மீட்புத் திட்டத்தில் இறைவனுடன் உழைக்கத் தயாரா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


Daily Reflection - March 25, 2022

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா
மு வா: எசா: 7: 10-14; 8: 10b; II: 
ப பா: திபா: 40: 6-7. 7-8. 9. 10; 
இ வா: எபி: 10: 4-10;  
ந வா :லூக்:  1: 26-38

 மீட்புத் திட்டத்தில் இறைவனுடன் உழைக்கத் தயாரா! 

இன்று திருஅவையானது கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழாவைக் கொண்டாடுகிறது. மீட்பு வரலாற்றில் மிக முக்கிய நாளிது. தன் ஒரே மகனை உலக மாந்தரின் மீட்புச் சின்னமாய் தெரிவித்த நாளிது. கடவுளின் கரத்தில் அன்னை மரியா கருவியாக உருமாறிய தினம் இது.  இதோ ஆண்டவரின் அடிமை என்று தன் விருப்பத்தை விலக்கி இறைவிருப்பத்தை ஏற்ற அன்னை மரி வழியாக மீட்பு வரலாற்றில் ஒரு மிகப்பெரும் திருப்பத்தை இறைவன் கொண்டுவந்த இந்த நாளில் அன்னை மரியாவைப் போல ஆண்டவரின் மீட்புத்திட்டத்தில் உடனுழைப்பாளிகளாக மாறவே நாமும் அழைக்கப்படுகிறோம்.

பாவத்தின் பிடியில் சிக்கி , அடிமைத்தனம் எனும் துயரத்தில் தவித்த இஸ்ரயேல் மக்களை மீட்க கடவுள் பலரை அனுப்பினார். எத்தனையோ நீதித்தலைவர்கள்,எத்தனையோ அரசர்கள், பல இறைவாக்கினர்களை அனுப்பியும் கடவுளிடம் திரும்பி வர அவர்கள் விரும்பவில்லை.எனவே தானே மக்களோடு இருந்து அவர்களுக்கு முன்மாதிரியாய் வாழ்ந்து மக்களின் மீட்பை உறுதிப்படுத்த எண்ணினார் இறைவன். தன் ஒரே மகனை மனிதனாய் பிறக்கவைத்து , மனிதனின் சுக துக்கங்களில் உடனிருப்பவராக அனுப்பி வைக்க திருஉளம் கொண்டார் இறைவன். அவ்வாறு தன் மகனை உலகிற்கு அனுப்ப தகுதியுள்ள ஒருவரைத் தேடி கண்டடைந்தார் அன்னை மரியாவை. 

இங்கே அன்னை மரியா இறைமகனைப் பெற்றெடுத்ததால் மட்டும் புகழப்படவில்லை. மாறாக இதோ உமது அடிமை என்று அவர் கூறிய அந்த வார்த்தைக்காகவே புகழப்படுகிறார். அவ்வார்த்தைகளைக் கூறி மீட்புத் திட்டத்தில் கடவுளின் உடனுழைப்பாளியாக புதுப்பிறப்பெடுக்கிறார் மரியா.

இன்று நாம் வாழும் இவ்வுலகம் முழுமையாக மீட்பு பெற்றுவிட்டதா எனக் கேட்டால் இல்லை என்ற பதிலையே நாம் சொல்ல முடியும். நாம் அனைவருமே நம்முடைய மீட்புக்காகவும் உலகத்தின் மீட்புக்காகவும் அனுதினமும் உழைக்க கடமைபட்டுள்ளோம். அதைவிட கட்டாயத்தில் உள்ளோம் எனவே கூறலாம்.அன்னை மரியாவுக்கு கபிரியேல் தூதர் வழி கடவுளிடமிருந்து அழைப்பு வந்ததைப்போன்று நமக்கும் பல்வேறு விதங்களில் மீட்புக்காக கடவுளோடு உழைக்க அழைப்பு அன்றாடம் வந்துகொண்டே இருக்கின்றது. 

 
குடும்பத்தின் மீட்பிற்காக உடனுழைக்க பெற்றோர்கள் அழைக்கப்படுகின்றனர். மாணவர்களுக்கு நல்லறிவு புகட்டி சிறந்த சமுதாயத்தை உருவாக்கி மீட்புக்காக உடனுழைக்க ஆசிரியர்கள் அழைக்கப்படுகின்றனர். சமூக அநீதிகளை எதிர்த்து குரல்கொடுத்து மீட்புக்காக உழைக்க சமூக ஆர்வலர்கள் அழைக்கப்டுகின்றனர்.மக்களின் ஆன்மீக வாழ்வை சீர்படுத்தி   வழிநடத்த ஆன்மீக வாதிகள் அழைக்கப்படுகின்றனர். பின்தங்கிய மக்களின் வாழ்வை மேம்படுத்தி மீட்க அரசியல் வாதிகள் அழைக்கப்படுகின்றனர். நோயிலிருந்து விடுதலை வழங்க மருத்துவ பணியாளர்கள் அழைக்கப்படுகின்றனர். இவ்வாறாக எல்லோருக்கும் மீட்பின் உடனுழைப்பாளியாக வாழ அழைப்பு இருக்கிறது.  அவ்வழைப்பில் அன்னை மரியாவைப் போல இதோ ஆண்டவரின் அடிமை என்ற மனநிலையில் நாம் கடவுளோடு ஒத்துழைக்கும் போது அங்கே நாம் இயேசுவின் வருகையை அறிவிக்கிறோம். எனவே நாம் இருக்கின்ற நிலையில்  மீட்புத் திட்டத்தில் கடவுளின் உடனுழைப்பாளிகளாய் விளங்க முயற்சி செய்வோம். கடவுள் நம்மோடு என்ற நற்செய்தியை இதோ ஆண்டவரின் அடிமை என்ற உணர்வோடு பறைசாற்றுவோம்.

 இறைவேண்டல் 
மீட்பின் இறைவா!   உலகை மீட்கும் பணியில் எம்மால் இயன்ற அளவு உம்மோடு ஒத்துழைக்க வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

6 + 14 =