Veritas Tamil News || வேரித்தாஸ் செய்திகள் || 30.09.2022


1. அணு ஆயுதங்களுக்கு எதிராக திருத்தந்தை கண்டனம்

போரின் நோக்கங்களுக்காக அணு சக்தியைப் பயன்படுத்துவது எக்காலத்தையும்விட இக்காலத்தில் மனித மாண்புக்கு எதிரானது மட்டுமல்ல, நம் பொதுவான இல்லமாகிய பூமிக்கோளத்தின் வருங்காலத்திற்கும் எதிரான குற்றம் என்பதை மீண்டும் அறிவிக்க  விரும்புகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

செப்டம்பர் 26, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட அணு ஆயுதங்கள் ஒழிப்பு உலக நாளை முன்னிட்டு, அமைதி, அணு ஆயுதக் களைவு, படைப்பின் காலம், (#Peace #NuclearDisarmament #TimeofCreation) ஆகிய மூன்று ஹாஷ்டாக்குகளுடன் இத்திங்களன்று வெளியிட்டுள்ள தன் டுவிட்டர் செய்தியில் அணு ஆயுதங்களுக்கு எதிரான தன் கண்டனத்தை மீண்டும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

போர்க்காலத்திற்காக அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது, இப்பூமிக்கோளத்தின் வருங்கால வளர்ச்சியை இயலக்கூடியதாக்குகின்ற அனைத்திற்கும் எதிரானது என்றும் திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, 2013ஆம் ஆண்டு டிசம்பரில் அணு ஆயுதங்கள் ஒழிப்பு உலக நாளை உருவாக்கி, அந்நாள் செப்டம்பர் 26ம் தேதி கடைப்பிடிக்கப்படவேண்டும் என கேட்டுக்கொண்டது.

2. கல்வி நிறுவனங்கள் வரவேற்கும் இடங்களாக இருக்கவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ் 

வரவேற்கின்ற மற்றும், எல்லாரையும் ஒருங்கிணைக்கின்ற இடங்களாக, கல்வி நிறுவனங்கள் இருக்கவேண்டும் என்று, உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டோரிடம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 29, இவ்வியாழனன்று கூறியுள்ளார்.

“குடிபெயர்ந்தோர், மற்றும், புலம்பெயர்ந்தோருக்கு கல்வி வாய்ப்பு” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டோரை இவ்வியாழன் காலையில் வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, புலம்பெயர்ந்தோர் கல்விபெறுவதற்குரிய வாய்ப்புக்களை அதிகமாகத் தேடிவரும் இக்காலக்கட்டத்தில் இக்கருத்தரங்கு நடைபெற்றுள்ளது மகிழ்வைத் தருகின்றது என்று கூறியுள்ளார்.

குடிபெயர்ந்தோர், மற்றும், புலம்பெயர்ந்தோர் குறித்த ஆய்வுகள், அவர்களுக்கு கல்வி வாய்ப்பு, மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவை கூடுதலாக இடம்பெறவும், அம்மக்களை வரவேற்கும், பாதுகாப்பளிக்கும் மற்றும் ஒருங்கிணைக்கின்ற இடங்களாக அனைத்து கல்வி நிறுவனங்களும் அமைக்கப்படவும் வேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆய்வு, கல்வி கற்பித்தல், சமூக முன்னேற்றம் ஆகிய ஒன்றோடொன்று தொடர்புடைய, மூன்று தலைப்புக்கள் குறித்து ஒவ்வொன்றாக விளக்கியுள்ள திருத்தந்தை, புலம்பெயர்தலுக்கு உரிமை இல்லை எனக் கூறப்படும்வேளை, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து புலம்பெயர்தலுக்கு காரணங்கள் குறித்து கூடுதலாக ஆய்வுகள் இடம்பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.   

உலகில் இடம்பெறும் மற்றொரு வகையான வன்முறை, நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளத்தைக் கறைப்படுத்தல் என்றும், இப்பூமியின் வளங்கள் அளவுக்கு அதிகமாகச் சுரண்டப்படுதல் மற்றும், மாசுகேட்டால், அது மிகவும் சேதமடைந்துள்ளது என்றும் கூறியுள்ள திருத்தந்தை, சுற்றுச்சூழல் முன்வைக்கும் சவால்களுக்குப் பதிலளிப்பதில் கத்தோலிக்க கல்வி நிறுவனங்களுக்கு பங்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள், இப்பூமியைப் பராமரிப்பதற்கு உலகத் தலைவர்களுக்கு வழிகாட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, புலம்பெயர்ந்தோருக்கு நன்மைதரும் வகையில் கல்வித் திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும் எனவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள இத்திட்டங்கள் அதிகரிக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

3. இந்தியத் துறவியர் ஒடுக்கப்படுவோருக்கு அருகிலிருக்க...

சடங்குமுறைகளால் அடிக்கடி உருவமிழந்துள்ள திருஅவையில், இயேசு கிறிஸ்து மீதுள்ள நம்பிக்கையில் உறுதியாயிருந்து இறைவாக்கினர்களாகச் செயல்படவேண்டும் என்று, இந்திய கத்தோலிக்கத் துறவியரின், தேசிய நீதி மற்றும் அமைதி அவை நடத்திய கருத்தரங்கில் கூறப்பட்டுள்ளது.  

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில், கத்தோலிக்கத் துறவியரின் தேசிய நீதி மற்றும் அமைதி அவை செப்டம்பர் 25, இஞ்ஞாயிறன்று நிறைவுசெய்த நான்கு நாள் தேசிய கருத்தரங்கில் 16 மாநிலங்களிலிருந்து 20 துறவு சபைகளின் இருபால் துறவியர் 63 பேர் கலந்துகொண்டனர்.

இக்கருத்தரங்கின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து பீதேஸ் செய்தியிடம் பேசியுள்ள, இந்திய துறவியர் தேசிய அவையின் தலைவர் அருள்சகோதரி Nirmalini அவர்கள், துறவியர் தங்களின் தனித்துவத்தை ஆழப்படுத்தி, காலத்தின் அறிகுறிகளுக்கேற்ப வாழ அழைக்கப்படுகின்றனர் என்று கூறியுள்ளார்.

அர்ப்பண வாழ்வு வாழ்வோரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளதுபோல, இறைவாக்கினராகச் சான்று வாழ்வு வாழ்ந்து உலகை விழித்தெழச்செய்யவேண்டும் என்றும் அச்சகோதரி தெரிவித்துள்ளார்.

இக்கருத்தரங்கு குறித்து விளக்கிய, மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் தலைவர் Meera Sanghamitra அவர்கள், இந்திய சமுதாயத்தை அதிகமாகப் பாதிக்கின்ற விவகாரங்கள் குறித்து எடுத்துரைத்து, இந்தியாவில் ஏழைகள் ஏழைகளாகவும், செல்வரும், அதிகாரத்தில் இருப்போரும் ஏழைகளை உறிஞ்சி இலாபம் ஈட்டுகின்றனர் என்றும் கவலை தெரிவித்தார்.

கேரளாவில் மீனவர் எதிர்கொள்ளும் துயரங்கள், இயேசு சபை அருள்பணி ஸ்டேன் சுவாமி எதிர்கொண்ட அநீதி போன்றவைகளையும் மீரா அவர்கள் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். 

 

- வத்திக்கான் செய்திகள் 

Add new comment

5 + 6 =