நம்மை நோக்கி வரும் இறைவனை நோக்கி நம் உள்ளத்தைத் திருப்புவோமா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


ஆண்டின் பொதுக்காலத்தின் ஐந்தாம் சனி 
I: 1 அர: 12: 26-32; 13: 33-34
II :  திபா 106: 6-7. 19-20. 21-22
III:  மாற்:   8: 1-10

தாயுள்ளம் கொண்டவர் நம் கடவுள். அன்பின் மொத்த உருவமாக இருக்கிறார். பரிவோடு பிள்ளைகளாகிய நம் தேவைகளை நாம் கூறாமலேயே நிறைவேற்றுபவர் அவர். எந்நாளும் நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கிறார். நாம் அவரைத் தேடாத போதும் அவர் நம்மைத் தேடி வருகிறார். அத்தகைய இறைவனை நோக்கி நம்முடைய உள்ளங்களை நாம் திருப்புகிறோமா ? அல்லது நம் ஆதாயங்களுக்காக அவரைவிட்டு திசைமாறிச் செல்கிறோமா?  எனச் சிந்திக்க இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.

மனித மனம் பெரும்பாலான சமயங்களில் சுயநலம் நிறைந்ததாகவும் ஆதாயம் தேடுவதாகவும் இருக்கின்றது.அதை நிறைவேற்ற எத்தகைய செயலையும் துணிந்து செய்யத் தயாராக இருக்கிறான் மனிதன்.  கடவுளையும் மனிதனையும் புறக்கணித்து தன் போக்கில் வாழும் மனிதர்கள் பலர். அதற்கு உதாரணமாக இன்றைய முதல்வாசகத்தில் நாம் காணும் அரசன் ஜெரோபவாம் இருக்கின்றான். மக்கள் எருசலேமிற்கு அடிக்கடி சென்றுவந்தால் கடவுளின் பக்கம் திரும்பி விடுவார்கள். தமது ஆட்சி கைவிட்டுப் போய்விடும் என எண்ணி தம் முன்னோர்களை விடுவித்து வழிநடத்திய கடவுளைப் புறக்கணித்து, பொற்கன்றுகளைச் செய்தான். அத்தோடு ,அவற்றை  எகிப்திலிருந்து தம் முன்னோரை  மீட்ட கடவுள் என்று மக்களை நம்பவைத்து, அவைகளை வணங்கவும் வைத்தான். தன் பதவிக்காக தன் ஆட்சிக்கு உட்பட்ட மக்களையும் கடவுளைப் புறக்கணிக்க வைத்தான். கடவுளைப் புறக்கணித்து தனக்குத் தானே அழிவைத் தேடிக்கொண்டான் அவன்.

மனிதன் தன்னைப் புறக்கணித்தாலும் கடவுள் தன் மக்களைப் புறக்கணிப்பதில்லை. அவன் பின்னே தேடி வருகிறார் அவர். அவர்களின் தேவைகளையும் நிறைவேற்றுகிறார். இன்றைய நற்செய்தி வாசகம் கடவுளின் இந்த அன்புள்ளத்தை விளக்குகிறது. தன்னுடைய போதனைகளைக் கேட்க வந்த மக்கள்  உணவு அருந்தாமல் களைப்பாய் இருப்பதைக் கண்டு  அவர்களை நோக்கி அக்கறையாய்த் திரும்புகிறது இயேசுவின் உள்ளம். அங்கே தந்தையின் அன்பை இயேசு பிரதிபலிக்கிறார். அவர் தனக்கேன் தேவையில்லாத வேலை? அவர்கள் பசியில் மயங்கி விழுந்தால் நமக்கென்ன பிரச்சினை? அவர்களை அனுப்பிவிட்டு ஓய்ந்திருக்கலாம் என எண்ணவில்லை.தன் ஆதாயத்தையும் சுயநலத்தையும் நாடவில்லை.

ஆம் அன்புக்குரியவர்களே நாம் நம் சுயநலத்தாலும் ஆதாயம் தேடும் மனப்போக்காலும் கடவுளை நோக்கி நம் உள்ளத்தைத் திருப்பாமல் தீயவழிகளில் பயணத்திக்கொண்டிருக்கிறோம். ஆயினும் கடவுளின் மனம் நம்மையே நோக்கிக் கொண்டிருக்கின்றது. அதை உணர்ந்து நம்மைத் தேடி வரும் இறைவன் பால் நம் உள்ளத்தைத் திருப்புவோம். அதற்கான வரம் கேட்போம்.

 இறைவேண்டல் 
எம்மைத் தேடிவந்து அன்பு செய்யும் இயேசுவே! உம் அன்பை மறந்து சுயநலப்போக்கில் செல்லாமல் உம்மை நோக்கி எம் இதயங்களைத் திருப்ப வரமருளும் ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 1 =