இயேசுவின் உயிர்ப்பு மனமாற்றத்தின் அடித்தளம்! | குழந்தை இயேசு பாபு | Sunday Reflection


பாஸ்கா காலம் -மூன்றாம் ஞாயிறு; I: திப: 3:13-15,17-19; II: தி.பா: 4:1,6,8; III: 1 யோவான் 1:2-5; IV : லூக்கா 24:35-48

மனமாற்றம் என்பது ஏதோ தவக்காலத்திலும் திருவருகைக் காலத்திலும் மட்டும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று அல்ல. மனிதர்களாகிய நாம் அனைவருமே பலவீனர்கள் தான். எந்தத் தருணத்திலும் தவறி விழக்கூடியவர்கள். ஆயினும் நாம் மனம் மாறி எழுந்து நடக்க முயலும் போதெல்லாம் ஆண்டவர் நம்மை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார் என்பது நாம் மறுக்க முடியாத உண்மை. இயேசுவின் உயிர்ப்பும் இதையே நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

மனமாற்றம் என்பது தனிமனித வாழ்க்கையை மட்டுமல்ல சமூக வாழ்வையும் சீர்படுத்த உதவுவது. தவறு செய்வதிலிருந்து நம் மனநிலையை மாற்றுவது மட்டும் மனமாற்றமல்ல. நம்முடைய பார்வை,வார்த்தை, நம்பிக்கை,செயல்பாடு,பிறர்பற்றிய எண்ணம், முயற்சி என நம் வாழ்வின் ஒவ்வொரு காரியத்தையும் செம்மைப்படுத்துவதே உண்மையான மனமாற்றம். 

ஒருவீட்டில் தாய் தந்தையுடன் இருமகன்கள் வாழ்ந்து வந்தனர். இருவரிடமுமே தாயானவள் மிகுந்த அன்பு வைத்திருந்தார். ஆனால் இளையமகன் சற்று சேட்டைக்காரனாக இருந்ததால் அம்மாவிடம் ஏச்சுகளும் அடியும் வாங்குவான். இதனால் அம்மாவுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்ற ஒரு மனநிலை அவனுள்ளே இருந்தது. இதனால் மற்ற நேரங்களில் அம்மா எவ்வளவு பாசமாக இருந்தாலும் அவனால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அம்மாவின் அன்பு மேல் நம்பிக்கை இல்லை. இப்படி இருக்க ஒருநாள் அண்டை வீட்டிலுள்ளவர் ஒருவர் இளையமகனைப்
பற்றி இந்த அம்மாவிடம் பல குற்றச்சாட்டுக்களை வைத்தார். இந்த அம்மாவிற்கு சற்று வருத்தமாக இருந்தாலும் தன் மகனை சிறிதும் விட்டுக் கொடுக்காமல் பேசினார். அப்போது அதை மறைவாக இருந்து கேட்டுக்
கொண்டிருந்த இளைய மகன் தன் தாயை இதுநாள் வரை புரிந்து கொள்ளாத நிலையை உணர்ந்தார். தன்னுடைய நல்வாழ்விற்காகத்தான் அம்மா தன்னைக் கண்டித்ததை உணர்ந்த அப்பையன் மனம்மாறி தன் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டான்.

இன்றைய மூன்று வாசகங்களும் மனமாற்றத்தைக் குறித்து கூறுகின்றன.முதல்வாசகத்தில் பேதுரு யூதர்களிடம் இயேசுதான் வரவிருந்த மெசியா என அறியாமல் இயேசுவை கொலைசெய்தாலும் மனம் மாறினால் நிச்சயமாக மன்னிப்பும் புதுவாழ்வும் உண்டு எனக் கூறுவதை நாம் வாசிக்கிறோம்.

இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யோவான் பாவ வாழ்வை விட்டு விலக நம்மை வலியுறுத்துகிறார். அவ்வாறே நாம் பாவம் செய்தாலும் கூட மனம்மாறும்போது இயேசு தந்தையாம் கடவுளிடம் நமக்காகப் பரிந்து பேசுவார். அவர் நம் பாவங்களுக்கெல்லாம் கழுவாயாக இறந்தார் என்று சொல்லி நம்மிடம் மனமாற்ற வாழ்வைத் தூண்டுகிறார்.

நற்செய்தி வாசகத்தில் இயேசு உயிர்த்தெழுந்ததை நம்ப இயலாமல் இருந்த சீடர்களுக்குத் தன்னையே வெளிப்படுத்தி அவர்களுடைய நம்பிக்கையை ஆழப்படுத்தினார். பயம், நம்பிக்கையின்மை, மனச்சோர்வு,சோகம் ஆகியவற்றை நீக்கி புது உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அமைதியையும் அளித்தார்.  அதுவும் மனமாற்ற வாழ்வே.

எனவே நாமும் நம்முடைய பழைய பாவ, நம்பிக்கையில்லாத,சோர்வான மனநிலைகளை மாற்றி மனமாற்றத்துடன் புதிய வாழ்வை வாழ உயிர்த்தத இயேசுவிடம் அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்

அன்பு இறைவா நாங்கள் மனமாற்றத்தால் புதுவாழ்வு பெற்று நம்பிக்கையுடனும் அமைதியுடனும் வாழ வரம் தாரும். ஆமென்.

 

அருள்பணி. குழந்தை இயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

 

 

Add new comment

4 + 5 =