மன்னியுங்கள் மன்னிக்கப்படுவீர்கள்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


தவக்காலம் மூன்றாம் செவ்வாய்
I: தானி 3:25,34-43
II :  தி பா 24:4-6,7-9
III : மத் 18:21-35

மனித வாழ்க்கையில் உறவு என்பது அத்தியாவசியமான ஒன்று. ஏனெனில் எந்த மனிதனும் தனியாக வாழ முடியாது. ஒருவரை ஒருவர் சார்ந்து தான் வாழவேண்டும். மனிதன் மற்ற மனிதர்களை மட்டுமா சார்ந்து வாழ்கிறான்?இல்லை.முழு இயற்கையையும் சார்ந்து வாழுகிறான். அதையும் தாண்டி கடவுளைச் சார்ந்து வாழ்கிறான். இவ்வாறு ஒருஒருவரை தேவையின் நிமித்தம் சார்ந்து வாழாமல் உள்ளார்ந்த அன்போடு சார்ந்து வாழும் போதுதான் அங்கே உறவு  வளர்கிறது. அந்த உறவின் வளர்ச்சியும் முதிர்ச்சியும் எப்போதும் சீராக இருப்பதில்லை. மாறாக அங்கே மனக்கசப்புகளும், சண்டை சச்சரவுகளும் ,கருத்து வேறுபாடுகளும், ஏற்றுக்கொள்ளாமையும், கொடுத்தல் வாங்கல்களும் இருக்கத்தான் செய்யும். பல சமயங்களில் இவை அனைத்தையும் நாம் கடந்து சென்று உறவுகளைத் தொடர வேண்டிய நிலை உள்ளது. அதற்கு மன்னிக்கின்ற குணம் மிக மிக அடிப்படைத் தேவையாகின்றது.

இன்றைய நற்செய்தியில் மன்னிப்பு என்கிற உன்னதமான பண்பினை நாம் நமதாக்க வேண்டும் என்ற கருத்தை ஆண்டவர் இயேசு நமக்கு விளக்குகிறார். எத்தனை முறை மன்னிக்கவேண்டும் என்று கேட்ட சீடரிடம் ஏழுமுறையல்ல எழுபது தடவை ஏழு முறை என்று கூறி வாழ்நாள் முழுதும் நமக்கெதிராய் குற்றம் புரிந்தவரை மன்னிக்க வேண்டும் என்ற ஆழமான சிந்தனையை நமக்கு வழங்குகிறார்.

 அதுவும் போதாதென்று நாம் பெற்ற மன்னிப்பு அனுபவத்தை பிறரோடும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும் போது அதைப் பயன்படுத்தி பிறரை மன்னிக்க வேண்டும் என்பதை தன்னுடைய பெரிய கடனிலிருந்து  மன்னிப்பெற்ற பின்னும் தன்னிடம் வாங்கிய சிறுகடனை அடைக்க இயலாதவரை மன்னிக்காததால் தண்டனை பெற்ற   வேலையாள் உவமை மூலம் ஆண்டவர் இயேசு கூறி நம்மை மன்னிக்கின்ற மக்களாக வாழ அழைக்கிறார்.

"உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார்.” என்ற வார்த்தைகள் மன்னிப்பின் மகத்துவத்தை நமக்கு மீண்டுமாக உணர்த்துகிறது. கடவுள் பரிவுள்ளவர். நாம் அறியாமல் செய்கிற பாவத்தையும் அவர் மன்னிக்கிறார். அறிந்து செய்கிற பாவத்தையும் மன்னிக்கிறார். நாம் பாவம் செய்யும் போதெல்லாம் மன்னிக்கிறார். இதை ஒப்புரவு அருட்சாதனத்தின் மூலம், தினசரி திருப்பலியில் முதல் பகுதியிலேயே வருகின்ற மன்னிப்பு வேண்டலின் மூலமும் நாம் உணர்கிறோம். " ஆண்டவர் நம் குற்றங்களை கணக்கில் கொண்டால் நம்மால் இவ்வுலகில் வாழ இயலாது என்கிறார் திருப்பாடல் ஆசிரியர். அப்படி இருக்க நமக்கெதிராக ஒருவர் செய்கிற சிறுபிழையைக் கூட நாம் மன்னிக்கத் தயங்குவது ஏன்? நாம் மன்னிக்காவிடில் நாம் விண்ணகத் தந்தையின் பிள்ளைகளாக இருக்கவே முடியாது.

அன்புக்குரியவர்களே மன்னிக்கின்ற மனம் பல நோய்களுக்கு மருந்தாகிறது என்கின்றனர் உளவியலாளர்கள். நம்முடைய குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கும் போதும், பிறர் குற்றகளை நாம் மன்னிக்கும் போதும் நமது மனம் லேசாகிறது. மனபாரம் குறைகிறது. இது பலவித நோய்களிலிருந்து நம்மைக் காக்கிறது. இவை அனைத்தையும் மனதில் இறுத்தி மன்னிக்கின்ற மக்களாக வாழ முயல்வோம். விண்ணகத் தந்தையின் இரக்கமும் மன்னிப்பும் எப்போதும் நம்மைத் தொடரும்.

 இறைவேண்டல் 
இரக்கத்தின் தேவனே! உம்மைப்போல நாங்களும் மன்னிக்கின்றவர்களாக வாழ்ந்து உம் இரக்கத்தை மென்மேலும் பெற உதவி செய்யும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 8 =