 'திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன்
என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல,
நிறைவேற்றுவதற்கே வந்தேன்' '' (மத்தேயு 5:17) என்று கூறியுள்ளார். பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் இயேசு திரு சட்டத்திற்கு எதிராக விளக்கம் கொடுப்பதாக விமர்சனம் செய்தனர். ஆனால் அவர்களின் கூற்று தவறு என்று இயேசு சுட்டிக்காட்டியுள்ளார்.

பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் திருச்சட்டத்தை அவர்களின் சுயநல வாழ்வுக்கு ஏற்றவாறு மக்களுக்கு விளக்கிக் கூறினார்கள். இறைவனின் திருவுளத்தை தங்களின் மனக்கண்முன் வைக்காமல், மக்களை அடக்கியாளுபவர்களாக இருந்தனர். சமயத்தின் பெயராலும் சட்டத்தின் பெயராலும் மக்களை அடக்கியாண்டனர். இப்படிப்பட்ட கூற்று தவறு என்று ஆண்டவர் இயேசு விமர்சனம் செய்து சரியான பாதையை காட்டினார்.

ஓய்வுநாளில் இயேசு நலம் அளித்தார். மணவிலக்குச் சட்டத்திற்கு மறு விளக்கம் அளித்து, இறைவனின் திருவுளப்படி வாழ வழிகாட்டினார். ஏழைகளுக்கு உதவுவது கடவுள் மீது கொண்ட ஆழ்ந்த அன்பின் அடையாளம் என்று கூறினார். பழிக்குப் பழி என்ற பழைய ஏற்பாட்டு மரபை எதிர்த்தார். இவ்வாறாக, ஆண்டவர் இயேசு செய்த புரட்சி பணிகள் ஏராளம். இத்தகைய கருத்தியல்கள் அவர் திருச்சட்டத்தை மதிக்கவில்லை என்பது அல்ல. திருச்சட்டம் என்பது இறை அன்பையும் மனித நேயத்தையும் உள்ளடக்கியது என்பதை தெளிவாக விளக்கினார். 

ஆனால் பரிசேயர்களும் சதுசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் இயேசுவை தவறாக புரிந்து கொண்டனர். எனவேதான் இயேசுவின் மீது அவர்கள் கோபம் கொண்டு அவரை எதிர்த்தனர். இத்தகைய சூழலில்தான் ''இயேசு, 'திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன்
என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல,
நிறைவேற்றுவதற்கே வந்தேன்' என்றார்'' (மத்தேயு 5:17). 

எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் இறைவார்த்தையின் மீது ஆழமான நம்பிக்கை கொள்வோம். இயேசு மனிதநேயத்தையும் இறையன்பையும் விதைத்ததைப் போல,   நாமும் இறைவனின் வார்த்தையை பிறருக்குப் பகிர்ந்து கொடுப்போம். அப்போது நிச்சயமாக உயிருள்ள இறைவனின் வார்த்தை நமக்கும் பிறருக்கும் மீட்பையும் நிறைவாழ்வையும் தரும். அதற்கு தேவையான அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்வில் இறைவார்த்தையின் ஒளியில் எந்நாளும் வாழ்ந்து இறை திருவுளத்தை நிறைவேற்ற தேவையான அருளைத் தாரும். ஆமென்.

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராஜசிங்கமங்கலம் பங்கு 

Add new comment

3 + 2 =