உடன்படிக்கை உறவில் நிலைத்து வாழத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


தவக்காலம் இரண்டாம் ஞாயிறு
I: தொ.நூ15: 5-12, 17-18, 21b
II :  தி.பா 27: 1. 7-8. 9abc. 13-14
III :பிலிப்பி 3: 17- 4: 1
IV : லூக் 9: 28b-36

அன்பர்கள் இருவர் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனராம். " நான் சாகும் வரையில் உன்னோடு இருப்பேன். உனக்காக வாழ்வேன்" என்று ஒருவர்  சொல்லி நாம் இருவரும் ஒப்பந்தம் போடலாம் என்றார். மற்றவர்  " முதலில் நாளை நீ என்னோடு இருப்பாயா என்று பார்க்கலாம். பின்னர் சாகும் வரை உள்ள ஒப்பந்தத்தைப் பற்றி யோசிக்கலாம்" என்று   கூறினாராம்.

 உடன்படிக்கை அல்லது ஒப்பந்தம் என்பது இரு தரப்பினரிடையே மனம் ஒத்து செய்யப்படுகின்ற வாழ்க்கைத் திட்டம். அந்த உடன்படிக்கையை உடையாமல் காக்க  இருதரப்பினருக்கும்  சமமான பங்கு உண்டு. திருமணத்தில் நாம் உடன்படிக்கையைக் காண்கிறோம். வியாபாரத்தில் நாம் உடன்படிக்கையைக் காண்கிறோம். நட்பில் உடன்படிக்கை இருக்கிறது. இவ்வாறு ஏதாவது ஒரு வகையில் நாம் எல்லாருமே உடன்படிக்கைக்கு உட்பட்டவர்களாக அல்லது ஒப்பந்தம் போடுபவர்களாக இருக்கிறோம். அதுவே எதார்த்தம்.ஆனால் நம்மில் எத்தனை பேர் உடன்படிக்கையில் நிலைத்து இருக்கிறோம் என சிந்தித்தால் நமக்கு வருத்தமே மிஞ்சுகிறது.

அன்புக்குரியவர்களே நமது கடவுள் உடன்படிக்கையின் கடவுள். ஆங்கிலத்தில் " God of Covenant" எனக் கூறுவர். உடன்படிக்கையால் தனக்கென ஒரு பெரிய இனத்தை சொந்தமாக்கியவர் அவர். இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாமை பெரிய இனமாக்குவேன் என்று வாக்களித்த கடவுள் அதை நிறைவேற்ற உடன்படிக்கையும் செய்து கொள்கிறார்.இஸ்ரயேல் மக்கள் கடவுளோடு கொண்டுள்ள உடன்படிக்கையிலிருந்து பலமுறை தவறினாலும் கடவுள் எள்ளளவும் தவறவில்லை என்பதற்கு முழு விவிலியமும் ஆதாரமாய் இருக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகமும் அதற்கு ஒரு சான்று. இயேசு தாபோர் மலையில் உருமாறுகிற நிகழ்வு நமக்குத் தரப்பட்டுள்ளது.அங்கே இறைகுரல் ஒலிக்கின்றது. இவரே நான் தேர்ந்து கொண்டவர் என்ற வார்த்தைகளை கடவுள் கூறுகிறார். எதற்காகத் தேர்ந்து கொள்ளப்பட்டவர் இயேசு? உடன்படிக்கை உறவில் நிலைக்காமல் அடிமை வாழ்வு வாழ்ந்த கடவுள் தேர்ந்து கொண்ட மக்களை உரிமை வாழ்வுக்கு மீட்கும் மீட்பராகத் தேர்ந்து கொள்ளப்பட்டார் இயேசு. இங்கே உடன்படிக்கை உறவில் நிலைத்து நிற்கும் கடவுளை நாம் காண்கிறோம்.

இச்சிந்தனைகள் நம்மையும் உடன்படிக்கை உறவில் நிலைத்து வாழ அழைக்கின்றன.  இரண்டாம் வாசகத்திலும் புனித பவுல் "ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருங்கள்" எனக் கூறுகிறார். ஆண்டவரோடு அவருடைய பிள்ளைகள், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற உடன்படிக்கை உறவில் நாம் நிலைக்கும் போது உருமாற்றத்தில் மாட்சியுடன் விளங்கிய நம் ஆண்டவர் இயேசுவைப் போலவே நாமும் மாட்சியுடன் விளங்க முடியும். அது நம் வாழ்விலும் நாம் பிறரோடு கொண்டுள்ள உறவிலும் உடன்படிக்கையிலும் நிச்சயம் வெளிப்படும். எனவே இறைவனோடு நிலைத்திருப்போம். இயேசுவுக்கு செவிசாய்ப்போம்.உடன்படிக்கை மக்களாய் வாழ அனுதினமும் முயற்சிப்போம். 

இறைவேண்டல் 
உடன்படிக்கையின் தந்தையே! நீர் எம் ஆண்டவர் நாங்கள் உம் மக்கள் என்ற உடன்படிக்கையில் நிலைத்து உம் மாட்சியில் மகிழ வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 3 =