Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அமைதியைத் தேடி இயேசுவிடம் செல்லத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
திருவருகைக் காலம் இரண்டாம் திங்கள்
I : எசா: 35: 1-10
II : திபா: 85: 8-9. 10-11. 12-13
III : லூக்: 5: 17-26
திருவருகைக் காலத்தின் முதல் வாரத்தில் எதிர் நோக்கு என்னும் கருத்தை ஆழமாகச் சிந்தித்து இறைவருகைக்காக நம்மையே நாம் தயாரித்தோம். இரண்டாம் வாரம் "அமைதி" யைப் பற்றி சிந்திக்கவும் ஆண்டவர் அருளும் அமைதியை நிறைவாகப்பெற நம்மையே சரியான விதத்தில் தயாரிக்கவும் நமக்கு அழைப்பு விடுக்கிறது. அமைதி என்பது சப்தம் அல்லது ஒலி இல்லாத தன்மையைக் குறிப்பது அல்ல. மாறாக நம்மைச் சுற்றி எவ்வளவு இரைச்சல் இருப்பினும் நமது மனத்தை சலனமில்லாம் வைத்துக்கொள்ளுதலே அமைதியை உணர்தலாகும். இவ்வாறாக நாம் அமைதியை அனுபவிப்பதோடல்லாமல் பிறரும் அமைதியைச் சுவைக்க உதவும் போது அங்கே அமைதி நிறைவு பெறுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு முடக்குவாதமுற்ற மனிதரை குணப்படுத்திய நிகழ்வைத் தியானிக்கிறோம். படுத்த படுக்கையாகக் கிடந்தது அவர் தன் சுய வேலைகளைக் கூட செய்ய இயலாமல் பலவாறு அல்லல்களை அனுபவித்து அமைதியை இழந்து தவித்திருந்திருப்பார். எவ்வளவு வலியையும் வேதனைகளையும் அவர் தாங்கியிருப்பார் என யாராலும் யூகிக்க முடியுமா? அவரை அவ்வளவு துயர்மிகு நிலையில் கண்ட அவருடைய நண்பர்களும் உறவினர்களும் கூட அவருக்காக வருந்தி தங்கள் மன அமைதியை இழந்திருக்கக் கூடும். அச்சமயத்தில்தான் இயேசுவைப் பற்றி கேள்வியுற்ற அவர்கள் இழந்த அமைதியைப் பெற இயேசுவை நோக்கிச் செல்கிறார்கள். அவரைச் சந்திக்க கூரையைப் பிரிக்குமளவுக்கு சிரமம் எடுத்தார்கள். நோயால் வாழ்வின் அமைதியை இழந்த அம்மனிதர் நோய் நீங்கி அமைதி பெற்றார். பாவமன்னிப்பைப் பெற்று உண்மையான அமைதியையும் மகிழ்ச்சியையும் அடைந்தார். இங்கே முடக்கு வாதமுற்றவரை கட்டிலோடு தூக்கிச் சென்றவர்கள் அம்மனிதன் அமைதி பெறத் தூதுவர்களானார்கள்.
மறுபுறம் பரிசேயர்களும் மறைநூலறிஞர்களும் இயேசுவைக் குறித்து பொறாமைப் பட்டு தங்கள் அமைதியை இழந்தார்கள். எனவே இயேசுவை குற்றம் சாட்டினார்கள். ஆனால் இயேசுவோ எதையும் பொருட்படுத்தாமல் நன்மை செய்தார். அவர் குற்றம் சுயத்தப்பட்டாலும், நோயுற்றவரின் குற்றத்தை மன்னித்து அங்கே மன்னிப்பதால் மனஅமைதி உண்டாகும் என்ற பாடத்தையும் நமக்குத் தருகிறார்.
அன்புக்குரியவர்களே நம்முடைய வாழ்வில் இன்னல், துயர்,கவலை,நோய்கள், பொறாமை, மன்னிக்காத குணம் இன்னும் பல பிரச்சனைகளால் அமைதியின்றி தவிக்கிறோம். வாழ்வில் இரைச்சல்கள் நிறைந்திருக்கிறது. இத்தருணத்தில் இயேசுவிடம் செல்லவோம். அவர் நமக்கு அமைதியை அருள்வார். அத்தோடு வாழ்வில் அமைதியை இழந்தவர்களை இயேசுவிடம் கூட்டிச்சென்று அமைதியை பெற உதவும் தூதுவர்களாகவும் வாழ முயற்சி செய்வோம். உள்ள அமைதியோடு இறைமகனை வரவேற்கத் தயாராவோம்!
இறைவேண்டல்
அமைதியின் அரசரே! எம் வாழ்வில் பலவற்றால் அமைதியை இழந்து தவிக்கும் நாங்கள் உம்மை நோக்கி ஓடி வந்து நீர் அருளும் உண்மையான அமைதியை அனுபவிக்க வரம் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment