Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இயேசுவை நம்பிக்கையோடு அறிவிக்கத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
புனித அந்திரேயா - திருத்தூதர் விழா; I: உரோ: 10: 9-18; II: திபா: 19: 1-2. 3-4; III : மத்: 4: 18-22
திருவருகைக்காலத்தின் முதல் வாரத்தில் நாம் எதிர்நோக்கோடு இறைவனின் வருகைக்காக நம்மையே தயாரித்துக்கொண்டிருக்கும் இத்தருணத்தில்
இன்று நாம் நம் தாய் திருஅவையோடு இணைந்து திருத்தூததரான புனித அந்திரேயாவின் விழாவைக் கொண்டாடி மகிழ்கிறோம். இவர் பேதுருவின் சகோதரராவார். திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்த அவர், இயேசு திருமுழுக்கு யோவானால் திருமுழுக்கு கொடுக்கப்பட்டு இவரே இறைவனின் ஆட்டுக்குட்டி எனச் சுட்டிக்காட்டபட்டதால் அவரைத் தொடரலானார். " ஆண்டவரே நீர் எங்கே தங்கி இருக்கிறீர்? " என தாகத்தோடு இயேசுவைத் தொடர்ந்தார். இயேசுவால் அழைக்கப்பட்ட முதல்லசீடர்களில் அவரும் ஒருவர் என்பதற்கு இன்றைய நற்செய்தி நமக்குச் சான்றாகும்.இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பிட்டுக் கொடுத்தபோது சிறுவனிடம் ஐந்து அப்பங்களும் இரு மீன்களும் இருப்பதை இயேசுவுக்குத் தெரிவித்து அப்புதுமை அரங்கேற உதவியரும் இவரே.
வரலாற்றின் படி சித்தியா என்ற நாட்டுக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றார். பின் கிரீஸ், துருக்கி போன்ற இடங்களிலும் நற்செய்தி அறிவித்தார். தூய ஆவியாரைப் பெற்று வல்லமையோடு விளங்கிய அவர் பார்வையற்றோருக்குப் பார்வை அளித்தார். நோயுற்றோருக்கு நலமளித்தார். பேய்களை ஓட்டினார் . இவ்வாறு தன் போதனையாலும் வாழ்வாலும் இயேசுவை அறித்த அவர், எழுபதாம் நூற்றாண்டில் பத்தராஸ் பட்டிணத்தின் ஆளுநன் ஏஜெடிஸ் என்பவரால் நவம்பர் 30 ஆம் நாளன்று "X" வடிவ சிலுவையில் அறையப்பட்டு மறைசாட்சியாக இறந்தார். இயேசுவைப் போலவே தானும் சிலுவையில் இறக்கப்போவதை எண்ணி மகிழ்வுடன் சிலுவையை அணைத்துக்கொண்டதாக அவருடைய வாழ்க்கை வரலாறு நமக்குக் கூறுகிறது.
இத்தகைய சிறப்பு மிகுந்த இப்புனிதரின் விழா நமக்குச் சொல்வது என்ன? இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு " நான் உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்களாக ஆக்குவேன் " என்று கூறிய வார்த்தைகள் புனித அந்திரேயாவின் வாழ்வில் நிறைவேறியதை நம்மால் உணர முடிகிறது அல்லவா.அவர் எவ்வாறு மனிதர்களைப் பிடித்தார் என நாம் சிந்திக்கும் போது இயேசுவிடம் அவர் கொண்ட ஆழமான நம்பிக்கையை தன் வார்த்தைகளாலும் வாழ்வாக்கையாலும் எடுத்துரைத்ததாலேயே என்பதை நாம் அறிகிறோம்.
இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல் இயேசுவே ஆண்டவர் என அறிக்கையிட்டு மன்றாடுகிறவர்கள் நிச்சயமாக மீட்புப் பெறுவர் என எழுதியுள்ளார். அவ்வார்த்தைகளின் படி புனித அந்திரேயா இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டு, அவரை நம்பியதோடு மட்டுமல்லாமல் அந்நம்பிக்கையை பிறருக்கும் அறிவித்து பலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு மீட்புப் பெற வழிகாட்டினார்.
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாம் வெறும் செப வழிபாடுகளோடும் நற்செய்தியை வாசிப்பதோடும் கேட்பதோடும் நின்று விடாமல் நம்முடைய நம்பிக்கையை நம் வார்த்தையாலும் வாழ்க்கையாலும் அறிவித்து நம்முடைய மீட்புக்கும் பிறருடைய மீட்புக்கும் காரணமாக அமைய வேண்டும் என இப்புனிதர் வழியாக இயேசு நம்மை அழைக்கிறார். சுருக்கமாக நற்செய்தியை அறிவித்து இயேசுவுக்காக மனிதர்களைப் பிடிப்பவர்களாக நாம் வாழ வேண்டும் என்பதே நமக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பு. அவ்வழைப்பை ஏற்று நற்செய்தியை அறிவிக்கப் புறப்படுவோம் புனித அந்திரேயாவைப் போல்.
இறைவேண்டல்
நற்செய்தியின் நாயகனே! புனித அந்திரேயாவைப் போல் நற்செய்தியின் தூதுவர்களாக நம்பிக்கையோடு உம்மை அறிவிக்க வரம் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment