Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இறைவனின் நினைவூட்டல்களை ஏற்கத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection
ஆண்டின் பொதுக்காலம் 33 ஞாயிறு; I: தானி: 12: 1-3; II: திபா: 16: 5,8. 9-10. 11; III: எபி: 10: 11-14,18; IV: மாற்: 13: 24-32
அன்பு இறைமக்களே திருவருகைக் காலத்தை நாம் எதிர்கொள்ள இன்னும் இரு வாரங்களே இருக்கின்றன. அதற்கு நம்மையே தயாரிக்கும் விதமாகவே இந்நாட்களின் வாசகங்கள் நமக்குத் தரப்பட்டுள்ளன. ஆனால் வருடந்தோறும் வரும் திருவருகைக் காலத்திற்கான தயாரிப்பாக மட்டும் இதை எண்ணாமல் நாம் நினையாத நேரத்தில் நம் மனதின் கதவைத் தட்டி உள்வரக் காத்திருக்கும் நம் ஆண்டவரின் வருகைக்கு எப்போதுமே நம்மை தயாராகவும் தகுதியோடும் வைத்திருக்க வேண்டிய நல்லார்வத்தோடு இன்றைய நாள் வாசகங்களை நாம் ஆழமாக தியானித்து சிந்திக்க முயலுவோம்.
இன்றைய நாட்களில் பலதரப்பு மக்களிடமிருந்து பல தகவல்களை நாம் அறிந்து கொண்டிருக்கிறோம். விஞ்ஞானிகள் இயற்கையில் நடைபெறும் மாற்றங்களை அறிவியல் ரீதியாக விளக்குகிறார்கள். புவிவெப்பமடைதல், பனிப்பாறைகள் உருகுதல், அல்லது நோய்கள் உருவாகக் காரணமான நுண்ணுயிரிகள் போன்றவற்றைப் பற்றி ஆதாரப்பூர்வமான அறிவியல் காரணங்களை அவர்கள் விளக்குகிறார்கள். மறுபுறம் ஆன்மீகவாதிகள் நடைபெறும் அடையாளங்கள் அனைத்தும் உலக முடிவிற்கான அறிகுறிகள் என வேத நூல்களைக் காட்டி விளக்குகிறார்கள். எல்லாரும் சொல்வது நாம் உலக முடிவில் இருக்கிறோம் என்பதைத் தான். 2000ல் உலகம் அழிந்துவிடும், 2020 ல் அழிந்துவிடும் என நாம் பல நாட்களாகவே கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
இவற்றையெல்லாம் நாம் கேட்டுக்கொண்டே இருக்கிறோமே தவிர அச்செய்திகள் வெளிப்படுத்தும் உண்மையை உணர நாம் முற்பட்டிருக்கிறோமா ? இத்தகைய நிலைகளை மாற்ற முயற்சி எடுத்திருக்கிறோமா?
எவ்வளவு தான் புவிவெப்பமானாலும் இன்னும் வாகனங்கள் வாங்குவதையும் தொழிற்சாலைகள் அமைப்பதையும் நாம் குறைக்கவில்லை. விளைநிலங்களையும் காடுகளையும் மலைகளையும் அழிப்பதை நாம் நிறுத்தவில்லை. கொரோனா கட்டுப்பாடுகளை நம்மில் எத்தனைபேர் கண்டிப்புடன் கடைபிடித்திருக்கிறோம் என்றால் விடை கேள்விக்குறி.
அதேபோல நமது ஆன்மீக வாழ்விற்கான தேடலையும் நாம் துரிதப்படுத்தவில்லை. ஏனெனில் எல்லாவற்றையும் இலேசாக எடைபோட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம். நமது விருப்பம் போல பயணித்துக் கொண்டிருக்கிறோம் இவ்வுலகில். இன்று அப்பயணத்தை சற்று நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்து நம் பாதையை சரிசெய்ய நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் இறைவருகையின் போது ஏற்படும் அடையாளங்களைப் பற்றி நமக்குக் கூறுகிறது. அதிலும் குறிப்பாக நற்செய்தி வாசகமானது மானிடமகனின் வருகையின் போது ஏற்படும் இயற்கை மாற்றங்களைக் குறிப்பிடுகிறது. ஆனால் இவைகளை மட்டுமே கொண்டு நாம் மானிடமகனின் வருகையைத் தீர்மானிக்க முடியுமா என்றால் இல்லை. ஏனெனில் மானிடமகனின் வருகையைப் பற்றி தந்தை கடவுளுக்கு மட்டுமே தெரியும். அப்படியென்றால் இவ்வடையாளங்களெல்லாம் எதற்காக என்ற கேள்வி நம்மில் எழலாம். இவையெல்லாம் இவ்வுலக வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை நமக்கு உணர்த்தவே. நிலையற்ற இவ்வாழ்வில் மூழ்கி நிலையான மீட்பை நாம் இழந்துவிடக்கூடாது என நம்மை நினைவூட்டவே இவை அனைத்தும் நிகழ்கின்றன. நம்மையே நாம் தகுதிப்படுத்தவும் சீரமைக்கவும் நமக்குள் நாம் பயணிக்கும் போது நல்லவராக நம்மையே நாம் கண்டுணரவும் வேண்டும் என்பதற்காக நமக்கு இறைவனால் தரப்படும் நினைவூட்டல்களே உலகிலும் நம் வாழ்விலும் ஏற்படும் அத்தனை அடையாளங்களும். நம் மனக்கண்களைத் திறந்து இவ்வடையாளங்களை இறைவனின் நினைவூட்டல்கள் என உணர்ந்துகொண்டு நம் வாழ்வுப்பாதையை மாற்றுவதே மானிட மகனின் வருகைக்கு நம்மையே தயார் செய்யும் உன்னதமான செயலாகும்.
நம் பாவங்களுக்கெளெல்லாம் பலியாக கிறிஸ்து தம்மையே முதலும் முடிவுமாக பலிதந்துவிட்டார். நம் குற்றங்களெல்லாம் நம்மை விட்டு அகற்றப்பட்டுவிட்டன என இரண்டாம் வாசகம் கூறுகிறது. ஆம். கிறிஸ்து இயேசு நம் பாவங்களுக்குக் கழுவாயாக இறந்தார். அவர் பெற்றுத் தந்த அந்த தூய வாழ்வை நம்முடைய தொடர் மனமாற்றத்தால் நிலைப்படுத்தி, இறைவன் இயற்கை வழியாகவும் வாழ்வின் நிகழ்வுகள் வழியாகவும் தரும் நினைவூட்டல்களை மனதில் கொண்டு இறைவருகையை எதிர்கொள்ளத் தயாராவோம். மானிடமகன் நம் மீட்பர் இயேசு நம் கதவைத் தட்ட எப்போது வேண்டுமானாலும் வருவார். தாயாரா?
இறைவேண்டல்
அன்பு இறைவா! எமக்கு மீட்புத் தரக் காத்திருக்கும் உமது வருகையை எதிர்கொள்ள எப்போதுமே எம்மை நாங்கள் தயாராக வைத்திருக்க உதவி புரியும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment