Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இறைசந்நிதியில் என்னை நான் உணர்கிறேனா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
தவக்காலம் மூன்றாம் சனி
I: ஓசேயா 6:1-6
II : திபா 51: 1-2. 16-17. 18-19ab
III: லூக்: 18: 9-14
உண்மையான இறைவேண்டல் என்பது என்ன? கடவுளின் உடனிருப்பில் நம்மை நாமே உணர்வது. நம்முடைய நற்குணங்கள், நாம் மாற்றிக்கொள்ள வேண்டிய குணங்கள், நம் ஆழ்மன எண்ணங்கள், நம் செயல்களுக்கு உந்து சக்தியாய் விளங்கும் நோக்கங்கள் போன்றவற்றை பற்றிய விழிப்புணர்வை பெறுவதற்கு நமக்கு உறுதுணையாக இருப்பது இறைவேண்டல்.இவ்வாறு தியானம் மேற்கொண்டு தன்னையே அறிந்து தங்கள் வாழ்வை இறைவன் விரும்பும் வண்ணம் அமைத்தவர்களையே நாம் ஞானிகள் என்கிறோம். இறைவனின் முன் நின்று கொண்டு நாம் பிறரை குற்றம் சுமத்த நேரிட்டால் அதற்கு பெயர் இறைவேண்டல் அல்ல. நம்முடைய இறைவன் அதை அருவருக்கிறார். இக்கருத்தைத்தான் இன்றைய வாசகங்கள் நமக்கு விளக்குகின்றன.
நற்செய்தி வாசகமாக தரப்பட்டுள்ள உவமை யை எத்தனை
முறை நாம் தியானித்தாலும் நமக்கு புதுப்புது பாடங்களை அது கற்றுத்தந்து கொண்டிருக்கிறது. இருவர் செபிக்கின்றனர். ஒருவர் தான் செய்த நன்மைகளையும் காணிக்கைகளையும் வேண்டல்களையும் இறைவனிடம் கூறிக்கொண்டிருக்கிறார். அதில் கூட தவறில்லை. ஆனால் மற்றவரைக் குறைகூறி, அவரோடு தன்னை ஒப்பிட்டு தன்னை
நேர்மையாளர் என கடவுளிடமே கூறுகிறார். அனைத்தையும் அறிந்த கடவுளுக்கு அம்மனிதரைப் பற்றி தெரியாதா? இச்செயலால் பரிசேயர் தன்னைப்பற்றி அறிந்து கொள்ளவில்லை என்பது புலப்படுகிறது. தன் வாழ்க்கையை மேலோட்டமாக பார்க்கிற எவரும் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் கொணர்வதில்லை என இதனால் நாம் அறிகிறோம்.
வரிதண்டுபவரின் மனநிலையை ஆராயும் போது அவர் கடவுளின் முன் தன்னிலை உணர்ந்தவராய் நிற்கின்றார். தான் தகுதியற்றவன் என அறிக்கையிடுகிறார். மாறாக யாரோடும் தன்னை தாழ்த்தியோ உயர்த்தியோ ஒப்பிடவில்லை. இதனால் கடவுளுக்கு ஏற்புடையவராகிறார்.
ஒவ்வொரு நாளும் திருப்பலியில் நாம் பங்கேற்கும் போது " என் மேல் மனமிரங்கும்" என நாம் செபிக்கிறோம். " நாம் தகுதியற்றவர்கள் " என்பதை அறிக்கையிடுகிறோம். அந்த வார்த்தைகளையெல்லாம் எத்தகைய மனநிலையோடு நாம் சொல்கிறோம் என சிந்திக்க வேண்டும். கோவிலிலே இவ்வாறாக செபித்துவிட்டு வெளியே வந்த உடன் பிறரைக் குறை கூறுவது, மற்றவரோடு நம்மை ஒப்பிட்டுப்பார்ப்பது போன்ற காரியங்களைச் செய்தோமெனில் நம்முடைய வேண்டல் உண்மையல்ல. நாம் நம்மை அறிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.
கோவிலில் மட்டுமல்ல வீடுகளில் நாம் தனியாக இருக்கும் போதும் நம்மைப் பற்றிய ஆய்வை இறைவனின் துணையோடு செய்ய வேண்டும். அப்போது தான் நம்முடைய உண்மைத் தன்மையை நாம் அறியலாம். நம் வாழ்வில் மாற்றங்களையும் ஏற்றங்களையும் காணலாம். எல்லாவற்றிற்கும் மேலாக நம்மை நாமே நிறைகுறைகளோடு ஏற்றுக்கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர்களாய்த் திகழலாம். எனவே இறைவனின் துணையோடு நம்மை நாமே அறிந்து கொள்ள ஆவியின் துணையை வேண்டிடுவோம்.
இறைவேண்டல்
எம்மை உருவாக்கியவரே! எங்களுடைய தனித்தன்மையை நீர் அறிவீர். நாங்கள் உமது திருமுன் நிற்கும்போது பிறரோடு எம்மை ஒப்பிடாமல் எங்களையே நாங்கள் ஆழமாய் அறிந்து உம்மிடம் அதை அறிக்கையிட்டு உமக்கு ஏற்புடையவர்களாய்த் திகழ வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment