Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
செபிக்கும் மக்களாக வாழத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection
பொதுக்காலத்தின் 17 ஆம் ஞாயிறு
I: தொநூ: 18: 20-32
II: திபா: 138: 1-2. 2b-3. 6-7. 7-8
III: கொலோ: 2: 12-14
IV: லூக்: 11: 1-13
செபம் என்பது கிறிஸ்தவ வாழ்வின் அங்கமாக இருக்கிறது. செபிக்கின்ற மனிதர்கள் இறைவனின் அருள்கொடைகளை நிறைவாகப் பெறுகின்றனர். புனித ஜான் மரிய வியான்னி "கடவுள் உலகை ஆளுகிறார். செபிக்க தெரிந்த மனிதர்கள் கடவுளை ஆளுகிறார்கள்" என்று கூறுகிறார். செபத்தால் முடியாதது இந்த உலகத்தில் எதுவும் இல்லை. செபத்தின் வல்லமையால் இறைவனின் அளப்பெரிய அருளை நிறைவாகப் பெற முடியும். எனவே நாம் ஒவ்வொருவரும் செபிக்கின்ற மக்களாக வாழ முயற்சி செய்வோம்.
இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் சோதம் கொமோரா மக்களுக்காக பரிந்துரை ஜெபம் செய்கிறார். ஒரு நீதிமானின் பொருட்டாவது அந்த நகரை அழிக்க வேண்டாம் என்று நம்பிக்கையோடு கடவுளின் மனதை மாற்றும் அளவுக்கு செபிக்கிறார். ஆனால் ஒரு நீதிமான் கூட இல்லாத காரணத்தினால் அந்த நகரானது அழிக்கப்படுகிறது.இப்பகுதி பரிந்துரை செபத்தின் வல்லமையை நமக்கு உணர்த்துகிறது. நாம் நமக்காக மட்டும் செபிக்காமல் பிறருக்காக செபிப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற கருத்தை இவ்வாசகம் நமக்குத் தருகிறது.
அதேபோல இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு "கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்" என்று கூறுகிறார். நம்முடைய செப வாழ்வு மேலோட்டமானதாக இல்லாமல், விடாமுயற்சியோடும்ஆழமான நம்பிக்கையோடும் இருக்கின்ற பொழுது கடவுளின் அளப்பரிய ஆசீர்வாதத்தை நிறைவாக பெற முடியும்.ஆனால் நாம் கேட்பதும் தேடுவதும் தட்டுவதும் கடவுளின் விருப்பதிற்கு ஏற்றதாக அமைவதே சிறந்த செபமாகும்.
இயேசு ஆண்டவர் தந்தையிடம் செபித்தார். அதனால் தான் அவருடைய பணிகளை சிறப்பாகவும் வல்லமையோடும் செய்ய இயன்றது. எனவே நாம் செப வாழ்வில் ஆழமாக வேரூன்ற வேண்டும்.
நம்முடைய வாழ்வில் தனி செபம், குடும்ப செபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். நாம் எவ்வளவு உழைத்தாலும் கடவுளின் பெயரால் அனைத்தையும் செய்கிற பொழுது கடவுள் உழைப்பிற்கேற்ற பலனை பன்மடங்கு கொடுப்பார். அதற்கு உறுதியான நம்பிக்கையோடும், மன உறுதியோடும், கிடைக்கும் என்ற ஆழமான வேட்கையோடும், செபிக்க வேண்டும்.
நாம் ஒவ்வொருவருமே செபிக்கின்ற மக்களாக வாழ முயற்சி செய்யும் போது கடவுளின் ஆற்றலை நிறைவாகப் பெற முடியும். ஆண்டவர் நமக்கு கொண்டு வந்த நற்செய்தி மதிப்பீடுகளை இன்னுமாக பிறருக்கு கொடுத்து நாமும் சாட்சியமாக மாற முடியும். எனவே செபத்தின் வழியாக இறைவனின் அளவற்ற அன்பையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் ஆசீர்வாதத்தையும் பெறக்கூடியவர்களாக மாறுவோம். அதற்கு தேவையான அருளை மன உறுதியோடு வேண்டுவோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்வில் நம்பிக்கையோடு செபித்து ஆசீர்வாதத்தை நிரம்ப பெற்றிட அருளை தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment