எளியவர்களில் இறைவனைக் காண்போம்! எளியவர்களாய் வாழ்வோம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் பதிமூன்றாம் திங்கள் 
I : ஆமோஸ் 2:6-10,13-16
II : 49:16-23
III : மத் 8:18-22

"ஏழைகளின் சிரிப்பில் இறைவன் வாழ்கின்றார் " என நாம் பல முறை கேட்டிருக்கிறோம். பல வாகனங்களுக்குப் பின்னாலும் ,சமூக சேவைமையங்களின் சுவர்களிலும் இது போன்ற வாசகங்கள் பல எழுதப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம். ஆனால் உண்மையில் ஏழை எளியவரைப் பற்றிய நம்முடைய உளப்பாங்கு என்ன?  

அன்றைய யூத சமுதாயதம் ஏழ்மை, நோய், குழந்தையின்மை போன்றவற்றை  கடவுளின் பெரும் சாபமாகக் கருதினர். அவர்கள் சாபமாகக் கருதியைக் கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் ஏழைகளை தங்கள் விருப்பத்திற்கிணங்க அடிமைகளாகப் பயன்படுத்தினர். அவர்களை மனிதர்களாகக் கருதவில்லை என்றே கூறலாம். ஒரு மனிதனை ஒரு இணை செருப்புக்கு விற்கும் அளவிற்கு ஏழைகளை மிகவும் தரக்குறைவாக நடத்தியுள்ளனர். கடவுளின் பார்வையில் இச்செயல் மிகவும் கொடிய பாவமாகக் கருதப்பட்டது. எனவே தான் இறைவாக்கினர் ஆமோஸ் மூலம் இத்தகைய பாவங்களைப் புரிந்தவர்களுக்கு கடுமையான தண்டைத் தீர்ப்பை ஆண்டவர் வழங்குகிறார் என்பதை இன்றைய முதல் வாசகம் விளக்குகிறது.

ஏழ்மை அல்லது வறுமை என்பது அவர்களுடைய குற்றமல்ல. சில சூழ்நிலைகள் காரணமாக அவர்களுடைய வளர்ச்சி தடைபட்டுள்ளது. அதனால் அவர்கள் சமூகத்தில் ஒடுக்கப்படவோ, வெறுக்கப்பட வேண்டியவர்களல்ல. அதே வேளையில் அவர்களை நம்முடைய பரிதாபத்திற்கு உரியவர்களாகவும் கருதக்கூடாது. அவர்களின் உழைப்பை, திறமைகளை உற்சாகப்படுத்தி வாழ்வில் முன்னேற நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இத்தகைய மனநிலையை நம்மில் உருவாக்கவே இறைமகன் இயேசு எளியவராய்த் திகழ்ந்தார். ஏழையாகப் பிறந்தார். இன்றைய வாசகத்தில் கூட நரிகளுக்குக் குழியும் பறவைக்கு கூடும் உண்டு. ஆனால் மானிட மகனுக்கு தலை சாய்க்கக் கூட இடமில்லை என்று கூறுகிறார். இவ்வாறு கூறி அவரைப் பின்தொடர விரும்பும் நம்மை எளிய மனத்தவராக ஏழையின் உள்ளத்தவராக வாழ அழைக்கிறார்.

பொருளாதார நிலையைக் கொண்டு நாம் யாரையும் ஏழை எனக் கூறலாகாது. நம்முடைய மனதால் நாம் செல்வந்தர்களாக விளங்க வேண்டும். நம் மனத்தின் செல்வம் நம்மை எளியவராக மாற்றும். ஏழைகளை மதிப்பவராக மாற்றும். அவர்களுக்கு எதிராக சொல்லாலோ செயலாலோ நம்மைப் பாவம் செய்யத் தூண்டாது. இயேசு செல்வராயிருந்தும் நமக்காக ஏழையானார். அவரைப் போல நாமும் எளிய மனத்தவராக வாழ முயலுவோம். எளியவர்களை மாண்புடன் நடத்துவோம்.

 இறைவேண்டல் 

எளிமையின் சிகரமே இறைவா! உம்மைப் போல எளிமையானவர்களாய் வாழவும் பொருளாதாரப் பாகுபாடின்றி அனைவரையும் மாண்புடன் நடத்தவும் தேவையான நல் மனதைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராஜசிங்கமங்கலம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

1 + 9 =