80 வயதான அருள் சகோதரி உருவாக்கும் சிலுவைப்பாதை


கொலோசெயம் திடலில் நடைபெற்ற புனித வெள்ளி சிலுவைப்பாதை - கோப்புப் படம் (ANSA)

ஏப்ரல் 19, புனித வெள்ளியன்று உரோம் நகரின் கொலோசெயம் திடலில் நடைபெறவிருக்கும் சிலுவைப்பாதை சிந்தனைகளை உருவாக்கும் பொறுப்பை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொன்சொலாத்தா (Consolata) துறவு சபையைச் சேர்ந்த அருள் சகோதரி யூஜேனியா பொனெத்தி (Eugenia Bonetti) அவர்களிடம் ஒப்படைத்துள்ளார் என்று வத்திக்கான் செய்தித்துறை தலைவர், அலெஸ்சாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள் அறிவித்துள்ளார்.

மனித வர்த்தகத்தினால் கொடுமைகளுக்கு உள்ளாகும் மக்களின் வேதனைகள், இவ்வாண்டின் சிலுவைப்பாதை முயற்சியின் மையப்பொருளாக அமையும் என்று ஜிசோத்தி அவர்கள் தெரிவித்தார்.

80 வயதான அருள் சகோதரி பொனெத்தி அவர்கள், இத்தாலியிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் பணியாற்றும் அருள் சகோதரிகளிடம், மனித வர்த்தகத்தின் கொடுமைகளை பல ஆண்டுகளாக உணர்த்தி வருகிறார் என்றும், இதன் விளைவாக, அவர், 'இனி ஒருபோதும் அடிமைகள் கிடையாது' என்று பொருள்படும் “Slaves no More” என்ற கழகத்தை உருவாக்கினார் என்றும் CNS கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மனித வர்த்தகம் குறித்த விழிப்புணர்வை கத்தோலிக்கத் திருஅவையில் உருவாக்க, இந்தக் கொடுமையை ஒழிக்கும் செப நாளை உலகெங்கும் அறிவிக்க, அருள்சகோதரி பொனெத்தி அவர்கள், 2013ம் ஆண்டு திருத்தந்தையைக் கேட்டுக்கொண்டார்.

அவரது விண்ணப்பத்தின் அடிப்படையிலும், அவர் வழங்கிய ஆலோசனையின்படியும், மனித வர்க்கத்தால் துன்புற்ற புனித ஜோசப்பின் பக்கித்தா அவர்களின் திருநாளான பிப்ரவரி 8ம் தேதி, மனித வர்த்தகத்திற்கு எதிராக செபிக்கும் உலக நாள் என்று, 2015ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அறிவிக்கப்பட்டது.

உரோம் நகரில், இரவில், சாலைகளில், விபச்சாரத்திற்கென கட்டாயப்படுத்தப்படும் இளம் பெண்களை, கொன்சொலாத்தா துறவுச் சபையைச் சேர்ந்த அருள் சகோதரிகள் மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வை வழங்கி வருகின்றனர் என்று, CNS கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

Add new comment

4 + 16 =