அனைவரையும் அரவணைப்பவர் நம் கடவுள்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


தவக்காலம் மூன்றாம் திங்கள்
I: 2அரசர் 5:1-15
II :  தி பா 42: 1. 2. ; 43: 3. 4 
III: லூக் 4: 24-30

கடவுள் தனக்கென ஓர் இனத்தை ஆபிரகாம் வழியாக தேர்ந்து அவ்வினத்தை பெரிய இனமாக்கினார். அவர்களுக்கு இஸ்ரயேல் எனப் பெயரிட்டு அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டு " தன் பிள்ளைகள் " என்ற உரிமையை வழங்கினார் என்பதை பழைய ஏற்பாட்டில் நாம் வாசிக்கிறோம். ஆனால் அதற்காக அவர் புறஇனத்தாரை வெறுக்கவில்லை. அவர்களையும் அன்புசெய்தார். அவர்களுடைய நம்பிக்கையின் பொருட்டு அவர்களை மீட்டார். அனைவருக்கும் தந்தையாகவும் கடவுளாகவும் அவர் இருக்கிறார் என்ற கருத்தை இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. 

முதல்வாசகத்தில் இறைவாக்கினர் எலிசா வாயிலாக நாமான் என்ற சிரிய நாட்டுப் படைத்தலைவனின் தொழுநோயை நீக்கிய நிகழ்வு நமக்குத் தரப்பட்டுள்ளது. இந்நிகழ்வையே இயேசுவும் நற்செய்தி வாசகத்தில் மேற்கோள் காட்டுகிறார்.
அத்தோடு எலியா இறைவாக்கினருக்கு பஞ்ச காலத்தில் உணவு வழங்க அவரை கடவுள் அவருடைய இனத்தாரிடமில்ல மாறாக சாரிபாத் கைம்பெண்ணிடமே அனுப்பினார். இதன்மூலம் இயேசு கூற விரும்பிய இரு முக்கியச் செய்திகளை நாம் காணலாம்.

முதலாவதாக தங்களைத் தானே தேர்ந்தெடுக்கப்பட்ட இனம், உடன்படிக்கை மக்கள் என எண்ணிக்கொண்டு பிற இனத்தவரை குறைந்த பட்சம் மனிதர்களாகக்கூட கருதாத இஸ்ரயேல் மக்களுக்கு கடவுள் பொதுவானவர், அனைவரையும் அன்பு செய்பவர் என்ற கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார் இயேசு. 

இரண்டாவதாக கடவுள் எவ்வளவுதான் இஸ்ரயேல் மக்களை அன்பு செய்த போதிலும் அவர்கள் பற்பல முறைகள் கடவுளைப் புறக்கணித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் மனமாற்றத்திற்காக அனுப்பப்பட்ட இறையடியவர்ளை ஏற்றுக்கொள்ளாமலும்  மதிக்காமலும் அவர்களைத் துன்புறுத்தி பாவ நிலையிலேயே வாழ்ந்தனர். அத்தகைய சமயங்களில் கடவுள் புறஇனத்தார் பலரை தன் மீட்புத் திட்டத்தில் பயன்படுத்தினார் என்ற கருத்தையும் அவர் எடுத்துக்கூறி யூதர்களின் மமதை எண்ணத்திற்கு சவால் விடுக்கிறார். 

அன்புக்குரியவர்களே இதனால் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில் நாம் திருஅவை உறுபினர்களாக தேர்ந்து கொள்ளப்பட்டவர்களாக இருந்த போதும் கடவுள் நம்மைப் போல உலக மக்கள் அனைவரையும் அன்புசெய்கிறார். அவர்களின் நம்பிக்கையின் பொருட்டு அவர்களுக்கு மீட்பளிக்கிறார். அவர்களையும் மீட்புக்காகப் பயன்படுத்துகிறார். எனவே நாம் கிறிஸ்தவர்கள் என்ற பெயர் பொருட்டு பெருமிதம் கொள்ளக்கூடாது. மாறாக நம் விண்ணகக் கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் என்பதைப் பறைசாற்றுவதில் பெருமிதம் கொள்ள வேண்டும் என்பதே .

கிறிஸ்து விண்ணகத்தந்தையின் அன்புள்ளத்தை, பாரபட்சமில்லா அன்பை பிரதிபலித்தார். அனைவரோடும் அவர் ஒன்றாய் இருந்ததால் அவரைச் சார்ந்தவர்களே அவரை வெறுத்தனர். இத்தகைய நிலை நமக்கு வந்தாலும் இயேசுவின் மனநிலையை நமதாக்கிக் கொண்டு கடவுள் அனைவரையும் அரவணைக்கிறார் எனப் பறைசாற்ற தேவையான வரம் கேட்போம்.

 இறைவேண்டல் 
அனைவரையும் அன்பு செய்யும் இறைவா! உம் பிள்ளைகள் நாங்களும் கிறிஸ்துவைப்போல் அனைவருக்கும் பொதுவானவர்களாகவும் உம் அன்பை பாரபட்சம் பார்க்காமல் வழங்குபவர்களாகவும் வாழ அருள்தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

7 + 2 =