Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அன்போடும் இறைவேண்டலோடும் இறைவனுக்காகக் காத்திருக்கத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection
திருவருகைக் காலம் முதல் ஞாயிறு; I : ஏரே: 33: 14-16; II: திபா 25: 4-5. 8-9. 10,14; III: 1 தெச: 3: 12-4: 2; IV : லூக்: 21: 25-28,34-36
இரு நண்பர்கள் பல ஆண்டுகள் கழித்து ஒருவரை ஒருவர் சந்திக்கத் திட்டம் தீட்டினர். அப்போது ஒரு நண்பர் வருகின்ற விமானம் சற்றுத் தாமதமானதால் மற்றொருவர் மிகுந்த பதற்றமடைந்தார். எப்பொழுதுதான் விமானம் தரையிரங்கும்? எப்போது என் நண்பனைக் காண்பேன்? என வழிமேல் விழி வைத்துக் காத்துக்கொண்டிருந்தார் அவர். அவருடைய உள்ளமெல்லாம் நண்பனைப் பற்றிய நினைவுகளே. அவருடைய உள்ளம் அவருடைய நண்பனை நோக்கியே இருந்தது. இருவரும் சந்தித்துக்கொண்ட அந்த நொடி, இருவர் மனதிலும் மகிழ்ச்சியைத் தவிர வேறெதுவும் கொடுக்கவில்லை. இதுதான் காத்திருப்பு.
காத்திருப்பது எப்போதுமே சுகமான ஒன்றல்ல. அது பல சமயங்களில் வறட்சியைத் தரும். பதற்றத்தைத் தரும். சந்தேகத்தைத் தரும். பலவித பயத்தைத் தரும். இது மனித வருகைக்கான காத்திருப்பின் அடையாளங்கள். அனால் இறைவருகைக்கான காத்திருப்பு வேறுவிதமானது. அது உண்மையான நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் நம்மிலே உருவாக்குவதோடு நமது வாழ்வைச் சீரமைத்து நம்மைப் புதிய மனிதர்களாக மாற்றுகிறது.
ஆம். அன்புக்குரியவர்களே இன்று நாம் திருவருகைக் காலத்தின் முதல் நாளில் அடியெடுத்து வைக்கிறோம். இறைமகன் இயேசுவை நம் உள்ளத்தில் ஏற்க நம்மையே தயாரிக்க இந்நாட்கள், நமக்கு திருஅவையால் வழங்கப்பட்ட உன்னதமான கொடையாகத் திகழ்கின்றது. நம்மை செபிப்பவர்களாகவும் நற்காரியங்கள் செய்பவர்களாகவும் இறைவனுக்கு ஏற்றவர்களாகவும் வாழத் தூண்டுவதாக இந்நாட்கள் அமைகின்றன. கிறிஸ்தர்களாகிய நமக்கு எல்லா நாட்களுமே திருவருகைக் காலமாகத்தான் திகழ வேண்டும். இருப்பினும் கிறிஸ்து பிறப்பு விழாவை த் தகுந்த உள்ளத்தோடு கொண்டாட நமதுள்ளங்களை பண்படுத்தும் விதமாகவும் இந்த நாளிலிருந்து நமது வாழ்வு நல் மாற்றங்களோடு தொடரவும் திருஅவை நம்மை அழைக்கும் விதமாகவும் இந்நாட்கள் அமைகின்றன என்று சொன்னால் அது மிகையாகது.
இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் கடவுளின் முன் குற்றமற்றவர்களாய் நிற்கவும் அவர் தரும் மீட்பைப் பெறவும் நம்மை அழைக்கின்றன. முதல்வாசகமானது இறைவாக்கினர் எரேமியா வழியாக இறைவன் இஸ்ரயேல் மற்றும் யூதா மக்களுக்கு ஒரு வாக்குறுதியை அளிக்கிறார் என்பதை நாம் வாசிக்கிறோம். தாவீதின் குலத்திலிருந்து வரும் அரசன் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார் என தன் வாக்குறுதியை அளிக்கிறார். உண்மையான விடுதலையை அவர் வழங்குவதாக அவர் வாக்களிக்கிறார்.
உண்மையான அந்த விடுதலை என்ன என நாம் சிந்தித்துப் பார்க்கும் போது இரண்டாம் வாசகம் அதற்கான விடையைத் தருகிறது. புனித பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய மடலில் ஒருவரோடு ஒருவர் அன்பு கொண்டு வாழ்ந்து, கடவுள் தம் தூயோரோடு வரும் போது அவர் முன் குற்றமற்றவராய்த் திகழுங்கள் என்று கூறுகிறார். ஆம் உண்மையான அன்பு வாழ்வு நமது குற்றங்களை எல்லாம் நீக்கி நமக்கு விடுதலை தரும்.இவ்வார்த்தைகள் நம்முடைய அன்பு வாழ்வே இறைவனுக்காக நாம் காத்திருக்கிறோம் என்பதை நமக்கு தொடர்ந்து உணர்த்துகிறது.
மேலும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம் ஆண்டவர் இயேசு மானிடமகனின் வருகையை எதிர்கொள்ள வல்லவராவதற்கு விழித்திருந்து மன்றாடுங்கள் என நமக்கு அரைகூவல் விடுத்துள்ளார். அன்பும் இறைவேண்டலுமே இறைவருகைக்கான உண்மையான தயாரிப்பாகும். நம்மை குற்றமற்றவர்களா உருமாற்றி கடவுளை எதிர்கொள்ள நம்மைத் தயாரிக்கும். எனவே நெஞ்சம் நிறைந்த அன்போடும் இறைவேண்டலோடும் இறைவருகைக்கான நமது காத்திருப்பைத் தொடங்குவோம். இக்காத்திருப்பு நம் வாழ்நாள் முழுதும் தொடரட்டும்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! நாங்கள் அன்பாலும் இறைவேண்டலாலும் குற்றமற்றவர்களாய் மாறி உம்மை எதிர்கொள்ளத் தயாரானவர்களாய் காத்திருக்க வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment