Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தூய ஆவியால் பிறப்படைவோம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பாஸ்கா காலம்-இரண்டாம் வாரம் திங்கள்
மு.வா: திப:4:23-31
ப.பா: திபா :2: 1-3. 4-6. 7-9
ந.வா:யோவா: 3: 1-8
தூய ஆவியால் புதுப்பிறப்படைந்து இறைவனை உலகெங்கும் பறைசாற்ற இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.
நிக்கதேம் மறுபடியும் பிறக்க வேண்டும் என்ற இயேசுவின் கூற்றை வியந்து, வளர்ந்த மனிதன் எவ்வாறு தாய் வயிற்றுக்குள் மீண்டும் சென்று பிறக்க முடியும் எனக் கேட்ட போது ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் மறுபிறப்பு அடைய வேண்டும் என இயேசு தெளிவுபடுத்துகிறார்.
தூய ஆவியாரால் மறுபிறப்படைப்பு அடைந்தவர்களுக்கு சிறந்த உதாரணமாய் திகழ்பவர்கள் உயிர்ப்புக்கு பின் சான்றுகளாய் வாழ்ந்த சீடர்கள். இயேசுவின் இறப்பினால் மனமுடைந்த சீடர்கள் அவர் உயிர்த்த பின்னும் இறந்த நிலையிலேதான் இருந்தனர். ஆனால் தூய ஆவியைப் பெற்ற பின்னர் வல்லமைமிக்க பேச்சாளர்களாய் இறைவனைப் பறைசாற்றி, பல்வேறு அருஞ்செயல்களைச் செய்து பலருக்கு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையை உண்டாக்கி சான்று பகர்ந்தனர்.
இந்த தூய ஆவியை நாமும் பெற்றவர்கள் தான். ஆயினும் நாம் பழைய இயல்பிலேயே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏன்?தூய ஆவியாரை நம்மில் செயல்பட நாம் இன்னும் அனுமதிக்காததே இதற்கு காரணம். அவ்வாறு நாம் தூய ஆவியார் நம்முள் செயல்பட அனுமதித்தால் நாமும் சீடர்களைப் போல புதுப்பிறப்பு அடைந்தவர்களாக மாற முடியும். நம்முடைய பழைய இயல்புகள் கரைந்து போகும். இறைவனைப் பறைசாற்றும் நாவன்மை பெற முடியும். அருஞ்செயல் பல செய்ய முடியும். நோய்களைக் குணமாக்க முடியும். பிறருக்கும் கிறிஸ்துவைப் பற்றிய நம்பிக்கையை வழங்க முடியும்.
தூய ஆவியால் புதுப்பிறப்பு அடைந்தவர்கள் திசை குறிப்பிட முடியாத காற்றுக்கு சமம் என்று இயேசு கூறுகிறார். அந்த அளவுக்கு தூய ஆவியார் நம்மை வேகமுள்ளவர்களாக விவேகமுள்ளவர்களாக பலன் தரும் வாழ்வு வாழ்பவர்களாக இயேசுவின் உண்மைச் சீடர்களாக மாற்றுவார். தூய ஆவியாரை வரவேற்று அவரால் புதுப்பிறப்பு அடைய தயாரா?
இறைவேண்டல்
தூய ஆவியாரே! எமக்கு புதுப் பிறப்பு தந்து இயேசுவின் சீடர்களாக மாற்றுவீராக. ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment