Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இயேசு எனும் புதையலை என் வாழ்வில் கண்டுகொண்டேனா!! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் 17 ஆம் புதன்
I:ஏரே: 15: 10. 16-21
II: திபா 59: 1-2. 3. 9-10. 16-17
III: மத்: 13: 44-46
நான் ஒருவிழாவிற்குச் சென்றிருந்தேன். உள்ளே நுழையும் போதே அவர் ஒரு சீட்டு கொடுத்து ஆதை பத்திரமாக வைக்கச் சொன்னார்கள். விழாவின் இடையில் அதை நடத்துபவர் "இப்போது Lucky tip"எடுக்கப்படும் என்றார். சீட்டு குலுக்கப்பட்டு எடுக்கப்படும் எண் யாருக்கு இருக்கிறதோ அவருக்கு பரிசு வழங்கப்படும் என்றார். எல்லாரும் ஆர்வமாய் இருந்தனர். நானும் ஆவலாய் இருந்தேன். குலுக்கல் எண் என்னிடமே இருந்தது. என்னால் நம்ப இயலவில்லை. எனக்கு பரிசு கிடைத்தது. நான் மிகவும் மகிழ்ந்தேன்.
மேலே கூறப்பட்ட இந்த நிகழ்வு பலருக்கு நடந்திருக்கும். சாதாரணமான நிகழ்வாக இருந்தாலும், நாம் எதிர்பாராத நேரத்தில் நமக்கு ஒன்று கிடைக்கும் போது நாம் அடைகின்ற மகிழ்ச்சி பெரிது.அந்த மகிழ்ச்சியை நாம் அத்தோடு விட்டுவிடுவதில்லை. மாறாக அப்பொருளைப் அல்லது அந்த நிகழ்வை எண்ணும் போதெல்லாம் நமக்கு அந்த மகிழ்ச்சி மீண்டும் கிடைக்கும். அதை நாம் ஒருபோதும் இழக்க விரும்புவதில்லை. ஆனால் அதற்காக பிறவற்றை இழக்க நாம் தயாராவதும் உண்டு.
இன்றைய நற்செய்தி வாசகம் நம் வாழ்வில் கிடைத்தற்கரிய புதையலாக, விலையுயர்ந்த முத்தாக இயேசுவைக்
கண்டுகொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு எப்போதும் நம் அருகே இருக்கிறார். நாம் அவரை உணர்வதற்காகவே நமக்கு பல நன்மைகளைப் புரிந்துகொண்டிருக்கிறார்.நமக்குள்ளே இருக்கிறார். ஆனால் நாம் தான் அவரை உணர்வதில்லை. கண்டுபிடிப்பதில்லை. அவ்வாறு ஒருமுறை அவரைக் கண்டுபிடித்துவிட்டால் அவரை நம்மால் நிச்சயம் இழக்க முடியாது. இழக்கவும் விருப்பம் வராது.
அன்புக்குரியவர்களே! இயேசுவை கண்டுகொள்ள நமக்குத் தடையாய் இருப்பவை எவை? அழிந்து போகக்கூடிய உலக செல்வங்கள் தானே. நம்மிடம் உள்ள அனைத்தும் மறைந்து போகக்கூடியவைதான். காலத்திற்கு ஏற்ப மாறக்கூடியவைதான். ஆனால் அவற்றைதான் நாம் உயர்ந்தவையாகக் கருதிக்கொண்டிருக்கிறோம். இவைகளே இயேசு எனும் புதையலைக் கண்டறியாவண்ணம் நம் இதயக்கண்களை மறைக்கின்றன.
இன்றைய நற்செய்தியில் நாம் காணும் மனிதன் புதையல் கிடைத்தஉடன் தமக்குள்ளதெல்லாம் விற்றுவிட்டு புதையல் உள்ள நிலத்தை வாங்கியதைப் போல, நாமும் உலகத்தின் மேல் நமக்குள்ள நாட்டங்களையெல்லாம் விட்டுவிட்டால் இயேசுவை நாம் கண்டறிந்து சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.அவர் தரும் மகிழ்ச்சியும் அமைதியும் இவ்வுலகத்தில் காணக்கிடைக்கும் விலைமதிப்பில்லா செல்வங்ளைவிட பன்மடங்கு உயர்வானது. இதை உணர்ந்தவர்களாய் இயேசு எனும் அரும்பெரும் செல்வத்தை நம் வாழ்வில் தேடித்தேடி சேர்த்துக்கொள்ள முயல்வோம்.
இறைவேண்டல்
எங்கள் நிலையான செல்வமே!இயேசுவே! உம்மைவிட விலைமதிப்பற்ற செல்வம் வேறுஇல்லை என்பதை உணர்ந்து எம் வாழ்வில் உம்மைக் கண்டந்து சொந்தமாக்கிக்கொள்ள அருள்புரியும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment