பூச்சிகள் அழிந்தால், மனித இனமும் அழியும்


மகரந்த சேர்க்கையில் உதவும் பூச்சி (AFP or licensors)

உலகெங்கும் பூச்சி இனம் மெல்ல அழிந்துகொண்டிருக்கிறது என்கிறது, ஓர் ஆய்வு. உலகில் உள்ள பூச்சி இனங்களில் 40 விழுக்காடு, அதிர்ச்சியூட்டும் வழியில் குறைந்து வருவதாகவும், நம் அன்றாட வாழ்வில் கண்ட தேனீக்கள், எறும்புகள், மற்றும் வண்டுகள், பாலூட்டிகளைவிட 8 மடங்கு வேகத்தில் அழிந்து வருவதாகவும் கூறுகிறது, இந்த ஆய்வு. ஆனால் அதே நேரம், ஈ, மற்றும், கரப்பான் பூச்சிகள் பெருகி வருவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. பூச்சிகளின் அழிவுக்கு, விவசாயமும் ஒரு காரணம் என இந்த ஆய்வின் முடிவு கூறுவதை நம்புவதற்கு கடினமாக உள்ளது.

இந்த ஆய்வை முன்னின்று நடத்திய சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஃப்ரான்சிஸ்கோ அவர்கள், "வேதியியல் மருந்துகளுடன் கூடிய தீவிரமான விவசாயம், நகர மயமாக்கல், காடுகள் அழிக்கப்படுதல், ஆகியவற்றால், பூச்சிகளின் வாழ்விடங்கள் அழிந்துவிட்டன. இவைதான், பூச்சிகளின் அழிவுக்கு முக்கிய காரணம்" என்கிறார்.

இரண்டாவது காரணம், "பூச்சிக் கொல்லிகளை அதிகளவில் பயன்படுத்தும்போது, தீமை செய்யும் பூச்சிகளுடன் இணைந்து, அதிகளவில் நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்தன" என உரைக்கிறார் அவர்.

மனித இனம் உள்ளிட்ட பிற உயிரிகளின் வாழ்வுக்கு பூச்சிகள் இருப்பது மிக முக்கியம். உணவு சங்கிலியிலும், மகரந்த சேர்க்கையிலும் பூச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பறவைகள், வௌவால், மற்றும் சில பாலூட்டிகளுக்கு, பூச்சிகள்தான் உணவு. உலகெங்கும் உள்ள 75 பயிர் வகைகளின் மகரந்த சேர்க்கைக்கு, பூச்சி இனம் இன்றியமையாதது. மண்ணை வளமாக்க, பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் உயிரிகளை கட்டுப்படுத்த, பூச்சி இனங்கள் தேவை.

இயற்கை விவசாயமும், இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்வும் மட்டுமே நம்மை வாழ வைக்கும். (வத்திக்கான் செய்தி)

Add new comment

2 + 0 =