Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நம்பிக்கையும் நல்லுறவும் இறைவேண்டலின் இருகண்கள்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் பத்தாம் வியாழன்
I : 1 அர:18:41-46
II : திபா 64:10-13
III : மத்: 5:20-26
இன்றைய இருவாசகங்களும் இறைவேண்டலுக்கு மிகவும் அவசியமான பண்புகளை நமக்கு உணர்த்துவதாய் உள்ளது. முதல் வாசகம் நம்பிக்கையைப் பற்றியும் நற்செய்திவாசகம் நல்லுறவைப் பற்றியும் கூறுகின்றன. இவ்விரு பண்புகளும் மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதவை.
முதல்வாசகத்தில் எலியா இறைவாக்கினர் செபித்ததால் மழை பொழிந்தது என வாசிக்கிறோம். பஞ்சத்தில் வாடிக்கொண்டிருந்த மக்களின் துயரை தனிஒருவராக இருந்து செபித்து எலியா இறைவாக்கினர் துடைத்திருக்கிறார் என்றால் அவருடைய செபத்தின் வலிமையை நாம் அறியமுடிகிறதல்லவா. அந்த வலிமை எங்கிருந்து கிடைத்தது? அது அவருடைய நம்பிக்கையிலிருந்து கிடைத்தது. மலை உச்சிக்கு சென்று முழங்காலிட்டு தன் முகத்தைப் புதைத்துக்கொண்டு செபித்தார் அவர். ஏழுமுறை தன் பணியாளரிடம் மேகம் தென்படுகிறதா எனக் கேட்க இல்லை என்ற பதில் வந்த போதும் அவர் தளரவில்லை. தொடர்ந்து செபித்தார். அவர் ஆண்டவர் மழை பொழிவார் என்ற நம்பிக்கையில் தளரவில்லை. ஏன் அந்த நம்பிக்கையில் தான் அரசனை உணரருந்தச் செல்லுமாறு அனுப்பினார். நம்முடைய இறைவேண்டலில் இத்தகைய நம்பிக்கை உள்ளதா? அது பிறருக்கும் நம்பிக்கையும் நன்மையும் அளிக்கிறதா? சிந்திப்போம்.
இரண்டாவதாக " நல்லுறவு".நல்லுறவு இல்லாத இறைவேண்டலும் பலியும் வீண் என நற்செய்தி ஆணித்தரமாகக் கூறுகிறது. நல்லுறவு இன்றி பிறரோடு பிணங்கி இருந்தோமெனில் கடவுளோடு நம்மால் நிச்சயம் இணைந்து இருக்க முடியாது. ஏனென்றால் கடவுளோடு உள்ள நல்லுறவு நம்மை மனிதரோடு இணைக்கிறது. மனிதரோடு கொண்டுள்ள நல்லுறவு கடவுளை அறியச்செய்கிறது. பகை நம்மை தனிமைப்படுத்துகிறது. நம்முடைய இறைவேண்டலில் நாம் பகையைப் பாராட்டி நல்லுறவு கொள்ளாமல் இருந்தோமென்றால் நாம் எத்தனை தடவை செபித்தாலும் திருப்பலியில் பங்கேற்றாலும் அது வீண்தான்.
எனவே நம்பிக்கையும் நல்லுறவும் கொண்டவர்களாய் இறைவேண்டல் செய்ய முயலுவோம். நிச்சயம் வறண்ட நம் வாழ்வில் இறை அருள் மழை பொழியும். நமது பலியும் இறைவனுக்குகந்ததாய் மாறும்.
இறைவேண்டல்
வாழ்வளிக்கும் இறைவா!
எமது வாழ்வு முழுவதையும் நம்பிக்கையும் நல்லுறவும் கொண்ட இறைவேண்டல் பலியாக மாற்றும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராஜசிங்கமங்கலம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment