விண்ணகத்தந்தையின் பரிவுள்ளத்தை பிரதிபலிப்பவர்களா நாம்? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


திருவருகைக் காலம் முதல் சனி 
I : எசா: 30: 19-21,23-26
II: திபா 147: 1-2. 3-4. 5-6
III : மத்: 9: 35 - 10: 1, 6-8

பரிவு என்ற தமிழ் சொல்லிற்கு பல அர்த்தங்கள் உள்ளன. இரக்கம், கருணை, மன உருக்கம், போன்ற சொற்கள் பரிவின் அர்த்தத்தை பிரதிபலிப்பதாக உள்ளன. ஒருவரின் துன்பத்தையும் வேதனையையும் பார்த்து மனதுருகி அவருக்கு உதவ முன்வருவது பரிவு. பிறருடைய துன்பத்தில் அவரோடு இணைந்து துன்பத்தைப் பகிர்வது பரிவு. பிறருக்காக கண்ணீர் வடிப்பது பரிவு. குற்றமுணர்ந்து மன்னிப்பு வேண்டும்போது அன்போடு அணுகுதல் பரிவு.பிறரின் இயலாமையை அல்லது பலவீனங்களை மிகைப்படுத்தாத பண்பும் பரிவுதான்.அன்பின் மற்றொரு பரிமாணமே பரிவாகும்.

நம்முடைய விண்ணகத் தந்தை பரிவுள்ளவர்.இஸ்ரயேல் மக்களை தனக்காகத் தேர்ந்த அவர் அம்மக்களிடம் பரிவு காட்டினார். அவர்களின் எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றி, வழிநடத்தி, ஆசிர்வதித்து, தன்னை விட்டு அகன்ற போதெல்லாம் மன்னித்து ஏற்றுக்கொண்டு பரிவுள்ளவராய் இருந்தார் விண்ணகத் தந்தை என பழைய ஏற்பாட்டு நூல்களில் நாம் வாசிக்கிறோம்.

இன்றைய முதல்வாசகம் கடவுளின் பரிவுள்ளத்தை நமக்கு எடுத்துரைப்பதாக உள்ளது. இனி நீங்கள் அழமாட்டீர்கள். கடவுள் உங்கள் மேல் திண்ணமாய் அருள்கூர்வார் என்ற வார்த்தைகள் கேட்கின்ற நமக்கெல்லாம் எவ்வளவு ஆறுதலளிக்கின்றன!

தந்தையின் இந்தப் பரிவுள்ளத்தை முற்றிலுமாக வெளிப்படுத்தியவர்தான் நம் ஆண்டவர் இயேசு. உரோமையரின் அடிமைத் தனத்தாலும் யூதப் பெரியவர்களின் சட்டதிட்டங்களாலும் செல்ல வழியறியாது  அடிமைத்தனத்தில் அலைக்கழிப்பட்ட மக்களை பார்த்த போது அவர்கள்  மேல் பரிவு கொண்டார் இயேசு. 
இயேசுவுடைய போதனைகள் வழியைத் தொலைத்த மக்களுக்கு வழிகாட்டின. அவருடைய வல்ல செயல்கள் துன்பத்தில், வலியில், நோயில் வாடியோருக்கு ஆறுதலாகவும் சுகமாகவும் இருந்தது.அவர் வழங்கிய மன்னிப்பு கடவுளின் இரக்கத்தையும் அருளையும் பெற்றுத்தந்தது. ஆம் இஸ்ரயேலில் வழிதவறிய ஆடுகளுக்காக நான் வந்தேன் என உரைத்த அவர் அவ்வாடுகளை பரிவோடு கண்ணோக்குகிறார்.

அன்றாட வாழ்க்கைப் பயணத்தில் நம்மையும் பரிவோடு கண்ணோக்கி வழிநடத்துகிறார் இயேசு. அப்பரிவை மற்றவருக்கும் காட்டி வழிகாட்டச் சொல்கிறார் அவர்.வழிதவறிய ஆட்டைத் தேடிச் செல்லுங்கள் என சீடர்களுக்கு அவரளித்த அதே கட்டளையை நமக்கும் அளிக்கிறார். அவருடைய அழைப்பை ஏற்று நாமும் பரிவோடு வாழக் கற்றுக்கொள்வோம். இன்சொற்களைப் பேசப் பழகிக்கொள்வோம்.பிறர் துன்பத்தை நம் துன்பமாக எண்ணி அவர்களோடு இணைந்திருந்து ஆறுதல் தர முயற்சி செய்வோம். மன்னித்து மறந்து வாழ்வோம். நம் கண்முன்  யாரேனும் தவறான வழியில் செல்லும் போது அன்போடு வழிநடத்துவோம். இத்தகைய செயல்களால் கடவுளின் பரிவுள்ளத்தை இயேசுவைப் போல நாமும் பிரதிபலிக்க முயலுவோம்.

 

இறைவேண்டல்:

பரிவுள்ள விண்ணகத் தந்தையே! இயேசுவைப் போல உம்முடைய பரிவுள்ளத்தை எம்மிலே நாங்கள் பிரதிபலிக்க வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

8 + 10 =