நன்மையை மட்டுமே கொடுப்போம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் பதினொன்றாம் திங்கள் 
I: 1 அர 21:1-16
II: திபா 5:2-3,5-7
III: மத்: 5:38-42

இன்றைய வாசகங்கள் நம்மை நன்மையை மட்டுமே பிறருக்குக் கொடுப்பவர்களாக வாழ அழைக்கின்றன. நன்மையை நாம் பிறருக்குக் கொடுக்க வேண்டுமென்றால் முதலில் நாம் நன்மை நிறைந்தவர்களாய் விளங்க வேண்டும். நன்மை நிறைந்தவர்களாக நாம் திகழவேண்டுமெனில் நாம் நன்மையே உருவான இறைவனால் நிறைந்திருக்க வேண்டும். 

இன்று நமது தாய் திருஅவை "பதுவை பதியர் " என்று அழைக்கப்படும் புனித அந்தோணியாரின் விழாவைக் கொண்டாடுகிறது. அந்தோணியார் இத்தாலி - லிஸ்பன் நகரில் பிறந்தவர். இருபத்து நான்கு வயதில் அகுஸ்தீன் மடத்தில் குருவாக அருட்பொழிவு பெற்ற இவர் பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த மறைசாட்சிகளைப் போல தானும் மாற வேண்டுமென விரும்பி பிரான்சிஸ்கன் சபையில் இணைந்தார்.இறைவார்த்தையை அறிவிப்பதில் தாகம் கொண்டவராய் இருந்தார். கடலிலுள்ள மீன்கள் இவர் இறைவார்த்தையைக் கேட்க ஓடி வந்ததாக மரபு கூறுகிறது. அந்தோணியாரைத் தேடி அதிகமான மக்கள் வருவார்களாம். காரணம் அவர் பல வல்ல செயல்கள் ஆற்றியுள்ளார். அவருடைய வல்ல செயல்களால் வாழ்வடைந்தோர் ஏராளம். அதனாலேயே அவர் " கோடி அற்புதர் " என அழைக்கப்படுகிறார்.

அவரால் இத்தனை வல்ல செயல்கள் செய்ய இயன்றதற்கான காரணம் என்ன? ஏனெனில் அவர் வல்ல தேவனோடு இணைந்திருந்தார். நன்மைகளின் உறைவிடமாம் ஆண்டவர் அந்தோணியாரின் உள்ளத்தில் குடிகொண்டிருந்தார். எனவே அவர் தன்னுடைய பகைவர்களையும் ஏளனம் செய்தவர்களையும் தன் நம்பிக்கையாலும் இறைஉடனிருப்பாலும் ஆண்டவர் பக்கம் ஈர்த்தார். எண்ணற்ற புதுமைகளைப் புரிந்தார். 

இன்றைய வாசகங்களில் காணும் ஆகாபின் மனைவி ஈசபேல் ஒரு திராட்சைத் தோட்டத்தை உரிமையாக்க தீய வழிகளை மேற்கொண்டு நாபோத்தைக் கொன்றாள். இத்தகைய தீய மனநிலையில் நாம் வாழக்கூடாது. மாறாக இயேசு கூறியதைப் போல தீமை செய்வோருக்கும் நன்மை செய்யும் மனநிலையைக் கொண்டவர்களாய் வாழ வேண்டும். இத்தகைய மனநிலையை அந்தோணியார் கொண்டிருந்தார். அவர் நன்மையைப் பேசினார். அவர் நாக்கு இன்றும் அழியவில்லை. நன்மையைச் செய்தார் .எனவே புனிதராய், கோடி அற்புதராய் விளங்குகிறார். எனவே அந்தோணியாரைப் பின்பற்றி நாமும் நன்மையை மட்டுமே பிறருக்குக் கொடுப்போம். நன்மை நிறைந்த ஆண்டவர் தம் நன்மைத் தனங்களால் நம்மை நிரப்ப வரம் கேட்போம். 

 இறைவேண்டல் 
நன்மைகளின் நாயகனே இறைவா! எம் சகோதர சகோதரிகளுக்கு நன்மையை மட்டுமே நினைப்பவர்களாகவும் செய்பவர்களாகவும்  நாங்கள் வாழ புனித அந்தோணியாரின் வழியாய் எமக்கு ஆசி புரிய வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராஜசிங்கமங்கலம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

9 + 5 =