Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இயேசுவின் அரசாட்சி வாழ்வளிக்கும் அரசாட்சி! | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா ஞாயிறு
I : தானி: 7: 13-14
II : திபா: 93: 1. 1-2. 5
III : திவெ: 1: 5-8
IV : யோவா: 18: 33-37
ஒரு வகுப்பில் வரலாறு பாடம் நடத்தும் பொழுது வரலாற்று ஆசிரியர் "அரசர் என்றால் என்ன நினைக்கிறீர்கள்? " என்று கேட்டார். அதற்கு அந்த மாணவன் "அரசர் என்பவர் ஆடம்பரத்தோடும் வசதியோடும் வாழ்பவர். அவருக்கு ஏராளமான பணியாளர்கள் பணிவிடை செய்வர். அரசர் பிறரை அடக்கி அதிகாரத்தோடும் ஆடம்பரத்தோடும் வாழ்பவர்" என்று பதிலளித்தான். இந்த நிகழ்வில் நாம் கண்டதைப் போல, நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அரசர் என்றால் ஆடம்பரமான அதிகாரம் கொண்ட ஒருவர் என்று நினைக்கலாம். இத்தகைய பிம்பத்தைத் தான் இவ்வுலகில் வாழ்ந்த அரசர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொண்டாடும் நாம் உண்மையான அரசர் என்பவர் யார் என்று அறிந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். பிறரை அடக்கி ஆள்பவர் அரசர் அல்ல ; மாறாக, அன்பு செய்து வாழ்பவர் தான் அரசர். பிறரை ஒடுக்கி வாழ்பவர் அரசர் இல்லை; ஒடுக்கப்பட்டோருக்கு வாழ்வு கொடுப்பவரே உண்மையான அரசர். பணிவிடை ஏற்பவர் மட்டும் அரசர் அல்ல; பணிவிடை செய்பவரே அரசர். இவ்வாறாக அரசரின் மேன்மையை அடுக்கிக் கொண்டே போகலாம்.
உண்மையான அரசர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மண்ணுலக விண்ணுலக அரசராகிய ஆண்டவர் இயேசு மிகச் சிறந்த உதாரணம். "நீ யூதரின் அரசனா? " என்று இவ்வுலக அரசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்த பிலாத்து இயேசுவைப் பார்த்து கேட்டான். இதற்கு காரணம் யூதத் தலைவர்கள் இயேசுவின் மீது இத்தகைய குற்றச்சாட்டை வைத்தனர். இத்தகைய குற்றச்சாட்டை வைத்தால் மட்டுமே இயேசு அரசால் தண்டிக்கப்பட முடியும் என்று ஆழமாக அறிந்து குற்றம் சுமத்தினர். எனவேதான் பிலாத்து இத்தகைய கேள்வி கேட்டான். ஆண்டவர் இயேசு "நீராக இதைக் கேட்கிறீரா?" என்ற கேள்வியை பிலாத்துவைப் பார்த்து கேட்டார். பிலாத்து கேட்ட கேள்வியை இயேசு ஆழமாகப் புரிந்து கொண்டவராய் "ஆம் " அல்லது "இல்லை" என்று ஆண்டவர் இயேசு பதில் கூறாமல் வித்தியாசமான பதிலைக் கூறினார். அதுதான் "நீராக இதை கேட்கிறீரா?" என்ற கேள்வியோடு கூடிய பதில். இதற்கு காரணம் பிலாத்து இயேசுவை இவ்வுலகம் சார்ந்த குறுகிய வட்டத்தில் சுருக்கி இந்தக் கேள்வியை கேட்டான். பிலாத்து இந்தக் கேள்வியை கேட்டதற்கு காரணம் உரோமை அரசாட்சியில் யாராவது தான் தான் அரசர் என்று சொன்னால், அவற்றைச் தீர விசாரித்து தண்டனை கொடுப்பது ஆளுநரின் கடமையாக இருந்தது. யூதர்கள் "இயேசு தன்னை அரசராக காட்டிக் கொள்கிறார் " என்று குற்றம் சுமத்தியதால் தான் இத்தகைய கேள்வியைக் கேட்டார்.
ஆனால் ஆண்டவர் இயேசு "எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல" என்று கூறினார். இதற்கு காரணம் மெசியா என்பவர் இவ்வுலகில் பேரரசைக் கட்டுவார் என்று யூத மக்கள் எண்ணினர். உரோமை அரசை வென்று இஸ்ராயேல் மக்களை நிலை நிறுத்துவார் என்று ஆழமாக நம்பினர். ஆனால் இயேசுவின் செயல்பாடுகளில் இவ்வுலகம் சார்ந்த அரசரைப் போல் ஆடம்பரம் இல்லாமல், அன்பே நிறைந்திருந்தது. ஏனென்றால் இயேசுவின் அரசாட்சி விண்ணுலக அரசாட்சியை மையப்படுத்தியது.
இயேசு தன்னை இவ்வுலகம் சார்ந்த அரசரைப் போல் நான் இல்லை என்று சொல்வதற்கு "அரசன் என்று நீர் சொல்கிறீர் " என்று கூறினார். இதற்குப் பொருள் என்னவென்றால் இயேசு தன்னை உலகம் சார்ந்த அரசர்களைப் போல வெளிப்படுத்தவில்லை; மாறாக, தன்னை ஒரு ஆன்மீக அரசராகவும் உண்மைக்குச் சான்று பகரும் அரசராகவும் வெளிப்படுத்தினார். உண்மைக்கு சான்று பகர்வதே அவருடைய முக்கியப் பணியாக வெளிப்படுத்தினார். இவ்வாறாக இன்றைய நற்செய்தி வாசகம் கிறிஸ்து அரசராகிய நம் ஆண்டவர் இயேசுவின் அரசாட்சியை பற்றி தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு அடிப்படையாக இருக்கின்றது.
கிறிஸ்து அரசர் பெருவிழா கொண்டாடும் நம்மை இயேசுவின் உண்மையான அரசாட்சியை பற்றி அறிந்துகொள்ள திருஅவை அழைப்பு வருகிறது. நாம் வாழும் இன்றைய சமூகத்தில் அரசர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று தெரியாது. பல நேரங்களில் திரைப் படங்களைப் பார்த்துதான் அரசர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்று கற்பனை செய்து கொள்ளுகிறோம். திருத்தந்தை பதினோராம் பத்திநாதர் கிறிஸ்து அரசர் பெருவிழாவை திருவருகைக் காலத்துக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை கொண்டாட முதன் முதலில் அழைப்பு விடுத்தார். திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கமும் முடிவுமாக கிறிஸ்து அரசர் பெருவிழா அமைகின்றது. இதன் நோக்கம் என்னவென்றால் ஆண்டவர் இயேசு நம் அரசராக இறையாட்சியில் பங்குகொள்ள நமக்கெல்லாம் அழைப்பு விடுக்கிறார் என உணர்ந்து கொள்வதே.
இயேசுவின் இறையாட்சி என்றால் என்ன? இறைவனுடைய ஆட்சியிலே இணைந்திருப்பதுதான் இறையாட்சி. அதாவது இறைவனோடு இணைந்து அவரின் வார்த்தையின்படி நடப்பது தான் இறையாட்சி. இறையாட்சியின் மதிப்பீடுகளான அன்பு, நீதி, நேர்மை, மன்னிப்பு, சமத்துவம், உரிமை வாழ்வு போன்ற நற்பண்புகளை வாழ்வதுதான் உண்மையான இறையாட்சி. இயேசுவின் இறையாட்சிக்கும் இவ்வுலகம் சார்ந்த அரசாட்சிக்கு அதிக வேறுபாடு உண்டு. இயேசு தன்னுடைய ஆன்மீக அரசாட்சியில் அன்பை மையமாகக்கொண்டு ஆட்சி செய்தார். ஆனால் இவ்வுலகம் சார்ந்த அரசர்கள் அதிகாரம் என்ற ஒன்றை வைத்து மக்களை அடக்கி ஆண்டனர்.
இயேசுவின் ஆன்மீக அரசாட்சியில் நீதியும் நேர்மையும் இருந்தன. உண்மைக்கு சான்று பகர்வதே எனது பணி என்று கூறிய இயேசுவைப் போல நீதியோடும் நேர்மையோடும் வாழ நாமும் அழைக்கப்பட்டுள்ளோம். இவ்வுலகம் சார்ந்த அரசாட்சியில் நீதியும் நேர்மையும் உண்மையும் எட்டாக்கனியாக இருந்ததன. எனவேதான் பிலாத்து "உண்மையா அது என்ன? " என்று கேட்டான். ஆனால் இயேசுவின் அரசாட்சியில் நீதி நேர்மை உண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. அதுதான் உண்மையான நிலை வாழ்வுக்கு வழிகாட்டும்.
இயேசுவின் ஆன்மீக அரசாட்சியில் மன்னிப்பு இருந்தது. ஆனால் இவ்வுலகம் சார்ந்த அரசாட்சியில் மன்னிப்பை விட அதிகமாக தண்டனை இருந்தது. எனவே மனிதன் சிதைக்கப்பட்டான். சமத்துவமும் சகோதரத்துவமும் இறையாட்சி மதிப்பீடாக கருதப்படுகிறது. சாதி மதம் மொழி இனம் போன்ற பாகுபாடுகளைக் கடந்துதான் இயேசுவின் இறையாட்சி. இத்தகைய இறையாட்சி தான் இயேசுவை மெசியா என்று உளமார ஏற்றுக்கொள்ள அடிப்படையாக இருக்கின்றது. உலகம் சார்ந்த அரசாட்சி ஆளும் அரசனுக்குத் தான் மகிழ்ச்சியான வாழ்வை வழங்கியது. ஆனால்இயேசுவின் ஆன்மீக அரசாட்சியில் அனைவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.
எனவே இன்றைய நாளிலே இயேசுவின் அரசாட்சியில் இறையாட்சிப் பணியாளர்களாக இணைந்து உண்மை அன்பு நீதி நேர்மை சமத்துவம் சகோதரத்துவம் போன்ற நற்பண்புகளை நமது வாழ்வாக்க முயற்சி செய்வோம். அப்பொழுது இயேசுவின் அரசாட்சியில் அகமகிழ முடியும். இயேசுவின் இறையாட்சியில் இணையத் தயாரா?
இறைவேண்டல்:
என்றும் அரசராகிய இயேசுவே! உம்முடைய இறையாட்சியில் நாங்களும் கருவிகளாக பயன்பட உம் அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment