Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நாம் யாரைச் சார்ந்துள்ளோம்? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
கிறிஸ்து பிறப்பு காலம்
I: 1 யோவா: 3: 7-10
II: திபா: 98: 1. 7-8. 9
III: யோவா: 1: 35-42
ஒருமுறை நான் கோவிலுக்குச் சென்ற போது ஒரு தாய் தன் குழந்தையைக் கண்டித்துக்கொண்டிருந்தார். அந்தக் குழந்தை சேட்டை செய்ததால் அத்தாய் அக்குழந்தையைப் பார்த்து " நீ இயேசப்பா பிள்ளையா அல்லது சாத்தான் பிள்ளையா? " எனக் கேட்டார். உடனே அக்குழந்தை "இயேசப்பா பிள்ளை "என்றது. அப்போது தாய் "நீ இயேசப்பா பிள்ளை என்றால் என் பேச்சைக் கேள் " என்று சொல்லி அக்குழந்தையை அமைதிப்படுத்தி தன் அருகே வைத்துக்கொண்டார். இந்நிகழ்வு சற்று வேடிக்கையாக இருந்தாலும் ஆழ்ந்த உண்மையை நமக்குக் கற்பிக்கிறது.
சிறுபிள்ளைகளாக இருந்த போது நம்மிடமும் நம் பெற்றோர்கள், தாத்தா பாட்டிகள், மறைக்கல்வி ஆசிரியர்களெல்லாம் இது போல சொன்னார்கள் அல்லவா. அப்போது காது கொடுத்துக் கேட்டு நமது சின்னச் சின்ன சேட்டைகளை நாம் குறைத்தோம். இது நம் எல்லோருடைய வாழ்விலுமே நடந்தது தான். ஆனால் வயதாக ஆக தவறுகளையும் பாவச்செயல்களையும் நாம் துணிச்சலாகச் செய்கிறோமே! நம்மிடம் யாராவது " நீ கடவுளின் பிள்ளையா அல்லது அலகையின் பிள்ளையா? " எனக் கேட்டால் நமது பதில் என்னவாக இருக்கும்? தாமதம் செய்யாமல் நாம் சிந்தித்தறிய வேண்டிய விஷயம் இது.
அன்புக்குரியவர்களே இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் யோவான் பாவம் செய்வோர் அலகையிடமிருந்து வருகின்றனர் எனத் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார். ஆம். நாம் பாவம் செய்யும் போதெல்லாம் அலகையைச் சார்ந்தவர்களாக இருக்கிறோம். கடவுளைச் சார்ந்தவர்களாக நாம் இருந்தால் கடவுளின் இயல்பு நம்மிலே இருப்பதை நாம் உணர்வோம். இவ்வுணர்வே நம்மை சரியான பாதையில் வழிநடத்தும். தீய வழியை விட்டு விலகச் செய்யும். உலக மாயக் கவர்ச்சிகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.
கடவுளைச் சார்ந்து வாழ நாம் என்ன செய்ய வேண்டும்? " வந்து பாருங்கள் " என்று இயேசு தம்மைப் பின்தொடர்ந்தவர்களை நோக்கிக் கூறினார். அவர்களும் சென்றார்கள். அவரோடு அன்று தங்கினார்கள். அவர் யார் என உணர்ந்து பிறரையும் அவரிடம் கூட்டிவந்தார்கள்.
அவ்வழைப்பு நமக்கும் பொருந்தும். இயேசுவிடம் போக வேண்டும். அவரை செபத்திலும் அவருடைய வார்த்தையிலும் அனுபவித்து உணர வேண்டும்.பிறரையும் அனுபவிக்கத் தூண்ட வேண்டும்.
நாம் அடிக்கடி ஆலயம் செல்கிறோம். செபிக்கிறோம். ஆனால் "வந்து பாருங்கள்" என்ற இயேசுவின் வார்த்தைகளை உணர்ந்து அவரைச் சென்று பார்த்திருக்கிறோமா? இனிவரும் காலங்க கில் இயேசுவின் அழைப்பை ஏற்போம். கடவுளைச் சார்ந்தவர்களாக மாறி நம் வாழ்வால் அதை எண்பிக்க தொடர்ந்து முயல்வோம்.
இறைவேண்டல்
அன்பு ஆண்டவரே! நாங்கள் உம்மைச் சார்ந்தவர்கள் என உலகிற்கு காட்ட எம் வாழ்வைப் புதுப்பித்தருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment