Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தீயவற்றை விரட்டுவோம்! தூயவற்றால் நிரம்புவோம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் முதலாம் செவ்வாய்
I: எபி: 2: 5-12
II: திபா: 8: 1,4. 5-6. 6-8
III: மாற்: 1: 21-28
தீயவை நம்மிடமிருந்து அகலும் போது தூயவை நம்மைத் தானாக நிரப்பும் என்பதுதான் இன்று நமக்கு இறைவார்த்தை வழங்கும் செய்தி. இதனை இன்றைய நற்செய்தி நமக்கு தெளிவாக விளக்குகிறது.
இயேசு தொழுகைக் கூடத்தில் போதித்துக் கொண்டிருந்த போது தீய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டிருந்த மனிதன் இயேசுவை யார் என்று உணர்ந்து அவரைப் பற்றி அறிக்கையிட்டதாக நாம் வாசிக்கிறோம். இந்த நிகழ்வு நமக்கு வியப்பைத் தரலாம். அதாவது தீய ஆவி பிடித்த மனிதன் இருந்தது தொழுகைக் கூடத்தில். இறைவனால் நிரம்பப்பட்ட இடம்தான் தொழுகைக்கூடம். இந்த மனிதன் இத்தொழுகைக் கூடத்திற்கு அடிக்கடி வந்திருக்கக்கூடும். இருப்பினும் மாற்றம் இல்லை. ஆனால் இயேசுவை உணர்ந்த பிறகு, கண்டறிந்த பிறகு அவன் தூய மனிதனாக மாறினான்.
இங்கே நடந்தது என்ன? இயேசுவைக் கண்டறியாத வரை தீய ஆவியால் நிறைந்திருந்தான். அத்தீய நிலையிலேயே இயேசுவைக் கண்டுகொள்ள முடிந்தது. இயேசுவின் தூய ஆவியால் அவனிடமிருந்து தீய ஆவி விலகியது.
எல்லா மனிதருக்குள்ளும் நன்மையும் இருக்கும். தீயதும் இருக்கும். ஆனால் சிலருக்கு தீயவை மேலோங்கி இருக்க வாய்ப்புள்ளது. இந்நிலை கடவுளை அறியவிடாமல் தடுக்கிறது. அறிந்தாலும் விலகி ஓட நம்மைத் தூண்டுகிறது. நம்முள் இருக்கும் தீமையை விட கடவுள் ஆற்றல் வாய்ந்தவர் என நாம் உணர்ந்தாலே போதும். நாமும் தூய்மையாவோம்.
நாமும் அத்தீய ஆவி பிடித்த மனிதன் தொழுகைக் கூடம் சென்றது போல கோவிலுக்குச் செல்வதாலும், ஒன்றிரண்டு நற்செயல்கள் புரிவதாலும் மட்டும் நாம் நல்லவர்களாகிட மாட்டோம். இயேசுவைக் கண்டறிந்து அந்த ஆற்றலால் தீயவற்றை நம்மிடமிருந்து விரட்டும் போது தான் நம்மிலே நன்மை மேலோங்கி நிற்கும்.
தீய ஆவியால் கூட இயேசுவை உணர முடிந்தது. ஆனால் அது இயேசுவை தன்னைவிட்டு அகலுமாறு கூறியது. நாம் அவ்வாறு இருக்கக்கூடாது. இயேசு நம்மை விட்டு அகலவேண்டும் என்று எண்ணக் கூடாது. மாறாக இயேசுவை நம்மிலே செயலாற்ற அனுமதிக்க வேண்டும். அப்போது நம் அனைவரிலும் உள்ள தீயவை வெளியேறும். நாம் நன்மைகளால் நிரப்பப்படுவோம். இத்தகைய வரத்திற்காய் செபிப்போம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! உம்மை நாங்கள் கண்டறிந்து எம்மிடமுள்ள தீயவற்றை அகற்றி நன்மைகளால் நிரப்பப்படுவோமாக. ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment