கடவுளின் நியமங்களை வாழ்வாக்குவோமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


Daily Reflection - March23, 2022

தவக்காலம் மூன்றாம் புதன்
I : இணை 4: 1, 5-9
II :  தி பா 147: 12-13. 15-16. 19
III : மத் 5: 17-19

நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் என் ஆசிரியர் முக்கியமான வேலை பார்ப்பதற்காக அனைவரையும் சற்று அமைதிகாக்கும் படி கூறிவிட்டு வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார். சில மணித்துளிகள் அமைதியாக இருந்த மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பேசத் தொடங்கினர். வகுப்பில் சப்தம் அதிகரிக்க ஆரம்பித்தது.ஆசிரியர் இரண்டு மூன்று முறை மேசையில் தட்டி அமைதிப்படுத்த முயற்சி செய்த பின்னும் அமைதியாகவில்லை. பின் தன் கையில் ஒரு  பிரம்பை எடுத்து மிகவும் சப்தமிட்டுக் கொண்டிருந்த இருவரை லேசாக அடித்தார். வகுப்பு அமைதியானது. அப்போது என் அருகில் வந்து " நீ மட்டும் தான் நான் சொன்னதற்கு கீழ்படிந்து அமைதியாக இருந்தாய்.  நல்ல பிள்ளை " என பாராட்டினார். அவ்வார்த்தைகள் என்னை மிகவும் மகிழ்ச்சி படுத்தியது.என் ஆசிரியரிடமிருந்து நான் பெற்ற முதல் பாராட்டு அது.அப்போது நம் மூத்தோர்களின் சொல் கேட்டு நடக்கும் போது நமக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்ற எண்ணம் என் மனதிலே பதிந்துவிட்டது.

ஆம் அன்புக்குரியவர்களே  நாம் நம்முடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள், மூத்தோர்களின் சொல்கேட்டு நடக்கும் போது நமக்கு நல்லபிள்ளை என்ற பெயர்மட்டும் கிடைப்பதில்லை. மாறாக நாம் நல்லொழுக்கத்திலும் பிறருக்கு முன்மாதிரியாகவும் வளர்கிறோம். பள்ளியின் விதிமுறைகளைக் கடைபிடிக்கும் மாண ருக்கு ஒழுக்கத்தில் சிறந்த மாணவன் என பரிசளிப்பதை நாம் காண்கிறோம். அலுவலக விதிமுறைகளின் படி சரியாக வேலை செய்பவர்களுக்கு பதிவு உயர்வுகள் வழங்கப்படுவதை நாம் அறிவோம். உலக நியமங்களை கடைபிடித்தலுக்கே இவ்வளவு உயர்வு தரப்படும் போது கடவுளின் நியமங்களையும் கட்டளைகளையும் நாம் கடைபிடித்தால் நமக்கு எத்துணை நன்மை கிடைக்கும் என்பதை நாம் இன்று உணர்ந்து வாழ அழைக்கப்பட்டுள்ளோம்.

இன்றைய முதல் வாசகத்தில் மோசே இஸ்ரயேலரிடம் கடவுளின் நியமங்களைக் கடைபிடிப்பதில் கருத்தாய் இருக்குமாறு அறிவுறுத்துகிறார். இதனால் அவர்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டை உரிமையாக்குவதோடு ஞானமும் ஆற்றலும் உள்ளவர்கள் என பிற மக்களால் புகழப்படுவார்கள் எனவும் கடவுள் அவர்களை நெருங்கி இருப்பார் எனவும் கூறுகிறார். 

அதேபோல நற்செய்தியிலும் இயேசு இறைவாக்கையும் திருச்சட்டத்தையும் நான் நிறைவேற்ற வந்தேன் எனக் கூறி அத்திருச்சட்டத்தையும் இறைவாக்கையும் கடைபிடிக்கிறவர் விண்ணரசில் மிகப்பெரியவராய் கருதப்படுவார் என்று சொல்லி நம் அனைவரையும் கடவுளின் கட்டளைகளையும் இறைவார்த்தையையும் வாழ்வாக்க அழைப்பு விடுக்கிறார்.

கடவுளின் கட்டளை எது?  அவருக்கு பணிந்து அன்பு செய்து பிறரையும் அன்பு செய்து வாழ்வதே. இறைவார்த்தைகள் கூறும் அன்பை நாம் கடைபிடிக்கும் போது நாம் ஞானமுள்ளவர்களாகவும் ஆற்றலுள்ளவர்களாகவும் விண்ணரசில் பெரியவர்களாகவும் எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளை நெருங்கியவர்களாகவும் விளங்குகிறோம். எனவே கட்டளைகளையும் இறைவார்த்தையையும் வாழ்வாக்க முயலுவோம். 

இறைவேண்டல் 
எம் அன்பு இறைவா!உமது கட்டளைகளையும் நியமங்களையும் வாழ்வாக்கி உமது ஆசிரை நிறைவாகப்பெறும் மக்களாக வாழ வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

5 + 9 =