ஆண்டவரால் கவர்ந்திழுக்கப்படத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 14ஆம் திங்கள்
I : ஓசேயா2: 14-16, 19-20
II : திபா: 145: 2-3. 4-5. 6-7. 8-9
III : மத்தேயு 9: 18-26

உறவு என்பது மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்று. உறவுக்கு அடிப்படையாய் அமைவது அன்பு. அன்பு கொண்டவர்கள்  ஒருவரை ஒருவர் ஈர்த்து ஒன்றிணையும் போதுதான் அங்கே உறவு உருவாகிறது. அந்த அன்பு சகோதர அன்பாக இருக்கலாம். கணவன் மனைவியிடையே உள்ள உறவாக இருக்கலாம். நட்பாக இருக்கலாம். எந்த விதமான அன்பாக இருந்தாலும் அங்கே அந்த அன்பினால் நாம் ஈர்க்கப்படுகிறோம். அத்தகைய ஒரு ஈர்ப்பு நமக்கும் கடவுளுக்கும் இடையே வலுவாக இருந்தால் அந்த உறவைவிட தலைசிறந்த உறவு இல்லை. அதனால் நாம் பெறும் மகிழ்ச்சிக்கும் எல்லையே இல்லை. 

இன்றைய வாசகங்கள் நம்மை கடவுளால் ஈர்க்கப்படத் தூண்டுகிறது. இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் இஸ்ரயேல் மக்களைக் கவர்ந்திழுக்கப் போவதாக அன்பின் இறைவாக்கினராக ஓசேயாவின் வழியாகக் கூறுகிறார். தனக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே உள்ள உறவை கணவன் மனைவிக்கிடையே உள்ள உறவுக்கு ஒப்பிட்டு தன் அன்பின் ஆழத்தை விவரிக்கிறார். இத்தகைய அன்பை நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது சரியா என நாம் சிந்திக்க வேண்டும்.

அதே போல நற்செய்தி வாசகத்தில் பெரும்பாடு பட்ட பெண்ணை நோக்கி "மகளே" என இயேசு கூறுகிறார்.பனிரெண்டு ஆண்டுகளாய்  துன்பத்திலே உழன்ற பெண்,பலராலும் ஏளனமாய் பார்க்கப்பட்ட பெண் தன்னை ஒருவர் அன்போடு மகளே என அழைக்கும் போது அடைந்த மகிழ்ச்சியின் அளவை நம்மால் கணக்கிட முடியுமா?அந்த அன்பிற்கு பின்னால் போகாமல் இருக்க முடியுமா?

ஆம்.  அன்புக்குரியவர்களே கடவுள் அதே அன்பால் நம்மைக் கவர்ந்திழுக்கத் தயாராக உள்ளார். தம் வார்த்தையால் ,தம் உடனிருப்பால், நற்கருணை பிரசன்னத்தால் ,அருள் ஆசிரால் நம்மேல் அன்பு கொண்டு நம்மைக் கவர்ந்திழுத்துக்கொண்டே இருக்கிறார். அவருடைய இந்த அன்பை உணர்ந்து அவரால் ஈர்க்கப்பட நாம் தயாரா? உலக ஈர்ப்புகள் தரும் மகிழ்ச்சியின் ஆயுள் குறுகியதே. கடவுளால் ஈர்க்கப்பட்டால் நமது மகிழ்ச்சி நிலைத்திருக்கும். எனவே இறைவன்பால் நாம் கொண்டுள்ள அன்பை அதிகமாக்கி அவருடைய ஈர்ப்புக்கு உடன்படுவோம்.

இறைவேண்டல் 

அன்பு இறைவா! உம் அன்பினால் கவரப்பட்ட மக்களாக எந்நாளும் வாழ்ந்திட வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

5 + 3 =