ஆண்டவர் காட்டும் வழிகளில் நடக்கத் தயாரா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


ஆண்டின் பொதுக்காலத்தின் நான்காம் வியாழன்
I:  1 அரசர் 2: 1-4, 10-12
II :  1 குறி 29: 10b. 11ab. 11cd-12a. 12
III: மாற்:  6: 7-13

ஒரு இளம்பெண் தன்னுடைய நண்பர்களோடு உல்லாசமாக பயணம் மேற்கொள்ளத் தயாரானார். அவருடைய தந்தை தன் மகளுக்கு வழியில்  உதவியாக இருக்கும் என எண்ணிய பொருட்களை ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்து ஒருசில அறிவுரைகளையும் கூறினார். ஆனால் அந்த இளம்பெண் தந்தையின் அறிவுரைகளை மதிக்காமல், தன்னை இன்னும் சிறுபிள்ளையாகக் கருதவேண்டாம் என்று கூறி அவரை உதாசீனப்படுத்தியதோடு, அவர் கொடுத்த பொருட்களையும் எடுத்துச் செல்லவில்லை. இறுதியில் வழியில் அவர் வாகனமும் பழுதடைந்தது.யாரிடமும் உதவி கேட்கவும் முடியாமல் இருட்டிலே சிக்கிக் கொண்டனர். அப்போதுதான் தந்தையின் பேச்சைக் கேட்டிருக்கலாமே என்ற எண்ணம் அவர் மனதை உறுத்தியது.

அன்புக்குரியவர்களே வழிகாட்டுதல் என்பது அனைவர் வாழ்விலும் மிக மிக முக்கியமானது. சிலவேளைகளில் நம்முடைய வாழ்வை நாமாக முன்னே கொண்டு செல்ல இயலாது. தடங்கலின் காலங்களில் நம்மை வழிநடத்தவும் நம்மோடு நடக்கவும் நமக்கு யாராவது நிச்சயம் தேவைப்படுவர். பல சமயங்களில் நம்மோடு அத்தகைய ஒருவர் இருந்த போதும் நாம் அவர்களைப் புறக்கணிப்பதால் வழியில் தடுமாறி வீழ்ந்திருக்கிறோம்.  ஏனெனில்  மூத்தோர்களின் வழிகாட்டுதலும் அறிவுரைகளும் இறைவனின் வழிகாட்டுதல் என உணரத் தவறுகிறோம் நாம்.

இன்றைய வாசகங்கள் நம்மை ஆண்டவரின் வழிகாட்டுதலில் வாழ அழைக்கின்றன. முதல் வாசகத்தில் தாவீது தன் வாழ்நாளின் இறுதி காலத்தில் தன் மகன் சாலமோனுக்கு அறிவுரை வழங்குவதைப் பற்றி வாசிக்கிறோம்.அவ்வறிவுரையில் தாவீது தன் மகன் சாலமோனிடம் கூறுவதெல்லாம் "ஆண்டவர் காட்டும் வழியில் நட. அவருடைய கட்டளைகளையும் நியமங்களையும் கடைபிடி. அப்போது தான் உனது ஆட்சி நிலைக்கும்" என்பதே. இவ்வார்த்தைகள் தாவீதின் சொந்த அனுபவத்திலிருந்து உதித்தவை. ஏனெனில் தாவீது இறைவனின் வழியில் சென்றதால்தான் நாற்பது ஆண்டுகளாய் அவரால் இஸ்ரயேலை ஆள முடிந்தது. 

அவ்வாறே இன்றைய நற்செய்தி வாசகத்திலும் இயேசு சீடர்களைப் பணிக்கு அனுப்பும் போது தன் வழிகாட்டுதல்களையும் அறிவுரையையும் வழங்குகிறார். பணிக்குச் செல்ல தேவையான பொருட்கள் எவை, மக்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என சின்னச் சின்ன விடயங்களைக் கூட கற்றுத்தருகிறார். அதன்படி பணிசெய்த சீடர்களும் சிறப்பாகப் பணிபுரிந்தனர். தீய ஆவிகளை விரட்டினர் என்று நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம்.

இச்சிந்தனைகளை நாம் மனதில் கொண்டு நம்முடைய வாழ்வை அலசிப் பார்ப்போம். நம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஆன்மீக வழிகாட்டிகள் ஆகியோர் கடவுளின் பிரதிநிதிகளாய் நம்மை வழிநடத்திய காலங்களில் அவர்களின் குரலைக் கேட்டு நாம் நடந்திருக்கிறோமா?  இல்லையென்றால் இனியாவது நம்மை மாற்றிக்கொள்ள முயலுவோம். அவ்வாறு நாம் மாறினால் நம் குடும்பங்களிலும் பணித்தளங்களிலும் நம்மால் பிறருக்கு வழிகாட்ட இயலும். எல்லாவற்றையும் விட மேலாக ஆண்டவர் தம் வார்த்தைகளின் வழியாகவும், நம் மனச்சான்றின் வழியாகவும் நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கிறார். இறைவேண்டலிலும் வாழ்வின் அனுபவங்களிலும் அவருடைய வழிகாட்டுதலை உணர்ந்து செயல்படுவோம். 

 இறைவேண்டல் 

வழிகாட்டும் இறைவா!  உம் வழிகாட்டுதலை உணர்ந்தவர்ககாய் எம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர எமக்கருள் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 12 =