Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ஜெர்மன் ஊடகவியலாளர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்
ஜெர்மன் நாட்டில் ஊடகத் துறையில் பணியாற்றும் கத்தோலிக்க, எவஞ்செலிக்கல், மற்றும் எபிஸ்கொப்பல் தொடர்பாளர்களின் பிரதிநிதிகள் 30 பேரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 4, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.
ஜெர்மன் ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் Reinhard Marx அவர்களின் தலைமையில், திருத்தந்தையைச் சந்திக்க வந்திருந்த தொடர்புத் துறை பிரதிநிதிகள், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு வாழும் சாட்சிகளாக உள்ளனர் என்று, திருத்தந்தை பாராட்டினார்.
பொய்யான வதந்திகளுக்குப் பதில், உண்மையான தகவல்களையும், குழப்பம் விளைவிக்கும் கருத்துக்களுக்குப் பதில், தெளிவான சிந்தனைகளையும், மக்களிடம் எடுத்துச் செல்வது, ஊடகங்களின் மிக முக்கியமானப் பணி என்பதை திருத்தந்தை இக்குழுவினரிடம் கூறினார்.
மனித உயிர்களின் மதிப்பு குறைந்துவருவது, சமுதாய ஏற்றத்தாழ்வு, மனித மாண்பு குலைக்கப்படுவது, மனசாட்சியின் சுதந்திரம் பறிக்கப்படுவது போன்ற தீமைகள் பெருகிவரும் இவ்வுலகில், இந்த விழுமியங்களை மீண்டும் நிலைநாட்டுவதில், கத்தோலிக்க, எவஞ்செலிக்கல் செய்தியாளர்கள் குழு முயற்சி எடுத்துவருவதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாராட்டினார்.
இவ்வுலகில் நம்பிக்கை தரும் நல்ல செய்திகள் ஏராளமாக உள்ளன என்பதை எடுத்துரைக்கும் பணியில் ஈடுபட, இச்செய்தியாளர்கள் குழுவை ஊக்குவித்தத் திருத்தந்தை, அவர்களுக்கு தன் ஆசீரை வழங்கினார்.
நன்றி வத்திக்கான் செய்தி
Add new comment