Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இறைவார்த்தையை நம் வார்த்தைகளில் பிரதிபலிக்கத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection
பொதுக்காலம் 21 ஆம் ஞாயிறு; I: யோசுவா 24: 1-2a, 15-17, 18b; II: தி.பா: 34: 1-2. 15-16. 17-18. 19-20. 21-22; III:எபே 5: 21-32; IV: யோவான் 6:60-69
மாலா என்பவருக்கு மாலதி, லதா என இரண்டு தோழிகள் இருந்தனர். இருவரிடமுமே அவர் நன்றாகப் பேசுவார்,பழகுவார். ஆனால் தனக்கு ஏதாவது துன்பம் வந்தால் இருவருள் லதாவிடம் மட்டுமே சென்று தன் துன்பத்தைப் பகிர்வார். ஒருமுறை லதா, மாலாவிடம் "நீ ஏன் துன்பங்களை மாலதியோடு பகிர்ந்து கொள்ளவதில்லை " எனக்கேட்ட போது மாலா " உன்னுடன் பகிர்ந்து கொள்ளும் போது உன்னுடைய வார்த்தைகளும் ஆலோசனைகளும் எனக்கு ஆறுதலாக இருப்பதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். ஆகவேதான் நான் உன்னிடம் பகிர்ந்து கொள்வதையே விரும்புகிறேன் " என பதிலளித்தார்.
ஆம் அன்புக்குரியவர்களே வார்த்தை என்பது ஒரு பெரிய ஆயுதம்.ஒருவரின் துயர நேரத்தில் கூறப்படும் கனிவான வார்த்தைகள் ஆற்றுப்படுத்தும். குழப்ப நேரத்தில் கூறப்படும் அறிவுரை கலந்த வார்த்தைகள் வழிநடத்தும். கோபமான நேரத்தில் கூறப்படும் சாந்தமான வார்த்தைகள் அமைதியைக் கொணரும். சோர்ந்த நேரத்தில் கூறப்படும் தைரியமான வார்த்தைகள் பலப்படுத்தும்.காயப்பட்டோரின் நெஞ்சிற்கு மருந்தாகவும் அவ்வார்த்தைகள் அமையும். இவ்வாறாக நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.
அதே வேளையில் வார்த்தைகள் மனதைக் குத்திக்கிழிக்கும் வாளாகவும் மாறக்கூடும். இதையே "ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும்." என நம் முன்னோர்கள் கூறுவது வழக்கம்.
மனிதர்களுடைய வார்த்தைகள் சிலசமயம் வெல்வதாகவும் சில சமயம் கொல்வதாகவும் இருக்கலாம். ஆனால் இறைவனின் வார்த்தைகளோ அவ்வாறு அல்ல. அவை எப்போதும் வாழ்வை வழங்குவதாகவே திகழ்கின்றன. சிலசமயங்களில் அவை கொல்வதைப்போலத் தோன்றினாலும், அது உண்மையான மனமாற்றத்திற்கு வித்திட்டு புதுவாழ்வுக்கு வழிகாட்டுவதாகவே அமைகின்றன. இதை உள்ளூர உணர்ந்ததாலேயே பேதுரு "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. " என அறிக்கையிட்டார்.
ஆனால் இறைவார்த்தையின் உண்மைப் பொருளை உணர இயலாதவர்களோ இயேசுவை விட்டு நீங்கிச்சென்றனர். அதனால் இயேசுவின் வார்த்தைகள் வழங்கிய வாழ்வுதரும் ஆவியை அவர்களால் அனுபவிக்க இயலவில்லை.
அன்பு நண்பர்களே இன்றைய இந்நற்செய்தி மூலம் நாம் இறைவார்த்தையை ஆழமாகத் தியானித்து வாழ்வு தரும் ஆவியை ஆழமாக அனுபவிக்க அழைக்கப்பட்டுள்ளோம். நம் வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளிலும்,இன்ப துன்ப வேளையிலும் ஏன் எல்லா நொடிப்பொழுதும் இறைவார்த்தையை நம்பி அதன்படி வாழ்கின்ற போது இயேசு தரும் நிலைவாழ்வை நாம் பெறமுடியும்.
அதேபோல நாம் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் பிறருக்கு வாழ்வளிப்பதாக இன்னும் சிறப்பாகச் சொல்லப்போனால் இயேசுவின் வாழ்வளிக்கும் வார்த்தைகளை ஒத்ததாக இருக்க வேண்டும். நாம் எந்த அளவுக்கு இறைவார்த்தைக்குள் வாழ்கிறோமோ அந்த அளவுக்கு நமது வார்த்தைகளில் இறைவார்த்தை பிரதிபலிக்கும் என்ற ஆழமான உண்மையை உணர்வதே இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் உயரிய அழைப்பு. இவ்வழைப்பை உணர்ந்தவர்களாய் இறைவார்த்தையை ஆழமாகத் தியானிக்கவும், நம் வார்த்தையில் இறைவார்தையை பிரதிபலிக்கவும் நம்மையே தயாரிப்போம். அதற்கான இறையருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்
நிலைவாழ்வு தரும் வார்த்தையாம் இறைவா!
எம் வார்த்தைகள் உம் வார்த்தைகளைப் போல் வாழ்வளிப்பவையாக மாற அருள் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment