Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இயேசுவே நம் வாழ்வின் சாரம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் பத்தாம் செவ்வாய்
I : 1 அர: 17: 7-16
II : திபா: 4: 1-2. 3-4. 6-7
III : மத்: 5: 13-16
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு "நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது." என்று கூறி நம்முடைய வாழ்வை உப்பிற்கு ஒப்பிடுகிறார். உப்பின் மதிப்பு அதன் சாரம் இருக்கும் வரைதான். சாரமற்று போனாலோ அது குப்பைக்கு சமம். இயேசு இன்னும் ஒருபடி மேலே உயர்ந்து மனிதர்கள் காலால் மிதிபடும் என்று கூறுகிறார்.
நம் வாழ்க்கையும் இப்படித்தான். வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வேண்டும்.சுவாரசியம் வேண்டும். எதை எண்ணினாலும் எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் அது நம் வாழ்வுக்கும் பிறர் வாழ்வுக்கும் சுவையளிப்பதாக விளங்க வேண்டும். அனைவருக்கும் பயனுள்ளதாய் விளங்க வேண்டும். இல்லாவிடில் நாம் பிறர்முன் கேலிப்பொருளாகவும் மதிப்பற்றவர்களாகவும் மாறிவிடும்.
இவ்வாறு நம்மை வாழ்க்கைக்கு சுவையூட்டுபவர்களாகவும் பயனுள்ளவர்களாகவும் மாற்றுவது "இயேசு" வே. இயேசு நம் உள்ளிருந்து செயல்பட்டால் நமது சொல்லிலும் செயலிலும் சாரமிருக்கும். இயேசுவினுடைய குணநலன்களான அன்பு, கருணை, மகிழ்ச்சி ,மன்னிப்பு போன்றவை நம்மில் வெளிப்படும்போது நமது வாழ்வும் பயனுள்ளதாக அமையும்.
இயேசு உப்பைப் போல எளியவர் வாழ்க்கைக்கு தம் அன்பால் சுவையூட்டினார். தன் தொடுதலால் குணமளித்தார். பிறர் வாழ்வுக்காகத் தன்னையே கரைத்தார். அதுபோல நாமும் இயேசுவை நம் சாரமாகக் கொண்டு அவரைப்போல் பிறர் வாழ்வுக்குச் சுவையூட்டுபவர்களாக குணமணிப்பவர்களாய் பிறருக்காகத் தன்னைக் கரைப்பவர்களாய் வாழ முயற்சிப்போம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா!
இயேசுவையே எங்கள் வாழ்வின் சாரமாகக் கொண்டு உலகிற்கு உப்பாய்த் திகழ வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராஜசிங்கமங்கலம் பங்கு
Add new comment