இயேசுவின் உடனிருப்பை உணர்கிறர்வகளா நாம்? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம் 22 ஆம்   வெள்ளி; I: கொலோ 1:15-20; II : தி.பா: 99:2-5; III: லூக்: 5:33-39

விடுமுறை முடிந்து மீண்டும் வெளிநாட்டிற்குச் செல்லும் தன் கணவனுக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் மனைவி தயார்படுத்திக் கொண்டிருந்தாள். அப்போது அவருடைய தோழி அவர் வீட்டுக்கு  வந்தார். ஆனால் அவரோ மகிழ்வோடு தன் வேலைகளையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார். இதைக் கண்ட தோழி " உன் கணவர் வெளிநாட்டிற்குச் செல்கிறாரே.  உனக்கு வருத்தமாய் இல்லையா? " எனக் கேட்டார். அதற்கு "என் கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றாலும் அவருடைய அன்பும் அக்கறையும் என்னோடு என்றும் இருப்பதால் அவருடைய உடனிருப்பை உணர்கிறேன் " என பதிலளித்தாராம். 

இன்றைய நற்செய்தியில் பரிசேயர்கள் இயேசுவிடம் வந்து மற்ற குருக்களின் சீடர்கள் நோன்பு இருக்கும் போது இயேசுவின் சீடர்கள் மட்டும் நோன்பு இருந்து செபிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். அதற்கு இயேசு மணமகன் தங்களோடு இருக்கும் போது மணவிருந்தினர்கள் நோன்பு இருக்க அவசியமில்லை.மணமகன்  பிரிய வேண்டிய காலத்தில் நோன்பு இருப்பார்கள் என பதிலளித்தார். இறையியலின் படி இயேசு தன்னுடைய பாடுகள் இறப்பு இவற்றைக் குறித்து பேசி இருந்தாலும், நம்முடைய வாழ்க்கைக்கு அவர் கூறும் செய்தி என்ன என்பதை நாம் சற்று ஆழமாகச் சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம்.

இயேசு நம்மோடு இருக்கிறார் என்பது நமது ஆழமான நம்பிக்கை. நம் வாழ்வில் ஏராளமான தருணங்களில் இயேசுவின் உடனிருப்பை நாம் உணர்கிறோம். ஆயினும் ஒருசில தருணங்களில் இயேசு நம்மோடு இல்லை என்ற உணர்வு ஏற்படுவதுண்டு.  நமது துன்பங்கள் ,நோய் நொடிகள், வேண்டுதல் கேட்கப்படாத நேரங்கள் போன்றவை அத்தருணங்களாக அமையலாம். மேலும் நம்முடைய தவறுதல்கள் ,பாவ வீழ்ச்சிகள் கூட இயேசுவை நம்மைவிட்டுப் பிரிக்கலாம்.  அச்சமயங்களில் நாம் நோன்பு இருத்தல் அவசியமாகிறது.

ஆம் இறைவேண்டல், மனமாற்றம் போன்ற நோன்புகளை நாம் மேற்கொள்ளும் போது நம்பிக்கை இன்னும் அதிகமாகும் போது மீண்டுமாக நாம் இயேசுவின் உடனிருப்பை அனுபவித்து மகிழ முடியும். எனவே இயேசுவின் உடனிருப்பை ஒவ்வொரு நொடிப்பொழுதும் அனுபவிக்கக் கற்றுக்கொள்வோம். அவர் நம்மோடு இல்லாததை நாம் உணர்ந்தால் அதை உணர்வற்கான வழிகளைத் தேடுவோம்.

இறைவேண்டல் 

அன்பு இயேசுவே உமது உடனிருப்பை நாங்கள் உணர்ந்து வாழ வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

11 + 6 =