இறைவன் மீதுள்ள ஆர்வம் பாவத்தை விலக்கும்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


 பொதுக்காலத்தின் பத்தாம் வெள்ளி
I: 1 அர:19:9,11-16
II: திபா 26:7-9,13-14
III: மத்: 5:27-32

இன்றைய வாசகங்கள் நம்மை பாவமற்ற தூய வாழ்வினை வாழ அழைக்கிறது. பாவமற்ற தூய வாழ்வு வாழ நமக்கு உறுதுணையாக இருப்பது இறைபற்றே.

முதல் வாசகத்தில் மெல்லிய தென்றலில் இறைவனை உணர்ந்த இறைவாக்கினர் எலியா  இஸ்ரயேல் மக்களைப்பற்றி கடவுளிடம் குற்றிச்சாட்டு வைக்கிறார். “படைகளின் கடவுளாகிய ஆண்டவர்மீது நான் பேரார்வம் கொண்டவனாய் இருந்து வருகிறேன். ஆனால் இஸ்ரயேல் மக்கள் உமது உடன்படிக்கையை உதறிவிட்டனர்; உம் பலி பீடங்களைத் தகர்த்து விட்டனர்; உம் இறைவாக்கினரை வாளால் கொன்று விட்டனர். நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்க, என் உயிரையும் பறிக்கத் தேடுகின்றனர்” என்றார்.இவ்வார்த்தைகளை நாம் ஆழமாகச் சிந்திக்கும் போது எலியா இறைவாக்கினர் கடவுளின் மீது அதிக ஆர்வம் கொண்டதால் பாவ வாழ்விலிருந்து தன்னைத் தானே விலக்கிக் கொண்டார்என்பதையும் மக்களோ இறைபற்றின்மையால் அவரை விட்டு விலகினர். உடன்படிக்கையை மீறினர் என்பதையும்  நம்மால் உணரமுடிகிறது.

நற்செய்தி வாசகத்திலும் நம் ஆண்டவர் இயேசு பாவத்தை விலக்கி நம்மைக் காத்துக்கொள்ள அழைக்கிறார். பாவத்தை விலக்குவதற்கு முதலில் அப்பாவத்திற்கு காரணமானவற்றை நாம் விலக்க வேண்டும். அக்காரணத்தையே இயேசு உறுப்புகளோடு ஒப்பிடுகிறார். ஆதாம் ஏவாள் பாவம் செய்யக் காரணமாய் இருந்தது அவர்களுடைய கண்கள். விலக்கப்பட்ட கனி பார்ப்பதற்கு அழகாய் இருந்தது என நாம் வாசிக்கிறோம்.

இன்றைய மாய உலகில் நம் மனங்களை தன்பால் ஈர்க்க பல கண்டுபிடிப்புகள் உள்ளன. நம் புலன்களை அவை கவர்ந்து மனதிற்குள் நுழைகின்றன. அவ்வாறு நுழையும் மாயைகள் கடவுளுக்கான இடத்தை எடுத்துக்கொண்டு நம்மை இறைபற்றில்லாதவர்களாக கடவுள்பால் ஆர்வமில்லாதவர்களாக  மாற்றி பாவத்தில் விழச்செய்கின்றன. எனவே உலக மாயைகள் நம்மை தாக்கா வண்ணம் இறைவன் பால் பேரார்வம் கொண்டவர்களாய் பாவத்தை விலக்க முயலுவோம். பாவத்திற்கான காரணிகளைக் கண்டறிந்து அவற்றை வேரோடு பிடுங்கி ஏறிவோம். அமைதியில் இறைவனை உணர்வோம்.

இறைவேண்டல் 
ஆண்டவரே! உம்மையே பற்றி வாழ்ந்து பாவத்தை விலக்க வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராஜசிங்கமங்கலம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

7 + 5 =