Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
400 மொழிகளில் கலக்கும் இராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல் அமீது
இராமநாதபுரம் மாவட்டம், அபிராமத்தை சேர்ந்தவர், அப்துல் அமீது, வயது: 39. தற்போது, சென்னையில் வசிக்கும் இவர், 'ஆன்லைன்' மூலம், மொழிகள் குறித்த வகுப்புகள் நடத்தி வருகிறார். இவரது, 13 வயது மகன், மஹ்மூத் அக்ரம், பல்வேறு உலக மொழிகளில் பேசி, அசத்தி வருகிறான்.
அக்ரமின் மொழி அறிவு திறன் அறிந்து, ஐரோப்பியா நாடான, ஆஸ்திரியாவின், வியன்னாவில் உள்ள, சர்வதேச பள்ளியில், படிக்க அழைப்பு வந்துள்ளது. படிப்புக்கான செலவை, பள்ளி நிர்வாகமே ஏற்பதாக தெரிவித்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்ய, அவனது பெற்றோர் முயன்று வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஹீப்ரு, அரபிக், ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலி, பிரெஞ்சு, ஆர்மீனியன், போர்ச்சுகீசு உட்பட, 46 மொழிகளில் சர்வ சாதாரணமாக பேசுகிறான். மேலும், 400 உலக மொழிகளை தட்டச்சு செய்வதுடன், அவற்றை எழுதவும், படிக்கவும் செய்கிறான்.
இவனது திறமையை அறிந்து, 2014ல், பஞ்சாப் மாநிலத்தில் நடந்த, சிறுவர்களுக்கான தனித்திறன் போட்டியில், 'யூனிக் வேர்ல்டு ரிக்கார்டு' அமைப்பு, 'வேர்ல்டு யங்கஸ்ட் மல்டி லாங்வேஜ்' விருதை அளித்து கவுரவித்துள்ளது. மேலும், அதே ஆண்டு, தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டியில், குரானின் முதல் அத்தியாயத்தை, 180 மொழிகளில், ஆறு மணி நேரத்தில் தட்டச்சு செய்து, வெற்றி பெற்றான்.
இதையடுத்து, 10 ஆண்டுக்கான குடியுரிமையும், அதன் பிறகு, அவனது பெற்றோருக்கு குடியுரிமை வழங்கவும் முன்வந்தது, தென்னாப்பிரிக்க அரசு. 'அவனது திறமையெல்லாம் இந்தியாவுக்கே பயன்பட வேண்டும்' என்று, அந்த வாய்ப்பை மறுத்து விட்டனர், பெற்றோர். கோவை கல்லுாரி ஒன்றில் நடந்த, அப்துல் கலாம் விருது வழங்கும் நிகழ்ச்சியில், மொழி அறிவிற்காக, இவனுக்கு, உலக சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
கடந்த, டிச., 2018ல், ஜெர்மனி நாட்டு அரசு சார்பில், உலக அளவில் தனித்திறன் கொண்ட சிறுவர், சிறுமியருக்கான, 'க்ளைன் கேகன் கோர்ஸ்' என்ற, தனித்திறன் போட்டி நடந்தது. அந்நாட்டு, 'டிவி'யில் நேரடி நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட, அக்ரம், 36 நாட்டை சேர்ந்த மொழி அறிவு திறன் நிபுணர்களுடன் போட்டியிட்டு, இந்திய மதிப்பில், 25 லட்சம் ரூபாய் வென்றுள்ளான். எதிர்காலத்தில், எந்த நாட்டில், அக்ரம் படிக்க விரும்பினாலும் செலவிடும் வகையில், இந்த பரிசு தொகை, வங்கி சேமிப்பில் போடப்பட்டுள்ளது.
போட்டிக்காக, அக்ரமை தேர்வு செய்வதற்கு முன், ஜெர்மனி, 'டிவி' நிகழ்ச்சியின், தேர்வு குழுவினர், சென்னைக்கு வந்துள்ளனர். அவர்கள், அக்ரமின் மொழி அறிவுக்கான தனித்திறமை உண்மைதானா என்பதை, ஏழு நாட்கள், பல்வேறு கட்டங்களாக சோதித்த பிறகே, கலந்துகொள்ள அனுமதி வழங்கி உள்ளனர். இப்படி இவனது, மொழி அறிவு சாதனை, பல்வேறு பரிசு மற்றும் விருதுகளை பெற்று தந்துள்ளது.
இதுவரை, தமிழகம், கேரள மாநிலங்கள் மற்றும் மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள, 157 அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்காக, 'மோட்டிவேஷன்' வகுப்புகளை நடத்தி அசத்தியிருக்கிறான்.
(நன்றி: வாட்ஸ்அப் செய்தி)
Add new comment