இயேசுவே நமது அடையாளமாகட்டும்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


ஆண்டின் பொதுக்காலத்தின் ஆறாம் வியாழன்
I: யாக்கோபு:  2: 1-9
II :  திபா: 34: 1-2. 3-4. 5-6
III:  மாற்கு: 8: 27-33

ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவது எதார்த்தம். ஆனால் அந்த அடையாளத்தை நாம் மட்டுமே தனியாக ஏற்படுத்தி விட இயலாது. அதற்கு ஒருசிலரின் உதவி நமக்குத் தேவை. அவர்கள் பெற்றோராகவோ, நண்பர்களாகவோ, நம் அயலாராகவோ இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால்  நம்மால் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ பாதிக்கப்பட்டவர்களாகவோ கூட இருக்கலாம். ஆனால் 
ஒருசில சமயங்களில் " இதுதான் என் அடையாளம். இது தான் நான். என்னைப் பற்றி எனக்குத் தெரியும் " என்று நாம் பிறரிடம் கூறுகிறோம். ஒருவே ளை அது ஓரளவு சரியாக இருந்தாலும் பிறர் நம்மை அடையாளப்படுத்தும் விதம் நம் அடையாளத்தை மேலும் சீர்படுத்த நமக்கு உதவுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தம்மைப் பற்றி மக்கள் என்ன கூறுகிறார்கள் என சீடர்களிடம் கேட்கிறார். இறைவாக்கினர் எலியா, திருமுழுக்கு யோவான் என பலராலும் பலவிதமாக அவர் அடையாளப்படுத்தப்படுகிறார். ஆனால் பேதுரு இயேசுவுக்கு வழங்கிய அடையாளம் இயேசுவால் பாராட்டப்படுகிறது.
இதனால் "நீர் மெசியா. இறைமகன் " என்று பேதுரு இயேசுவுக்கு புதியதாக அடையாளம் கொடுக்கவில்லை. மாறாக தான் இறைமகன் என்று உணர்ந்த இயேசு, பேதுரு கொடுத்த அடையாளத்தால் தான் இறைமகன் என்ற அடையாளத்தை மேலும் உலகிற்கு உறுதிப்படுத்துகிறார்.

இன்று நமக்கென நாம் கொண்டிருக்கும் அடையாளத்தை உறுதிப்படுத்துகின்றனரா நம் அயலார்? இல்லையெனில் அவ்வடையாளத்தைக் கொண்டிருக்க நமக்குத் தகுதியில்லை . அல்லது அதை மெய்ப்பிக்க நாம் இன்னும் உழைக்க வேண்டும் என்பதுதான் பொருள். இவ்வாறிருக்க இயேசுவின் சீடர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் இயேசுவையே நம் அடையாளமாகக் கொள்ள வேண்டும். இயேசு எவ்வாறு அன்போடும், பரிவோடும், இரக்கத்தோடும், மன்னிக்கின்ற குணத்தோடும் வாழ்ந்து பாரபட்சமின்றி அனைவரையும் ஏற்றுக்கொண்டாரோ அவ்வாறு நாம் வாழ்ந்தால் இயேசுவே நமது அடையாளமாகிவிடுவார் என்பதில் ஐயமில்லை. 

இக்கருத்தை வலியுறுத்தும் விதமாகவே இன்றைய முதல் வாசகமும் அமைகிறது.  உடையையும் கோலத்தையும் கொண்டு ஒருவரை தரக்குறைவாக மதிப்பிடாமல் தேவையில் இருப்பவர்களுக்கு அன்பாய் பணிவிடை புரிய புனித யாக்கோபு நம்மை அழைக்கிறார். ஏனெனில் நம் ஆண்டவர் இயேசு அவ்வாறே செய்து நமக்கு முன்மாதிரி காட்டியுள்ளார். எனவே கடவுளின் அடையாளத்தை நம்முடைய அடையாளமாகக் கொண்டு இறைவார்த்தையின் படி எந்நாளும் வாழ தேவையான அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா!  எங்களுடைய அன்றாட வாழ்வில் உம்முடைய இறைவார்த்தையின் படி வாழ்ந்து, உம்முடைய அடையாளத்தை எங்களுடைய வாழ்வில் வெளிப்படுத்த அருளைத் தாரும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

5 + 7 =