உன்னைப்போல் பிறரையும் நேசி! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 15ஆம் ஞாயிறு 
மு.வா:இச 30: 10-14
ப.பா: திபா:19: 7. 8. 9. 10 
இவா :கொலோ  1: 15-20
ந.வா: லூக் : 10: 25-37

 

மனித வாழ்வு என்பது தன்னை அன்பு செய்வதை போல பிறரையும் அன்பு செய்யக்கூடிய ஒப்பற்ற வாழ்வு. இன்றைய வாசகங்களின் மூலம் நாம் கடவுளின் அன்புக் கட்டளையைப் பற்றி தியானிக்கிறோம். முதல்வாசகம் கடவுளிடம் நாம் கொண்டிருக்க வேண்டிய அன்பு முழு உள்ளத்தோடும் முழு ஆற்றலோடும் விளங்க வேண்டும் என்பதை இணைச்சட்ட நூலின் வரிகள் வாயிலாக விளக்குகிறது. நற்செய்தி வாசகம் அதற்கு இணையான பிறரன்பு கட்டளையை அடுத்திருப்பவர் யார் என விளக்கும் நல்ல சமாரியன் உவமை மூலம் எடுத்துக்காட்டுகிறது. 
இரண்டாம் வாசகம் இயேசுவின் அன்பால் நாம் அனைவரும் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம் என்பதைக் கூறுகிறது. 

இவ்வாசகப்பகுதிகளை பலமுறை நாம் தியானித்திருக்கிறோம். ஆயினும் நம் ஒவ்வொருவரிலும் ஏன் அன்பு செய்வதில் குறைபாடுஇருக்கிறது என நாம் என்றாவது சிந்தித்திருக்கிறோமா? பக்தி மட்டும் கடவுளுக்கு செலுத்தும் அன்பல்ல. பிறருக்கு உதவுதல் மட்டும் பிறரன்பாகிவிடாது. அதையும் தாண்டி நம்மிடம் குறைவுபடுவது என்ன?  சுய அன்பு. சுய அன்பு என்பது சுயநலத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆம் எவரொருவர் தன்னை அன்பு செய்யவில்லையோ அவரால் அடுத்திருப்பவரை நிச்சயமாக அன்பு செய்ய இயலாது. இன்று நம்மை நாம் எவ்வாறு அன்பு செய்ய வேண்டும் என்பதையும் அந்த அன்பை பிறருக்கு எவ்வாறு பகிர்ந்து   இறுதியில் கடவுளுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதையும் நாம் தியானிப்போம்.

ஒரு மாணவி முகவாட்டத்துடன் வகுப்பறையில் அமர்ந்திருந்ததைக் கண்டு ஆசிரியர் அம்மாணவியிடம் சென்று பேசினார். அம்மாணவி கண்ணீர் மல்க தன் தந்தைக்கு வீட்டில் யார் மேலும் அன்பு இல்லை எனவும் குடித்துவிட்டு வந்து அனைவரையும் அடித்துத் துன்புறுத்துவதாகவும் கூறினார். அதற்கு அந்த ஆசிரியர் கூறிய பதில் என்ன தெரியுமா?  "முதலில் உன் அப்பாவிற்கு அவர்மேலேயே அன்பு இல்லை. அன்பு இருந்திருந்தால் மது என்னும் கொடிய விஷத்தைக் குடித்து அவர் தன்னையே தினமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லமாட்டார். ஏதோ ஒரு வெறுப்பு அவருக்கே அவர்மேல் இருக்கக் கூடும். உன்னால் முடிந்தால் உன் பாசத்தால் அதை மாற்று " என்று கூறி அம்மாணவியை சமாதானப்படுத்தினாராம். 

இச்சிறுநிகழ்வு நமக்கு எவ்வளவு பெரிய பாடத்தைக் கற்றுத்தருகிறது! தன்னுடலை பேணாத குடிகாரத் தந்தைக்கு தன் மனைவி குழந்தைகளைப் பேணும் எண்ணம் நிச்சயமாக வராது. சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் அவரை அவ்வாறு மாற்ற முயன்றாலும் சுய அன்பு உள்ளவராய் இருந்தால் அவர் இவ்வாறு மாறிஇருக்க மாட்டார்.இது உளவியல் உண்மை.

தன்னை நேசிக்கிறவர் தன் உடலைப் பேணுவார். தன்னைப் புரிந்து கொள்வார். தன்னை மன்னிப்பார். தன் திறமைகளை வளர்த்துக்கொள்வார். பிறர்முன் தன்னை மதிப்புக்குரியவராக மாற்றிக்கொள்வார்.  இப்படிப்பட்டவர் பிறரை மதிப்பார். பிறருக்கு உதவுவார். மன்னிப்பார். பிறர் அன்புக்கு ஏங்க மாட்டார். மாறாக பிறருக்கு அன்பை வழங்குபவராக இருப்பார். எல்லாவற்றுக்கும் மேலாக தன்னைப் படைத்த கடவுளுக்கு நன்றியுள்ளவராகவும் தன் வளர்ச்சிக்கு காரணமானவர்களை நன்றியோடு நினைப்பவராகவும் இருப்பார். பிறர் வளர்ச்சிக்கு உதவுவார்.

இயேசு தன்னை நேசித்தார். தன்னை கடவுளின் மகனாக உணர்ந்து மதித்தார். அவருடைய அந்த சுய அன்பு அவரிடம் வந்த அனைவரையுமே அன்பு செய்ய வைத்தது. அவருடைய அந்த பிறரன்பைத்தான் சிலுவையிலே கடவுளுக்கு காணிக்கையாக்கியானார். இறையன்புக்கும் பிறரன்புக்கும் பொருத்தமான உதாரணமாய் இயேசு விளங்குகிறார்.நம்மையும் அவ்வாறே விளங்க அழைக்கிறார். "உன் மீது நீ அன்பு கொண்டுள்ளது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கொள்வாயாக" என்று கூறி நம்மீது நாம் கொண்டுள்ள அன்பை ஆராயச் சொல்கிறார். ஆடம்பரத்திலும் அழகுபடுத்துதலில் உண்பதிலும் குடிப்பதிலும் அல்ல சுய அன்பு. மாறாக கடவுளின் பால் உள்ள நன்றி உணர்விலும் தூய்மையான உடல் உள்ளத்தைப் பேணுவதிலும் நம்மையே நாம் மதிப்பதிலும் மன்னிப்பதிலும் உள்ளது. இவ்வன்பு நமக்கு அடுத்திருப்பவரிடமும் அவ்வாறே செய்யத் தூண்டுகிறது. இதுவே உண்மையான இறையன்பாக மாறுகிறது. உன்னைப் போல பிறரையும் நேசிக்கத் தயாரா?

 இறைவேண்டல்
அன்பான இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்வில்  எம்மை நேசிப்பதை போல, பிறரையும் நேசிக்கும் நல்ல மனநிலையை தாரும்.    அதன் வழியாக மனித சேவை புனிதம் காண அருள் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

6 + 7 =