பொறாமை எண்ணங்களை அகற்றுவோமா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


தவக்காலம் இரண்டாம்  வெள்ளி
I: தொ.நூ 37: 3-4, 12-13a, 17b-28
II :  திபா 105: 16-17. 18-19. 20-21
III: மத் 21: 33-43, 45-46

சமீபத்தில் வீடு சந்திப்பிற்காக நான் சென்றிருந்த போது ஒரு குடும்பத்தைச் சந்தித்தேன். அக்குடும்பத் தலைவிக்கு இரண்டாவதாக குழந்தை பிறந்திருந்தது. முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் இடையே கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் இடைவெளி. இதனால் முதல் எட்டு ஆண்டுகளும் மிகவும் செல்லமாக தாய் தந்தையின் அன்பை ஒட்டுமொத்தமாகப் பெற்ற முதல் குழந்தை இரண்டாவது குழந்தையின் முகத்தைப் பார்க்கக் கூட விரும்பாமல் ஒரு ஓரமாய் அமர்ந்து அழுது கொண்டிருந்தது. இதற்கு என்ன காரணம்? இனிமேல் தனக்கு அன்பு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயமே. அந்த பயம் அக்குழந்தை மனதில் வெறுப்பையும் பொறாமையையும் விதைத்தது. 

ஆம் அன்புக்குரியவர்களோ தனக்குக் கிடைக்காதது மற்றவருக்குக் கிடைக்கும் போது அதைச் சரியான கண்ணோட்டத்தில் நாம் பார்க்கத் தவறினோம் என்றால் பொறாமை நம் உள்ளத்தை வந்தடையும். இப்பொறாமை நம்மை எத்தகைய தீங்கும் செய்யத் தூண்டும்.எனவே பொறாமை எண்ணம் நம்மை ஆளாமல் நாம் காத்துக்கொள்ள வேண்டும். இக்கருத்தையே இன்றைய வாசகங்கள் நமக்கு விளக்குகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் முதிர்ந்த வயதில் பெற்ற மகன் யோசேப்பின் மேல் இஸ்ரயேல் அதிக அன்பு கொண்டிருந்ததால், அவனுடைய சகோதரர்கள் அவன் மேல் பொறாமை கொண்டனர்.  அவனை பொறாமை எண்ணத்தால் கொல்லவும் துணிந்தனர் என வாசிக்கிறோம். அதைப் போலவே நற்செய்தி வாசகத்தில் திராட்சைத் தோட்டத்து உரிமையாளர் மகனை சொத்துக்காகவும் வஞ்சக எண்ணத்தோடும் கொன்ற குத்தகைக்காரர்களின் உவமையும் பொறாமை எண்ணம் எவ்வாறு ஒருவரை அழிவின் பாதைக்கு இட்டுச் செல்கிறது என்ற கருத்தை நமக்கு விளக்குகிறது.

இயேவை யூதர்கள் வெறுக்கக் காரணம் யாதெனில் மக்கள் தங்களை விட்டுவிட்டு இயேசுவின் பின்னால் செல்கின்றனர் என்ற பொறாமை எண்ணமே.ஆகையால் அன்புக்குரியவர்களே, நமக்குக் கிடைக்க வேண்டியவை நமக்குக் கிடைத்தே தீரும் என்பதை உணர்வோம். பிறருடைய உடைமை, வளர்ச்சி, மதிப்பு போன்றவற்றை எண்ணி மகிழ்ந்து பாராட்டாவிட்டாலும்,அவர்களைக் குறித்த பொறாமை எண்ணங்கள் நம்மிலே வளராமல் காத்துக்கொள்வோம். ஏனெனில் இவ்வெண்ணம் நம்மைச் சூழ்ந்தவர்களை மட்டுமல்ல நம்மையும் ஒரு நாள் அழித்து விடும். நம்மிலேயும் நாம் கொண்டிருப்பவற்றிலேயும் நிறைவு கண்டு, நன்றி உள்ளவர்களாய் வாழ்ந்து பொறாமை எண்ணங்களை அகற்றிட முயல்வோம்.

இறைவேண்டல் 
அன்பு இறைவா!அழிவுக்கு இட்டுச்செல்லும் பொறாமை எண்ணங்களைக் களைய எமக்கு அருள்தாரும்.  ஆமென்.

Add new comment

18 + 2 =