Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இறைவனின் உடனிருப்போடு வாழ முயலுவோம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் 13ஆம் சனி
I: ஆமோ: 9:11-15
II: திபா 84(85): 9,11-14
III: மத்: 9:14-17
பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் அரசர்களும், மக்களும், கால்நடைகளும் நோன்பு இருந்ததாக நாம் வாசித்திருக்கிறோம். குறிப்பாக அரசர்கள் தங்கள் அரசாடைகளைக் கிழித்துக்கொண்டவர்களாய் சாக்கு உடை உடுத்தி உண்ணா நோன்பிருந்து கடவுளை நோக்கி மன்றாடினர் என பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. யோனாவின் மொழிகளைக் கேட்டு நினிவே மக்கள் நோன்பிருந்த நிகழ்வுகளையெல்லாம் நாம் தியானித்திருக்கிறோம். இத்தகைய நோன்புகள் எவற்றைக் குறிக்கின்றன?மனமாற்றத்தையே. இந்த மனமாற்றங்கள் எல்லாம் எப்போது நடைபெறும் என நாம் ஆழ்ந்து சிந்தித்தோமெனில் கடவுளை விட்டு நாம் விலகிவிட்டோம் என்று நம் ஆழ் மனம் உணரும் தருணத்தில்தான் நிகழ்கிறது. அதன் விளைவாக நாம் நோன்பு இருக்கிறோம்.
ஆம் அன்புக்குரிவர்களே இன்றைய நற்செய்தியில் இயேசு" மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்பொழுது அவர்களும் நோன்பு இருப்பார்கள்." என்ற ஒரு பதிலை தன்னுடைய சீடர்களைக் குறை கூறிய யோவானின் சீடர்களுக்கு பதிலாகக் கூறுகிறார்.இவ்வார்த்தைகள் நமக்குக் கூறும் செய்தி யாதெனில் கடவுளின் உடனிருப்பை நாம் உணர்ந்து வாழும் போது துக்கம் கொண்டாடத் தேவையில்லை. ஏனெனில் அவருடைய உடனிருப்பு நம்மை வழிநடத்தும். துன்பத்தையும் சவால்களையும் தாங்கும் சக்தியைத் தரும்.
மாறாக நாம் அவருடைய உடனிருப்பை உணராமல் நம் பலவீனங்களால் அவரைப் பிரியும் போது துக்கம் நம்மைத் துரத்தும். அச்சமயங்களில் ஆழ்மன வருத்தத்தோடு நாம் இருக்கும் நோன்பு நம்மை மீண்டும் அவரோடு இணைக்கும்.வெறும் சடங்கிற்காகவும் கடமைக்காகவும் நாம் இருக்கும் நோன்பு அர்த்தமற்றது என்பதை இயேசு தெளிவாக விளக்குகிறார்.
இன்றைய முதல் வாசகத்தில் தந்தையாம் கடவுள் இஸ்ரயேலை அதன் முன்னைய நிலைக்கு கொணர்வேன் என வாக்களிக்கிறார். நாம் கடவுளை விட்டு விலகிச் சென்றிருந்தாலும் மனமாற்றம் எனும் நோன்பின் மூலம் கடவுளின் உடனிருப்போடு வாழும் போது நாமும் கடவுளின் பிள்ளைகள் என்ற முன்னைய நிலையை நிச்சயம் அடைவோம்.எனவே கடவுளின் உடனிருப்பில் நம் வாழ்வை அமைப்போம்.
இறைவேண்டல்
அன்பே இறைவா! உம் உடனிருப்பில் எந்நாளும் வாழ்ந்து மகிழ வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment