மூவொரு இறைவனின் அருளைப் பெறுவோமா?! | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


பொதுக்காலத்தின் பதினொன்றாம் ஞாயிறு
மூவொரு இறைவன் பெருவிழா
I: பழ 8:22-31
II: திப 8:4-9
III: உரோ 5:1-5
IV: யோவா: 16:12-15

இணைந்து இருப்பதில் தான் இனிமை இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் இணைந்து இறைவனிடம் பிறரோடும் நம்மோடும் வாழ்வதில்தான் உண்மையான வாழ்வின் இனிமை இருக்கின்றது. ஏனெனில் திராட்சைச் செடியோடு இணைந்துள்ள கொடிதான் முழுமையான பலனை கொடுக்க முடியும். எனவே நம்முடைய வாழ்க்கையில் இணைந்து வாழ்வதில் இனிமையைக் காண முயற்சி செய்வோம்.

கத்தோலிக்கத் திருஅவையில் மிகப்பெரிய நம்பிக்கை மூவொரு இறைவனின் மறைபொருள் மீது கொண்டிருக்கும் அளவுகடந்த நம்பிக்கை. இந்த நம்பிக்கை கத்தோலிக்கத் திருஅவையின் அடித்தளமாகவும் ஆணிவேராகவும் இருக்கின்றது. நம்முடைய கத்தோலிக்கத் திருஅவையில் அனைத்து திருவழிபாட்டு கொண்டாட்டங்களும் மூவொரு இறைவன் வைத்தே தொடங்கப்படுகிறது. மூவொரு இறைவனை வைத்தே நிறைவு பெறுகின்றது என்பதை நாம் ஆழமாக புரிந்துகொள்ள அழைக்கப்படுகிறோம். 

தந்தை மகன் தூய ஆவியாரின் பெயரால்தான் ஒவ்வொரு கட்டளையை கிறிஸ்தவரின் வாழ்வும் தொடங்குகிறது. வாழ்வு முடிவு பெறுவதும் இதில்தான். மனித அறிவை தாண்டி மனித அறிவுக்கு எட்டாத மறைபொருளாக இருப்பது மூவொரு இறைவன் மீது கொண்ட நம்பிக்கை. மூவொரு இறைவன் ஒரே திருவுளம் கொண்டவர்களாகவும் ஒரே மனநிலை கொண்டவர்களாகவும் ஒரே ஒன்றிப்பு கொண்டவர்களாகவும் ஒரே வல்லமை கொண்டவர்களாகவும் ஒரே தன்மை கொண்டவர்களாகவும் விளங்குகின்றனர். உடம்பிலிருந்து ஒரு மனிதனுடைய இதயத்தை இவ்வாறு பிரிக்க முடியாதோ, அதேபோல மூவொரு இறைவன் ஒருவர் மற்றவரிடம் இருந்து பிரிக்க முடியாது. இதுதான் நமது திருஅவையின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையின் வழியாகத்தான் நாம் உயிருள்ள கிறிஸ்தவர்களாக வாழ்கிறோம்.

மூவொரு இறைவன் நம் ஒவ்வொருவரையும் கண்ணின் கண்மணி போல வழி நடத்திக் கொண்டிருக்கின்றனர். தந்தையான கடவுள் உலகைப் படைக்கிறார். மகன் இயேசு அதனை மீட்கிறார். தூய ஆவி அதனை புனிதப்படுத்தும் பணி செய்கிறார். இவ்வாறாக மூவரும் ஒரே ஆள் தன்மையோடு மக்களின் மீட்பு பணியை செய்வதை பார்க்கிறோம்.

எனவே திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் மூவொரு இறைவனின் தெய்வீக தன்மையில் பங்குகொள்ள அழைக்கப்படுகிறோம். ஒரு இறைவன் வெளிப்படுத்துகின்ற அன்புறவில்  அகமகிழ நாம் அழைக்கப்படுகிறோம். ஒரே ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை, ஒரே கடவுள் தன்மை என் உறுதியான நம்பிக்கை என்மீது வாழ்வைக் கட்டி எழுப்பும் போது நம்முடைய வாழ்வில் மகிழ்வும் நிறைவும் கிடைக்கிறது. 

நாம் வாழும் இவ்வுலகத்தில் சாதி, மொழி, கலாச்சாரம் என பல்வேறு பிரிவுகளை சந்தித்து ஒற்றுமை இல்லாமல் இருப்பதைப் பார்க்கிறோம். எனவே அவற்றையெல்லாம் களைந்துவிட்டு மூவொரு இறைவன் வெளிப்படுத்தும் நம்பிக்கையை நமதாக்குவோம். அன்பு உறவிலும் ஒற்றுமையிலும் இணைந்திருத்தலிலும் மகிழ்ச்சியிலும் இனிமை காண முயற்சி செய்வோம். அப்பொழுது நிச்சயமாக இந்த உலக வாழ்விலே நிறைவை காணமுடியும். நிறைவாழ்வை நோக்கி பயணித்து மீட்பின் கனியை சுவைக்க முடியும். அதற்கு தேவையான அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! மூவொரு இறைவனாகிய நீர் எங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து திடப்படுத்த வேண்டுமாய் செபிகின்றோம். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராஜசிங்கமங்கலம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

5 + 9 =